மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டும் அந்த பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படாது என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையே அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பாதையில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் தற்காலிகமாக தடைபட்டு நின்றன.
இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தாமதமடைந்து எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்கா பதற்றம் இந்த சூழலில், இந்தியக் கொடியுடன் இயங்கும் பல கப்பல்களும் அந்தப் பகுதியில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்திய தேசியக் கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களில் 24 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் மற்றும் 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனிடையே, கிழக்குப் பகுதியில் இருந்த 4 இந்திய கப்பல்களில் ஒன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றது.
ஹோர்முஸ் நீரிணை
அந்தக் கப்பல் ஆப்பிரிக்காவிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கியிருந்த இந்திய கப்பல்களில் MT Shivalik மற்றும் MT Nanda Devi என்ற இரண்டு எல்பிஜி கப்பல்கள் சனிக்கிழமை காலை பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றன.
இதில் சுமார் 92,700 டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற ஷிவாலிக் கப்பல் குஜராத்தின் Mundra Port துறைமுகத்தை மார்ச் 16-ஆம் தேதி சென்றடையும் என்றும், நந்தா தேவி கப்பல் Kandla Port துறைமுகத்தை மார்ச் 17-ஆம் தேதி வந்தடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கப்பல்கள்
இன்னும் மேற்குப் பகுதியில் 6 எல்பிஜி கப்பல்கள், ஒரு எல்என்ஜி கப்பல், ஒரு ரசாயன கப்பல், 4 கச்சா எண்ணெய் கப்பல்கள், 3 கன்டெய்னர் கப்பல்கள், 2 சரக்குக் கப்பல்கள் மற்றும் பராமரிப்பில் இருக்கும் 3 கப்பல்கள் உள்ளிட்ட மொத்தம் 22 கப்பல்கள் சிக்கியுள்ளன.
இவற்றில் 611 மாலுமிகள் உள்ளனர். அதேபோல் கிழக்குப் பகுதியில் 76 மாலுமிகளுடன் 3 கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன. இந்த கப்பல்களை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஹோர்முஸ் போக்குவரத்து உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தை கையாளும் முக்கிய கடல் பாதையாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும்பகுதி இந்த நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது.

எனவே இந்த பாதையில் ஏற்படும் எந்தவொரு தடையும் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்பாஸ் அராக்சி இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக மூடப்படவில்லை என்று அப்பாஸ் அராக்சி விளக்கம் அளித்தார். “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே இந்த பாதையில் செல்ல அனுமதி இல்லை.
மற்ற நாடுகளின் கப்பல்கள் தொடர்ந்து இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றன” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் சில கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களால் மாற்று கடல் பாதைகளைத் தேர்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொஜ்தபா கமேனி
இருப்பினும் ஹோர்முஸ் நீரிணை வழியாக பல எண்ணெய் டேங்கர் கப்பல்களும் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் ஈரானின் உச்ச தலைவர் காயமடைந்ததாக அமெரிக்க தரப்பில் வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாகவும் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.




