-நஜீப் பின் கபூர்-
முதலாம் இடம் NPP
இரண்டாம் இடம் SJB
மூன்றாம் இடம் SLPP
நான்காம் இடம் TNA
ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் அரசு 2024க்கு சமர்ப்பித்துள்ள வரவு செலவு அறிக்கை நடைமுறையில் எந்தளவுக்கு வருகின்றதோ இல்லையோ என்ற விவகாரத்தில் நமக்குள்ள சந்தேகங்கள் நம்பிக்கையீனங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நிறையவே பேசி இருக்கின்றோம். அது எப்படிப்போனாலும் இது முற்றிலும் ஒரு தேர்தலுக்கான வரவு செலவு அறிக்கை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
ஆனால் முன் கூட்டி வருவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா என்ற விடயத்திலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அது எதுவாக இருந்தாலும் நாம் கடந்த வாரம் கட்டுரையில் வாசகர்களுக்கச் சொல்லி இருந்த படி எந்தத் தேர்தலாக இருந்தாலும் கட்சிகளின் பலம் பலயீனம் மற்றும் அவர்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாளிகள் பற்றி இந்தவாரம் பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன்னர் அமைச்சர் பதவி பறிப்புப் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.
ஜனாதிபதி ரணிலுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோசான் ரணசிங்ஹாவுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் நிறைவேற்று அதிகாரம் மிக்கவர் இதில் தனது வீட்டோ பலத்தை காட்டி போட்டியில் ஜெயித்திருக்கின்றார் என்பதனை விடவும், ஜனாதிபதி சகாக்களின் அழுத்தங்கள்தான் விளையாட்டுத்துறை அமைச்சரை கோதாவில் இருந்து தூக்கி வீசி இருக்கின்றது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மொன்போக்குடன் நடந்து கொள்வதில் அக்கரை காட்டினாலும் அவருடன் துணைக்கு இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் ஆளைத் தூக்கியே ஆகவேண்டும் என்ற நிலைபபாட்டில் கடுமையாக ஜனாதிபதிக்கு நச்சரிப்புக் கொடுத்த காரணத்தால் அமைச்சர் ரோசான் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஆள் தூக்கப்பட்டிருக்கின்றார்.
இந்தத் தீர்மானத்தை எடுக்கும் போது ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சை பறித்துவிட்டு அவர் வகித்த ஏனைய அமைச்சுப் பொறுப்புக்களை அவருக்கு கொடுப்போம் என்று தன்னுடன் இருக்கும் கடும்போக்காளார்களிடம் பேசியபோதும் அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத காரணத்தால் வேறுவழியின்றி அமைச்சரை ஜனாதிபதி தூக்கி இருக்கின்றார் என்று நமக்குக் கிடைத்த தகவல்களில் தெரிகின்றது.
அன்று காலை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் கொடிய பாம்பு என்று இவர் கடுமையாக சாடியது ஜனாதிபதி தீர்மானத்துக்கு உடன் காரணமாக இருந்திருக்கின்றது. இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் முதல் முறையாக கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினருக்கு எதிராக அர்ஜூன ரணதுங்ஹ தலைமையிலான இடைக்கால குழுவை நியமித்த போதும் அவரை இதே ஆட்கள் பதவியில் இருந்து துரத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
இது தொடர்பாக நமக்கு முன்பு கிடைத்த ஒரு தகவலையும் இங்கு சுட்டிக் காட்டுவது பொறுத்தமாக இருக்கும் என்பதால் இந்த செய்தி காலம் கடந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதனையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவது பொறுத்தமாக இருக்கும் என்பாதால் அந்த தகவலையும் இங்கு பதிகின்றோம்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தனக்குக் கட்டுப்படாமல் நடந்து கொள்வதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஒரு முடிவை எடுக்கும் முன்னர் பிரதமர் தினேஸ் குனவர்தன மற்றும் ஆளும் தரப்பு பிரதான கொரோடா பிரசன்ன ரணத்துங்ஹ ஆகியோரை தனது செயலகத்துக்கு அழைத்து ரோசான் விடயத்தில் தனது நிலைப்பாட்டை அவர் இந்த இருவருக்கும் விளக்கி இருக்கின்றார்.
அந்த நேரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி பறிப்புக் கடிதம் ஜனாதிபதி மேசையில் கையெப்பம் இடுவதற்குத் தயார் நிலையில் அங்கு இருந்திருக்கின்றது. ஆனால் பிரதமர் தினேசும் பிரசன்னவும் ஜனாதிபதியை அமைதிப்படுத்தி இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவை எடுப்பது அரசுக்கு ஆரோக்கியமாக இருக்காது. இந்த விவகாரத்தில் பொது மக்கள் உணர்வுகள் அமைச்சர் ரணசிங்ஹ பக்கமே இருக்கின்றது என்று சொல்லி அன்று இந்த பதவி பறிப்பை தடுத்திருக்கின்றார்கள்.
அப்போதும் இந்த அமைச்சர் பதவி பறிப்பு விவகாரத்தில் ஜனாதிபதிக்கு அவரது சகா சாகல ரத்தநாயக்க பெரும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருப்பதுடன் அவர் தனது உயிருக்கு ஏதாவது நடந்தால் ஜனாதிபதியும் அவர் சகா சாகலவுமே பொறுப்பு. எனது வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் வேண்டும் என்று முழு உலகிற்கும் கேட்க சொல்லி இருக்கின்றார் ரோசான்.
இதிலிருந்து ஆளும் தரப்பினர் தனக்கு பிடிக்காதவர்கள் கதையை முடித்துவிடும் ஒரு அபாயம்-காலாச்சாரம் இலங்கை அரசியலில் இருக்கின்றது என்ற செய்தி உலகிற்குச் சொல்லப் பட்டிருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி பறிப்பு ஜனாதிபதி ரணில் சகாக்களின் கட்டாயத்தின் பேரில் நடைபெற்ற விவகாரமாக இருந்தாலும், இந்த நடவடிக்கை ஜனாதிபதி ரணிலின் எஞ்சி இருக்கின்ற சிறு நம்பிக்கைக்குக் கூட இது பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது நமது கருத்தாக இருக்கின்றது.
இப்போது நமது தலைப்புக்கு வருவோம். பொதுத் தேர்தல்தான் முதலில் என்ற நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அது பற்றி முதலில் பார்ப்போம். மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி கோட்டா அவர் அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸாவும் பதவிகளை விட்டு ஓடிய கதை அனைவரும் அறிந்ததே. இந்தப் பின்னணியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி ரணிலின் துணையால் ஓடிப்போனவர்கள் அதிகாரம் மிக்க பதவிகளை இழந்தாலும் தமக்குள்ள அனைத்து சுகபோகங்களையும் இப்போதும் அனுபவித்துக் கொண்டு ஜனாதிபதி ரணிலையும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எமது வழக்கமான குற்றச்சாட்டு.
அன்று ஓடி ஒழித்துக் கொண்டிருந்தவர்கள் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ரணிலால் மொல்ல மொல்ல தமது அரசியல் செயல்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். இப்போது தேர்தல் வருகின்றது என்பதால் இவர்கள் தமது அரசியல் இருப்புக்காக-பிழைப்புக்காக தமது செயல்பாடுகளை முன்னெடுக்க நினைக்கின்றார்கள். ஆனால் இவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை களத்திலிருந்து ஓரம் கட்டிவிட்டுத்தான் நமது நகர்வுகளை முன்னெடுப்பார்கள்.
மக்கள் கோட்டாவை சொல்லாக் காசாகவும் அரசியல் கோமாளியாகவும்தான் இப்போது பார்க்கின்றார்கள். அதே வேலை நீதிமன்றம் ராஜபக்ஸாக்களை பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது. இதற்கிடையில் வரும் 15 ம் திகதி இவர்கள் நமது பிரமாண்டமான ஒரு கூட்டத்தை கொழும்பில் நடாத்தி நமது பலத்தை காட்சிப்படுத்த இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
ராஜபக்ஸாக்களுடன் அரசியலில் பிழைத்துக் கொண்டவர்கள் இந்த கூட்டதை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இருக்கின்றார்கள். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தின் இருக்கின்ற கணிசமான மொட்டுக் கட்சியினர் தமது அசியல் இருப்புத் தொடர்ப்பில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.
அவர்கள் ராஜபக்ஸாக்களுடன் அரசியல் செய்வது தமக்கு பாதுகாப்பாக இருக்காது என்றாலும் கடைசி நிமிடம் வரை ஆளும் தரப்பிலிருந்து விட்டுப்போவது என்று இருக்கின்றார்கள். இனவாதத்தை உசுப்பேற்றி அதிகாரத்தக்கு வந்த ராஜபக்ஸாக்கள் இந்த முறை எதை முன்வைத்து களத்துக்கு வருவது என்று தெரியாமல் இருக்கின்றார்கள்.
அத்துடன் இவர்களின் ஜனரஞ்சகத் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உடல் ரீதியில் பலயீனமாக இருப்பதும் இவர்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இந்த இடத்தை பசிலை வைத்து நிரப்பலாம் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசு நாமல் கூட அவர் மஹிந்தவின் மகன் என்பதனைத் தவிர வேறு எந்த தராதரங்களும் அவருக்கு கிடையாது.
செல்வாக்கான பெரிய கட்சிகள் இவர்களுடன் கூட்டணி போடுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. இந்த அரசியல் பின்னணியில் மொட்டுக் கட்சி மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை கணிசமாக இழந்திருக்கின்றது. மொட்டுக் கட்சி தற்போது தரவரிசையில் மிகவும் பின்தள்ளி இருக்கின்றது என்ற சமூக ஊடகங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அந்தளவு கருதவில்லை.
அடுத்து இன்று பிரதான எதிர்க் கட்சியாக இருக்கும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி பற்றிப் பார்ப்போம். பொதுத் தேர்தலில் அவர்களுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியாது. தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆசனங்களுக்கு சமனாகத்தான் இவர்கள் 2024 பொதுத் தேர்தலிலும் உறுப்பினர்களை வெற்றி கொள்ள இடமிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகளுடன் வழக்கமான தமது கூட்டணிகளுடன் இவர்கள் களத்துக்கு வருவார்கள்.
அத்துடன் தற்போது சஜித் தரப்பு ஒரு கூட்டணியின் கீழ்தான் களத்துக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இந்தப் புதிய கூட்டணி 2024 ஜனவாரியில் களத்துக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இதில் சு.கட்சி தயாசிரி ரோசான் ரணசிங்ஹ போன்றோர் இணைந்து கொள்ள அதிகவாய்ப்புக்கள் இருக்கின்றன. அத்துடன் டலஸ் தரப்பிலிருந்தும் பலர் இந்தக் கூடாரத்துக்குள் தனிநபர்களாகவோ கூட்டாகவோ இந்த கூட்டணிக்குள் நுழையலாம்.
ஆனால் இந்தக் கூட்டணியில் புதிதாக வந்து இணைந்து கொள்பவர்களினால் களத்தில் பெரும் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் ஆளும் தரப்பில் இருந்து மேலும் சிலர் இதில் இணைந்து கொள்ள இடமிருக்கின்றது. இவர்களுக்கு தொகுதிகளை வழங்குவதில் சஜித்துக்கு நெருக்கடிகளும் வரும். புதிய வரவுகள் பிரச்சாரத்துக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுக்கக் கூடும் அவ்வளவுதான். ஒருபோதும் இது மெகா கூட்டணியாக அமைய மாட்டாது.
அடுத்து இன்று பரவலாக பேசப்படும் அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே இந்த 2024 தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அவர்கள் மக்களை மிகவும் யதார்த்தபூர்வமான கருத்துக்களின் ஈர்த்து வருகின்றார்கள். அவர்கள் இந்த தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக அனைத்து வகையிலும் தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் இந்த வியூகம் உள்நாட்டில் மட்டுமல்ல எல்லை கடந்து சர்வதேச அளவிலும் வியாபித்திருக்கின்றது. அத்துடன் மிகச் சிறந்த பரப்புரை வியூகங்களையும் அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் மேடைகளை அதிரவைக்கும் மிகச் சிறந்த பேச்சாளர்கள் அவர்கள் அணியில் டசன் கணக்கில் இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ரஜபக்ஸக்கள் மற்றும் சஜித் அணி மிகவும் பலயீனமாக இருக்கின்றது.
வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் தரப்பினர் இந்தத் தேர்தலில் வழக்கம் போல தமது ஆசனங்களை வெற்றி கொள்வார்கள். என்ன விமர்சனங்கள் இருந்தாலும் அங்கு கூட்டணிதான் முன்னிணில் இருக்கும். இது தவிர வழக்கம் போல் இந்த நாட்டில் இருக்கின்ற பதிவு செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் கட்சிகள் பலவும் பொதுத் தேர்தல் களத்துக்கு வரும்.
அதிஸ்டவசமாக அல்லது பிராந்திய மட்டத்தில் அவர்களுக்கு அல்லது அந்த அணிக்கு இருக்கின்ற செல்வாக்கு தனி நபர் விருப்புக்கள் வெறுப்புக் காரணமாக சில தரப்பினர் ஒரிரு ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும். இந்த வரிசையில்தான் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இருக்கின்றது.
இதுவரை சுற்றி வளைத்து அரசியல் கட்சிகளின் பலம் பலயீனம் பற்றி நாம் சில தகவல்களைச் சொல்லி இருக்கின்றோம். இப்போது நேரடியாக 2024 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற ஆசனங்கள் பின்வருமாறு அமையும் என்பதனையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். வெற்றிக் கிண்ணம் அணுர தரப்பு அணிக்கு. இரண்டாம் இடம் சஜித் தலைமையிலான அணி அல்லது அவர்கள் கூட்டணிக்கு. மூன்றாம் இடம் ராஜபக்ஸாக்கள் தலைமையிலான மொட்டுக் கட்சிக்கு. இதனை இன்னும் ஆசனங்கள் வாரியாக நாம் குறிப்பிடுவதாக இருந்தால்…
பொதுத் தேர்தல் 2024
தேசிய மக்கள் சக்தி 095-105
ஐக்கிய மக்கள் சக்தி 051-056
ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சி 030-035
வடக்கு கிழக்கு தமிழ் தரப்பு 015-017
இதர தரப்பினர் 010-012
என்ற வகையில் அமைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதே போன்று ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் களத்திலுள்ள அரசியல் செய்பாடுகள் மற்றும் மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் படி சமகாலத்தில் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமையும் என்பது நமது கணக்கு.!
ஜனாதிபதி தேர்தல் 2024
1.அணுரகுமார 49 சதவீதம்
2.சஜித் பிரேமதாச 31 சதவீதம்
3.மொட்டு வேட்பாளர் 15 சதவீதம்
4. இதர வேட்பாளர்கள் 05சதவீதம்
மொத்தம் 100 சதவீதம்
(முன் கூட்டி நடக்கின்ற தேர்தலைப் பொறுத்து அடுத்து வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது. அத்துடன் தேர்தல் நெருக்கமாக வருகின்ற நேரங்களில் களநிலவரத்தை பொறுத்து மாற்றங்களுக்கு நிறையவே இடமிருக்கின்றது. இது சமகால-இன்றைய நிலவரம் மட்டுமே)
நன்றி: 03.12.2023 ஞாயிறு தினக்குரல்