-நஜீப் பின் கபூர்-
மனித வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்கின்ற போது கயிற்றில் நடப்பது போன்ற ஒரு நிலையும் வருவதுண்டு. அப்படியான ஒரு கட்டத்தில்தான் தற்போது ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் தீர்க்கமான விடயங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்ற போது ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸாக்களுடன் குறிப்பாக மஹிந்த மற்றும் பசில் ஆகியோருடன் பேசிவிட்டு அவர்களின் ஒப்புதலுடன்தான் முடிவுளை எடுக்கின்றார். இதுதான் இன்றைய அரசியல். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ராஜபக்ஸாக்கள் தொட்டிலையும் ஆட்டிக் பிள்ளையையும் கிள்ளி விட்டுத்தான் நெருக்கடி நிலமைகளைச் சமாளித்து வருகின்றார்கள். இந்த ஆட்டுதலும் கிள்ளுதலும் விடயங்களை தெளிவாகச் சொல்வதாக இருந்தால் கதை இதுதான்.
மொட்டுக் கட்சி பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில் அரசு கவிழும். அதனால் பெரும் நெருக்கடிகளுக்கும் ஆபத்துக்களுக்கு இலக்காகப் போவது ராஜபக்ஸாக்கள். அடுத்தவர் ஜனாதிபதி ரணில். எனவே ஆளும் தரப்பில் உள்ள பெரும்பான்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்கள் இருவருக்குமே இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதிலே ரணில் ராஜபக்ஸ பாதுகாப்பும் அரசியல் இருப்பும் பிழைப்பும் வாழ்வும் தங்கி இருக்கின்றது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் தனக்கு அதிஸ்டவசமாக கிடைத்த இந்த ஜனாதிபதி பதவியை இன்னும் சில காலத்துக்கு அனுபவிப்பதாக இருந்தால் ரணில் மொட்டுக் கட்சி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
ரணில் ராஜபக்ஸாக்களில் அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாக வைத்தே இன்று அரசியலில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது நமது கருத்து. இதனால் புதிதாக அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ராஜபக்ஸாக்கள் பச்சோந்தி வேடம் பூண்டு வருகின்றார்கள். தமக்கு நெருக்கமானவர்களுக்கு அமைச்சுக் கொடுக்கப் பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது போல் காட்டிக் கொள்வது. அப்படி அமைச்சுக்களை சிலருக்கு மட்டும் கொடுக்கின்ற போது ஏனையோர் அரசிலிருந்து வெளியேரும் ஆபத்தும் இருக்கின்றது. இதனால்தான் ராஜபக்ஸாக்கள் அமைச்சு நியமன விவகாரத்தில் ஆட்டிக் கொண்டும் கில்லிக் கொண்டும் காய் நகர்த்தி வருகின்றார்கள். மொட்டுக் கட்சியில் இருக்கின்ற அனைவரும் போல அமைச்சுக்களை எதிர்பார்க்கின்றார்கள். சஜித் அணியில் இருக்கின்ற பலரும் அங்கிருந்த வெளியேறி ஆளும் தரப்பில் இணைவது சிலரது நிலைப்பாடு.
அடுத்து ஜனாதிபதி தனது அதிகாரத்தை முடியுமான மட்டும் பாவிப்பதாக இருந்தால் இந்த அசை;சுக்கள் வழங்கும் விவகாரத்தை இழுத்தடிக்க வேண்டும். அதனால்தான் அமைச்சு வழங்குகின்ற விவகாரத்தை ரணிலும் ராஜபக்ஸாக்களும் சேர்ந்துதான் கானலாக அதனை வைத்திருக்கின்றார்கள்-காட்டுகின்றார்கள். இந்த ரணில்-ராஜபக்ஸ தந்திரத்தை அனேகமானவர்கள் புரிந்து கொள்வது கஸ்டமாக இருக்கும். எனவேதான் தேர்தல் பற்றியும் அமைச்சுக்கள் வழங்குவது பற்றி பல இடங்களில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அகேமான ஊடகங்களும் அப்படித்தான் செய்திகளைச் சொல்லி வருகின்றது. இப்படி என்ன தில்லுமுள்ளுகளையாவது செய்து முடியுமான மட்டும் அதிகாரத்தில் இருப்பதுதான் இன்று இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இப்படித் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் முடியும் மட்டும் போவோம் என்று அவர்கள் பயணத்தைத் தொடர்கின்றார்கள்.
அதிகாரத்தில் இருப்போருக்கு இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையான போர்க்களமாக இருக்கின்றது. எனவேதான் அமைச்சு வேண்டுமா நாடாளுமன்றத்தை களைக்கவா என்ற தோணியில் ஜனாதிபதி ரணில் அமைச்சுக் கேட்போரை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி தேர்தலுக்கு போவதாக இருந்தால் தமக்கு மிகப் பெரிய நெருக்கடியும் ஆபத்தக்கள் இருக்கின்றது என்பதனை மொட்டுக் கட்சி அரசியல் வாதிகளுக்கும் தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் பின்னணியில் அமைச்சுக்களைக் கொடுக்கின்ற போது மீசையா கூலா என்று இவர்களுக்கும் ஒரு முறை சிந்திக்க வைக்கின்றது. எனவேதான் அரசியல் ரீதியாக வாழப் போகின்றீர்களா? சாகப் போகின்றீர்களா? என்று மொட்டுக் கட்சியினரிடத்தில் அடிக்கடி ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றார் ஜனாதிபதி ரணில். இதனால் ராஜபக்ஸாக்கள் இருதலைக் கொல்லியாக நிற்க்கின்றார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பிரேரனையை எதிர்த்துத்தான் வாக்களிப்பது என்று பெரும்பாலான ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பேசி வந்தனர். ஆனால் வாக்களிப்பின் போது அவர்கள் அனைவரும் பிரேரனைக்கு ஆதரவாக வாக்ளித்தனர். இது பற்றி தேடிப் பார்த்த போது, மஹிந்த ராஜபக்ஸா ஜனக்க எங்களுடைய ஆள்தான் ஆனாலும் இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. என விஷேடமாக கேட்டுக் கொண்டதல்தான் நாம் இந்தப் பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி வந்தது என்று ஆளும் தரப்பினர் தற்போது கூறிவருகின்றார்கள். எனவே நாம் மேற்சொன்ன தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளும் கதைக்கு இந்த சம்பவம் வலு சேர்க்கின்றது என்பதனை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இப்படி ரணிலுடன் சேர்ந்து தொடர்ந்தும் அரசியல் பயணம் மேற்கொள்ள முடியாது என்று ஆளும் தரப்பிலுள்ள பலரும் தற்போது அரசிலிருந்து வெளியேறி எதிரணியில் இணைய முடிவெடுத்து இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. சஜித் தலைமைத்துவத்திலும் ஆளுமையிலும் அவர்களுக்கு நம்பகத் தன்மையில்லாவிட்டாலும் வேறு வழியின்றித்தான் அவர்கள் இப்படி ஒரு தீர்மானத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அப்படி வருகின்ற போது தமக்குக் கிடைக்கும் தொகுதி அமைப்பாளர்கள் பதவி, அது எந்தத் தொகுதி என்ற விடயங்களில் சில இணக்கப்பாடுகளும் பல இடங்களில் தீர்மானம் இல்லாத ஒரு நிலையும் இதில் காணப்படுகின்றது. இதற்கிடையில் டலஸ்-ஜீ.எல். தலைமையிலான அணி சஜித் அணியுடன் கூட்டணி என்ற நிலைக்கு செல்லவது பற்றியும் பேசுகின்றது. அதே நேரம் விமல், கம்மன்பில போன்றவர்கள் இந்த சஜீத்துடனான இணைப்பில் திருப்தி இல்லாத நிலையும் இருந்து வருகின்றது. அவர்கள் ராஜபக்ஸாக்களுடன் ஒட்டிக் கொள்ள முனைவதாகவும், அதில் கௌரப் பிரச்சினைதான் அவர்களுக்கு மொட்டு அணியில் மீண்டு இணைவதில் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது.
ஜனாதிபதிக்கு கொடுக்கப்படுகின்ற நெருக்கடிகளும் தொந்தரவுகளும் தனிப்பட்ட ரீதியில் தமக்கும் ஆபத்தும் நெருக்கடியும் என்பதனை ராஜபக்ஸாக்கள் தெளிவாக அறிந்து வைத்திருப்பதால் அவர்கள் மொட்டுக் கட்சியில் ரணிலுக்கு எதிராக வருகின்ற கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் சமாளிக்க வேண்டி இருக்கின்றது. எனவே ரணிலும் ராஜபக்ஸாக்களும் இந்த நியாயப்ஹபடி விரும்பியோ விரும்பாமலோ உடன் பிறப்புக்களாக செயல்பட வேண்டிய தேவையும் கட்டயமும் சமகால அரசியல் இருக்கின்றது.
தேர்தல்கள் பற்றிய கதைகள் வருகின்றபோது நாம் தேர்தலுக்குத் தயாராகத்தான் இருக்கின்றோம். தேர்தலைத் தள்ளிப் போட்டதில் தமக்கு உடன்பாடு கிடையாது என்று ராஜபக்சாக்களும் மொட்டு முக்கியஸ்தர்களும் ஊடகங்கள் முன் நாடகமாடினாலும், தேர்தல்கள் தொடர்பில் ரணில் எடுக்கின்ற தீர்மானங்களின் பின்னால் ராஜபக்ஸாக்களின் கரங்கள்தான் இருக்கின்றுத. இதனை நாம் தொடர்ந்து உறுதியாகச் சொல்லி வருகின்றோம். இவர்களின் அரசியல் இருப்பும் வாழ்வும் தேர்தலில்தான் தள்ளிப் போடுவதில்தான் தங்கி இருக்கின்றது. எனவே நாட்டில் எந்தத் தேர்தலுக்கும் உடனடியாக வாய்ப்புக்கள் இல்லை என்பது நமது வாதம். அதனால்தான் 2048 வரையில் ரணிலுக்கு வாய்ப்பு வேண்டும் என்ற கதைகள் அமைகின்றன.
இந்தப் பின்புலத்தில் என்னதான் களம் தனக்கு வாய்ப்பாக இருந்தாலும் தற்போது எதிர்க் கட்சித் தலைவர் சஜித் சற்று சோர்வடைந்த நிலையில் இருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்களுடன் நெருக்கமானவர்கள் நமக்குத் தெரிவிக்கின்றார்கள். தனது அணியில் இருப்பவர்கள் உள்ளே இருந்து கொடுக்கின்ற அழுத்தங்கள், புதிதாக வருவதாகச் சொல்கின்றவர்களை உள்ளீர்ப்பதில் சஜித் வியூகங்கள் முதிர்வற்றுக் காணப்படுகின்றது. மேலும் கட்சியின் முக்கியஸ்தர்களும் சிரேஸ்டமானவர்களும் கூட ரணிலைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போன போது சஜித் வெளியிட்ட கருத்துக்கள், அரசியலில் இருந்து ஒதுங்குவது பற்றிய அவரது கதைகள், இதற்கு நல்ல உதாரணங்கள். அத்துடன் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் சுஜீவ சேரசிங்ஹ போன்றவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவமும் கட்சியில் இவர்களின் நடவடிக்கைகளும் பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்ததும் தெரிந்ததே. திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து தனக்கு விசுவாசமானவர்களை வைத்து ரணில் பாணியில் சஜீத் பயணிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பரவலாக இருக்கின்றன. காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள தெரியாத அரசியல்வாதிதான் சஜித்.
அதே நேரம் சற்று அமைதியாக இருந்த அணுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அணியினர் மீண்டும் தமது செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர். அவர்களின் தொகுதிவாரியான மக்கள் சந்திப்பின் முக்கியமான ஒரு கூட்டம் அண்மையில் நாவலப்பிடியில் நடைபெற்றது. பல நெருக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் அங்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் சமூகம் தந்திருந்தனர். அரசியல் வன்முறைகளுக்கு பிரபல்யாமான மஹிந்தானந்த அலுத்கமகே மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தேர்தல் தொகுதிதான் நவலப்பிட்டிய. இங்குதான் ஒரு முறை வன்முறைகள் காரணமாக தேர்தல் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்பட்டு புதிதாக வாக்களிப்பும் நடந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபே மற்றும் மஹிந்த ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களை விட ரணிலின் ஆட்சி மக்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கின்றது என்ற ஒரு கருத்து பரவலாக கேட்கின்றது. இது அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள் தொடர்பில் புரிதலின்மையில் வெளிப்பாடு. சராசரி மக்களிடம் இதற்கு மேல் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களால் அப்படித்தான் சிந்திக்க முடியும்.
கொடுக்க இருக்கின்ற பில்லியன் கணக்கான பணத்தை இப்போது நாம் கடன் பெற்ற நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் செலுத்துவதில்லை. அத்தோடு அந்தப் பணமும் தற்போது ஐஎம்எப். போன்ற நிறுவனங்கள் நமக்கு புதிதாகக் கொடுத்திருக்கின்ற காசையும் வைத்துத்தான் ரணில் சமாளித்து வருகின்றார். இந்தப் பயணம் வெகு தூரத்துக்குச் செல்லாது. அப்போதுதான் சராசரி மக்களுக்கு தெரிய வரும், இன்று ரணில் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி இரகசியங்கள் என்ன என்பது. இதற்கு நெடுநாள் செல்லாது.
நிர்வாகத்துறை நீதித்துறை என்பவற்றை நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தற்போது கட்டுப்படுத்தி வருவது இன்று தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்மொழியப்பட்ட போது நிதி அமைச்சு அதிகாரிகள் நடந்து கொண்ட ஒழுங்கு. அத்துடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் திட்டமிட்டு காலதாமதாமாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியின் பலத்தையும் ஆதிக்கத்தையும் காட்சிப்படுத்துகின்றன. மேலும் ஜனாதிபதி அண்மையில் நியமனம் செய்திருக்கின்ற நான்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளில் இரண்டு பேர் தொடர்பாக கடும் விமர்சனங்களும் கண்டனமும் எழுந்ருக்கின்றன. இங்கு சிரேஸ்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கையாட்களுக்கே வாய்ப்பு என்று தெரிகின்றது.
பிராந்தியத்தில் இந்திய சீன ஆகிய நாடுகளின் அரசியல் ஆதிக்கப் போட்டி காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் நமக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வாய்ப்பை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது. இந்திய இலங்கைக்கு கைகொடுக்காதிருந்தால் ரணில் ராஜபக்ஸாக்கள் ஆட்சி என்றோ மண்கவ்வி இருக்கும். ஆனால் இந்த உதவியால் இந்தியா பெரிதாக என்னதான் சாதித்திருக்கின்றது என்பதனை அங்குள்ள அரசியல் விற்பண்ணர்கள்தான் கணக்குப் பார்த்து ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கடைசியாக இறுக்கமான சட்டங்களைப் போட்டு ஊடகங்களைக் கட்டிப் போட்டு மக்களை ஆள்வதற்குத்தான் ஆட்சியாளர்கள் முனைவதாகத் தெரிகின்றது. இதிலும் தமக்கு எந்தத் தொடர்புகளும் கிடையாது என்றுதான் ராஜபக்ஸாக்களின் கதைகள் இன்று வரை அமைந்திருக்கின்றது. அவர்கள்தான் இதன் பின்னணியும் கூட. நாடாளுமன்றில் வாக்கெடுப்பு என்று வந்தால் பசுத்தோல் போட்ட புலியை நாம் பார்க்க முடியும்.
நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்