இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தோனேசியா சுமார் 11 முறை குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. உள்ளூர் மக்கள் சிலர் இந்த பாதிப்புகள் குறித்து கூறியிருக்கின்றனர். டெர்னேட் நகரவாசியான 42 வயது புடி நூர்கியன்டோ, “நில நிலநடுக்கம் மிக பலமாக இருந்தது.
சுவர்கள் ஆடும் சத்தம் கேட்டு முதலில் உணர்ந்தேன். வெளியே வந்தபோது, மக்கள் பீதியுடன் குழுமியிருந்தனர். ஒரு நிமிடத்திற்கும் மேலான அதிர்வில், குளித்துக் கொண்டிருந்த சிலரும் வீட்டைவிட்டு வெளியேறினர்,” என்று கூறியிருந்தார்.
தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய BMKG தலைவர் தேகூ பைசல் பதானி, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 11 பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுள் மிகப்பெரியது 5.5 ரிக்டர் அளவுகொண்டது என்றும் தெரிவித்தார்.

சுமார் 4,50,000 மக்கள் வாழும் மனாடோவில், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து AFP செய்தியாளர் கூறுகையில், “நிலநடுக்க அதிர்வு என்னை போலவே மக்கள் பலரையும் தூக்கத்திலிருந்து எழுப்பியது.
கட்டிடங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் முதலில் அவசரமாக வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நாங்கள் அனைவரும் வெளியேறினோம். நீண்ட நேரம் நீடித்த இந்த அதிர்வில், பெரிய சேதங்கள் ஏதும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முன்னதாக, இந்தோனேசியாவின் சில பகுதிகளில் ஒரு மீட்டர் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்றும், பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான், தைவான், குவாம், பலாவ் கடலோரப் பகுதிகளில் சிறிய அலைகள் இருக்கலாம் என்றும் எச்சரித்தது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம், வடக்கு ஹொக்கைடோ முதல் தெற்கு ஒகினாவா வரையிலான பசிபிக் கடற்கரைகளில் லேசான கடல்மட்ட மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்தாலும், எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசிய நிலநடுக்க மையங்களும் சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடவில்லை.
பசிபிக் நெருப்பு வளையம் (Ring of Fire) எனப்படும் தீவிர நில அதிர்வு மண்டலத்தில் இந்தோனேசியா அமைந்திருப்பதால், அண்டை நாடுகளுடன் சேர்ந்து இது அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கிறது.
ஜப்பான் முதல் தென்கிழக்கு ஆசியா வழியாக பசிபிக் முழுவதும் டெக்டோனிக் தட்டுகள் மோதும் இப் பகுதி அதிக நில அதிர்வு கொண்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டில், ஆச்சே மாகாணத்தைத் தாக்கிய 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சுனாமியை ஏற்படுத்தி, இந்தோனேசியாவில் 1,70,000 க்கும் அதிகமானோரை பலிகொண்டது குறிப்பிடத்தக்கது.




