மொட்டுக் கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பது போலவும் பெரும்பாலானவர்கள் ரணிலை ஆதரிப்பது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருப்பதில் மிகப் பெரும் நாடகமொன்று அரங்கேரிக் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம் அணுராதபுரம், எஸ்.எம்.சந்திரசேன நடத்திய கூட்டத்தில் ரணிலுக்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துங்கள் என்று அவர் கேட்க ஒட்டு மொத்தமாக அனைவரும் கைகளைத் தூக்கினார்கள். அதன் பின்னர் மொட்டு தனியாக களமிறங்க வேண்டும் என்போர் கை தூக்குங்கள் என்ற போது ஒருவர் கூட அங்கு கையை உயர்த்தவில்லை.
இது சந்திர சேன கூட்டிய கூட்டம். அங்கு வந்திருந்தவர்கள் அவர் தலைமையை அங்கிகரிக்கின்றவர்கள். அப்படியானால் எப்படி இப்படி நடக்க முடியும். என்ற எமது சந்தேகங்களுக்கு மத்தியில் மொட்டு வேட்பாளர் பற்றி உதயங்க கதையையும் பாருங்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ச சிறந்ததொரு தலைவராவார்.
ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.
அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ச ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம். நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ச தான் பிரதமராக பதவியேற்பார். ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன. அவரால் தொடர்ந்தும் ராஜபக்சவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”என அவர் தெரிவித்துள்ளார்.