-நஜீப் பின் கபூர்-
சம்பிரதாய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வருகின்றதா என்ற எமது கேள்விகளுக்கு விடை தேடும் முன்னர் இலங்கையின் அரசியல் கட்சிகள் மீது ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கை 1948ல் சுதந்திரம் அடையும் போதே இங்கு அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 1935ம் ஆண்டுகளில் இலங்கை சமசமாஜக் கட்சி துவங்கப்பட்டது. நாட்டில் ஆரம்பமான முதல் அரசியல் இயக்கமாக இது வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது. கட்சியின் முதல் செயலாளர் நாயகமாக லெஸ்லி குனவர்தன கடமை பார்த்திருக்கின்றார்.
இந்த அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவர் கலாநிதி கொல்வின் ஆர்டி சில்வா அத்துடன் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா மற்றும் பிலிப் குனவர்தன, ரொபர்ட் குனவர்தன என்போர் இதில் இருந்திருக்கின்றனர். மற்றும் அதாவுட செனவிரத்ன மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோரும் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள். பின்னர் வாசு நவ சமசமாஜக் கட்சி என்ற ஒன்றைத் துவங்கி தாய்க்; கட்சியிலிருந்து வெளியேறினார்.
ஸ்ரீ மா அம்மையார் காலத்தில் உருவாக்கப்பட்ட 1972- குடியரசு அரசியல் யாப்பை வடிவமைத்தவர் இந்தக் கொல்வின் ஆர்டி சில்வாதான்.
அதன் பின்னர் இலங்கை கம்யூனிசக் கட்சி 1943ல் துக்கப்பட்டது. இதன் ஸ்தாபகர் எஸ்.ஏ. விக்கிரமசிங்ஹ, பீட்டர் கெனமன், சரத் முத்தெட்டுவே கம போன்றவர்களும் இந்த அரசியல் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவை இரண்டும் இடதுசாரி கொள்கையுடையவை. அதன் பின்னர் வலது அரசியல் இயக்கமான ஐக்கிய தேசியக் கட்சியை 1945ல் டீ.எஸ் சேநாநாயக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின் மகன் டட்லி சேனாநாயக்க கட்சித் தலைவரானார்.
இந்தக் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக எஸ்.டப்பியூ.ஆர்.டி பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச போன்றவர்கள் கட்சித் தலைவர்களாகவும் ஆட்சித் தலைவர்களாகவும் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். தற்போது அதிகாரம் மிக்க பதவியில் ஜனாதிபதியாக இருக்கும் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவரே. இவரே மிக நெடுங்காலமாக இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்கி வருபவரும் கூட.!
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் துவங்கினார். இவருடன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பெரும் எண்ணிக்கையானோர் அன்று வெளியேறி அந்தக் காலப் பகுதியில் நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணினார்கள். அதன் தாக்கம் இன்றும் நாட்டில் பேரின சமூகத்தில் காணப்படுகின்றது. 1959ல் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவி ஸ்ரீமா பண்டாரநாயக்க கட்சித் தலைவரானார். இந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே ஏழு தசாப்தங்கள் வரை இந்த நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களாக மேற் சொன்னவர்களைத் தவிர பண்டாரநாயக்காவின் புதல்வி சந்திரிக்க பண்டாரநாயக்காவும் ஆளுமை மிக்க ஓர் தலைவராக ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கின்றார். இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து வருகின்றார்.
அடுத்து இலங்கை அரசியலில் ஒர் செல்வாக்கு மிக்க கட்சியாக ராஜபக்ஸாக்களினால் துவக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் குறிப்பிடலாம். மைத்திரி சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய கோபத்தில்தான் ராஜபக்ஸாக்கள் இந்த அரசியல் இயக்கத்தை துவங்கி அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் மைத்திரிக்கும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் நோக்கிலே இந்த அரசியல் இயக்கத்தை ராஜபக்ஸாக்கள் ஆரம்பித்தார்கள் என்பது எமது கருத்து. கட்சி துவங்கி குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் அவர்கள் தமது இலக்கையும் எட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் கட்சி 2016ல் நல்லாட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது. அப்போது ரணிலும் மைத்திரியும் ஓரணியில் நல்லாட்சி செய்து கொண்டிருந்த நாட்கள் அவை. அதன் பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த மொட்டு அணி தன்னை ஒரு பலம் மிக்க சக்தியாக வளர்த்தக் கொண்டது. இதன் பின்னணியில் கோட்பாதராக இன்றுவரை இருந்து இயக்கிக் கொண்டிருப்பவர் பசில் ராஜபக்ஸா என்றால் மிகையாகாது. அதே நேரம் ஆளும் நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்குமிடையே முறுகல் தோன்றி நெருக்கடிகள்வர மைத்திரி யாரை எதிர்த்து களத்தில் இறங்கினாரோ அவர்கள் காலடியிலே பின்னர் சரணடைந்தார்.
இதனால் ராஜபக்ஸாக்களின் செல்வாக்கும் இமேஜூம் உச்சம் தொட்டது என்று சொல்ல முடியும். இந்த நாட்டில் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதி ஆசனத்தில் அமர முடியாது என்ற நியதி இருப்பதால் மஹிந்த ராஜபக்ஸாhக்களின் மொட்டுக் கட்சி தமது சகோதரன் கோட்டாபே ராஜபக்ஸாவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கி நாட்டில் இனவாதத்தை பேரின மக்கள் மத்தியில் விசமாக ஊட்டி தனிப் பெரும் சிங்கள வாக்குகளினால் 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றி இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கியும் அடக்கியும் தமது அதிகாரத்தை செய்து கொண்டு சென்றனர்.
இந்த வஞ்சகமும் வக்கிரமும் நிறைத்த பயணத்தை அவர்களினால் நெடுந்தூரம் தொடர முடியவில்லை. யாரெல்லாம் இவர்களை அதிகாரம் மிக்க பதவிக்கு அமர்தினார்களோ அதே பேரின சமூகம் இவர்களை பெரும் ஏமாற்றுக்காரர்கள் வஞ்சனையாளர்கள் கொலைகாரர்கள் என்று சொல்லி இரண்டே இரண்டு வருடங்களில் துரத்தி அடித்தனர். நாட்டில் இருக்க முடியாத நிலையில் மாலைதீவு சிங்கப்பூர் தயிலாந்து என்று ஓடி ஒழித்துக் கொண்டிருந்தவர்கள் ரணிலை அதிகரம் மிக்க கதிரையில் அமர்த்தி இன்றும் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.இதனால் பொதுமக்கள் அவர்கள் மீது பெரும் கோபத்தில் இருக்கின்றார்கள். இதே ஆட்கள் மீது இன்று பெரும் பெருளாதாரக் குற்றவாளிகள் என்று உச்ச நீதி மன்றமே தீர்ப்பும் சொல்லி இருக்கின்றது.
இந்த அரசியல் பின்னணியில் மேலும் இரு அரசியல் இயக்கங்கள் பற்றி பேச வேண்டி இருக்கின்றது. ஒன்று 1965களில் துவங்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி. இதன் ஸ்தாபக் தலைவர் தெற்கு தங்கல்லையைச் சேர்ந்த ரோஹன விஜேவீர. இடதுசாரிகளான இவர்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஸ்ரீ மா அம்மையார் காலத்தில் 1971ல் அதிகாரத்தை கைப்பற்ற முனைத்து தோல்வி கண்டனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் தமது பல்லாயிரக் கணக்கான இயக்க உறுப்பினர்களை இழந்தனர். இதனால் அவர்களது அரசியல் இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 1988-1990களில் இவர்கள் மீண்டும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து அதிலும் தோல்வியைத் தழுவியதுடன் செல்வாக்கு மிக்க தமது அரசியல் தலைவர்கள் அணைவரையும் இழந்ததுடன் தமது தொண்டர்களையும் இந்த போராட்டத்திலும் பல்லாயிரக் கணக்கில் இழந்தனர்.
இன்று இந்த அரசியல் இயக்கம் ஜனாநாயக வழியில் தமது கவர்ச்சிகரமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் செல்வாக்கு மிக்க தலைவராக அனைராலும் அறியப்பட்ட அணுகுமார திசாநாயக்க இருந்து வருகின்றார். தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அவர்கள் தற்போது அரசியல் நகர்வுகளை மிகவும் வெற்றிகராமாக முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனாலும் கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சிக்கு-அணுராவுக்கு நாழு இலட்சத்தி இருபதாயிரம் (420000) வரையிலான வாக்குகளையே பெற முடிந்தது. அதன் பின்னர் 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்கள் நாற்பத்தி நான்கு ஆயிரம் (440000) வரை வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் இவர்களுக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள்.
ரணிலுடன் தொடர்ந்தும் அரசியல் செய்ய முடியாது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த அந்தக் கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிமேதாசவின் மகன் சஜித் தனது தலைமையிலான அணியினர் 2020ல் தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார்கள். இதன் ஸ்தாபத்; தலைவர் சஜித் பிரேமதாச. 2020 ஜனாதிபதி தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச ஐம்பத்தி ஐந்து இலட்சத்தி அறுபது ஆயிரம் (5560000) வரை வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி (ஐமச) தனது கூட்டணிகளுடன் இணைந்து இருபத்தி ஏழு இலட்சத்தி (2770000) வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இதிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பெற்றுக் கொண்ட வாக்குகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகள் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் என்பது தெளிவு. அந்த அணியில் பல குழறுபடிகளும் கேள்விகளும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பின்னணியில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் நடக்கும் என்று ஜனாதிபதி ரணில் பல இடங்களில் சொல்லி வருகின்றார். நாம் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்ற நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தல் வருகின்றது. முதலில் வருவது பொதுத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
இப்போது இலங்கை அரசியலில் சம்பிரதாய அரசியல் கட்சிகளுக்கு முற்றுப் புள்ளியா என்ற நமது கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம். துவக்கத்தில் இலங்கை அரசியலில் பெரும் தாக்கங்களைச் செலுத்திக் கொண்டிருந்த நாம் குறிப்பிட்டிருந்த இடதுசாரி அரசியல் கட்சிகள் கடும் போக்கு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) அரசியல் வரவு-பிரவேசத்தால் இன்று காணாமல் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவை இன்று காட்சிப் பொருள் என்ற அளவில் வந்து நிற்கிகன்றது. பெரும்பாலும் இந்தக் கட்சிகள் தேசிய பட்டியலில் ஓரிரு ஆசனங்களை கெஞ்சிக் கெதறிப் பெற்றுக் கொள்கின்றன. இதனால்தான் திஸ்ஸ விதாரன, டியு குனசேக்கர போன்றவர்களை நாடாளுமன்றத்தில் பார்க்க முடிந்தது.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் சம்பிரதாய இடதுசாரிகளைப் போல் காட்சிப் பொருட்கள் என்ற நிலைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐதேக காணாமல் போய் விட்டது. 2016ல் துவக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவின் நிலையும் குறுகிய காலத்துக்குள்ளேயே வாழ்வுக்காக போராடுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் முன்கூட்டி வருகின்ற தேர்தல் எதுவானாலும் அது இதுவரை நாட்டில் பெரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிரதான அரசியல் கட்சிகளின் வாழ்வுக்கு சாவுக்கும் இடையிரலான தீர்க்கமான போராட்டமாக அமையும் என்பது உறுதி. ஜனாதிபதி ரணில் 2024 வரவு செலவு அறிக்கையில் சொல்லி இருந்தவாறு இன்னும் திறை சேரிக்கு பணம் வரவில்லை- வசூலாகவில்லை, அதனால் இப்போதைக்கு தேர்தலை நடத்த முடியாது என்று அதிகாரிகளை வைத்து சொன்னாலும் நாட்டு மக்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை. இதே போன்று கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பின் போதும் தேர்தலுக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க முடியாது தேவையான காகிதாதிகளை அச்சடிக்க பணம் இல்லை என்று தனது ஆட்களை வைத்து இந்த சுற்றிலும் சொல்ல வைப்பாரே என்ற அச்சம் நமக்கு இருக்கின்றது.
இது சம்பிரதாய மற்றும் வாரிசு அரசியல்வாதிகளின் தீர்க்கமான சுற்றாக இருப்பதால், அவர்கள் தேர்தலை மக்களுக்கு தட்டில் வைத்து தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அனைத்துக் கருத்துக் கணிப்புக்களின் படி பிரதான போட்டியாளர்கள் அணுராவும் சஜித்தும்தான் என்று அனைத்துத் தரப்பினராலும் இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நாட்டில் இருக்கின்ற சில்லரை மற்றும் சிறுபான்மைக் கட்சிகளும் தமது வாழ்வுக்காக புதிய வழிகளை இந்தத் தேர்தலில கண்டறிய வேண்டி வரும். ஆனாலும் பொதுத் தேர்தல் என்று வந்தால் வியபாரத்துக்கு வரும் சிறுபான்மைக் கட்சிகள் நிச்சயமாக சஜித் அணியில் தான் வருவார்கள். வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்தும் ரயில் தண்டவாலத்தில் பயணிப்பது போல ஓடிக் கொண்டிருக்கும் அதில் பெரும் மாற்றங்கள் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபத் தேர்தல் முன் கூட்டி என்றால் சிறுபான்மை கட்சிகள் சற்று அடக்கி வாசிக்கும் அல்லது மதில் மேல் பூனையின் நிலையிதான் இந்த அரசியல் சுற்றில் இருக்க வேண்டி வரும்.