2 இலங்கையர்கள் அமெரிக்கா நுழைய தடை!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரண்டு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி ஃப்ளிங்கனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தடையுத்தரவு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக் கூறலை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 நபர்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், அதில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

2008 – 2009 காலப் பகுதிக்குள் திருகோணமலையில் 11 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், குறைந்தது 8 பேரின் சுதந்திர உரிமையை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 தமிழ் கிராமவாசிகளை சட்டத்திற்கு புறம்பான முறையில் படுகொலை செய்து, மனித உரிமையை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை ராணுவத்தின் முன்னாள் பதவிநிலை சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த இரண்டு இலங்கையர்களின் பெயரிடலானது, இலங்கையின் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு உதவி செய்வதற்காக தாம் மேற்கொள்ளும் ஒரேயொரு நடவடிக்கை அல்லவென அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையர்களை தவிர, உகாண்டா, சீனா, பெலாரூஸ், வங்கதேசம், மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை பெற்றவர் முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரே, ராணுவ அதிகாரி விடுவிக்கப்பட்டார். யுத்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த சேவை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. இவ்வாறு கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் சிறு குழந்தைகளும் அடங்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

யுத்தக் காலத்தில் கைவிடப்பட்ட தமது வீடுகளை பார்வையிடுவதற்கு ராணுவத்தின் அனுமதியுடன் சென்ற பொதுமக்கள் மீள திரும்பவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது, காயங்களுடன் தப்பியோடிய பொன்னுதுரை மகேஷ்வரன் என்ற நபர் வழங்கிய தகவல்களின் பிரகாரம், உயிரிழந்தவர்களில் சடலங்களை போலீஸார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 14 ராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை போலீஸார் மற்றும் ராணுவ போலீஸார் முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன், சட்ட மாஅதிபரினால் ஐந்து பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் கொழும்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றமொன்று நிறுவப்பட்டதுடன், அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி விசாரணைகளை நடத்திய நீதிபதிகளினால் சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஏனைய நான்கு ராணுவத்தினரும் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த நிலையில், யாழ்ப்பாணம்-மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட நிலையிலேயே, அமெரிக்கா தற்போது தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அவருக்கு தடை விதித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கில் மாணவர்கள் உள்ளடங்களாக 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றிய சந்தன ஹெட்டியாராட்ச்சி கைது செய்யப்பட்டதுடன், பின்னரான காலத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Previous Story

குழந்தைகளை பிரிக்க இன்று அறுவை சிகிச்சை

Next Story

விராட் கோலியைக் காணவில்லை!!