கண்டி-உடதலவின்ன மடிகே வைத்தியசாலை தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வைத்தியசாலையைத் தொடர்ந்தும் அந்த இடத்தில் முன்னெடுத்துச் செல்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. சுமார் 10000 பேர்வரை இந்த வைத்தியசாலையால் பயன் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சும் அதிகாரிகளும் இந்த வைத்தியசாலையை இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி வரும் என்று சுட்டிக் காட்டி இருந்தனர். பிரதேச மக்களுக்கு அதிகாரிகள் முன்வைத்த எச்சரிக்கைளைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு தற்போது முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகப் பல மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்றும் கணிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது.
தேவையான நிதி தற்போது பிரதேச மக்களிடம் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உடதலவின்ன மடிகே பைத்துல் சக்காத் நிறுவனத்தினர் ஐந்து இலட்சம் ரூபாய் (500000) பெறுமதியான காசோலையை முன்னாள் வங்கியாளரான N.P.M உவைஸ் அவர்களிடம் இன்று 13.03.2023 திகதி பைத்துல் சக்காத் நிறுவனத்தில் வைத்துக் கையளித்தனர்.
இந்த காசோலையை சக்காத் நிறுவனத்தின் செயலாளரும் முன்னாள் அதிபரும் ஆசிரிய அலோசகருமான U.L.M.பசீர் கையளிக்கும் போது அமைப்பின் நிருவாகிகளான முன்னாள் வங்கியாளர் M.A.R.அன்வர் மற்றும் முன்னாள் ஆசிரியர் A.L.M.இக்பால் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.