-நஜீப்-
உடதலவின்ன கொலை நினைவுகள்!
ஜனாதிபதி ரணிலின் பிரச்சாரக் கூட்டமொன்று கண்டியில் நடை பெற்றது. அதில் ஆளும் தரப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் ஜீவின் தொண்டமான் பேசும் போது நாங்கள் உங்களுடன் தான் என்று ரணிலுக்கு அங்கு உறுதிமொழி கொடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய லொஹான் ரத்வத்தை தான் உயிருடன் இருக்கும் வரை இந்த நாட்டில் அணுர குமாரவை ஜனாதிபதியாக விடமாட்டேன் என்று அங்கு சபதம் எடுத்துக் கொண்டார். மேலும் இன்னும் இரண்டொரு நாட்களில் இதே இடத்தில் அணுர கூட்டம் போட்டிருக்கின்றார்.
நானும் அந்தக் கூட்டத்துக்கு வருவேன் என்று லொஹான் மேடையில் கூறினார். அணுர தனது கூட்டத்தில் வந்திருந்தவர்களை விளிக்கும் போது லொஹானை விளிப்பதற்காக தேடி நையாண்டி செய்தார். அங்கு பேசிய பலர் உடதவின்ன படுகொலை மற்றும் பல வன்முறைகளுடன் லொஹானுக்குள்ள தொடர்புகளை பட்டியல் போட்டு நினைவு கூர்ந்தனர்.
தயாசிரி திரிசங்கு நிலையில்!
தற்போது சுதந்திரக் கட்சி செயலாளராக இருக்கின்ற தயாசிரி தயசேக்கர ஒரு கவர்ச்சியும் செயல்பாடும் மிக்க அரசியல்வாதி. அவருக்கு தனது மாவட்டத்தில் ஒரு தனிப்பட்ட செல்வாக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் அவரை சஜித் அணிக்குல் கொண்டு வரும் முயற்சிளும் நடக்கின்றன.
என்றாலும் சுதந்திரக் கட்சித் தலைமை தனக்கு வரலாம் என்று நம்புகின்ற அவர் திரிசங்கு நிலையில் இருக்கின்றார். சஜித் அணியில் இணைந்தால் அவர் அமைக்கின்ற அரசில் ஒரு செல்வாக்கான அமைச்சை தனக்குப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும்? அங்கு போனால் ஒரு காலத்தில் நாட்டில் தலைமைக்கு தன்னால் வர இருக்கும் வாய்ப்புக்கு அது தடையாக அமையும்.
சுதந்திரக் கட்சியை முற்றாகக் கைப்பறினால் தனக்கு சிறப்பான ஒரு அரசியல் எதிர்காலம் இருப்பதாக அவர் கருதுகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களுடன் சந்தித்துப் பேசினாலும் இன்னும் உறுதியான முடிவுகளுக்கு அவரால் வரமுடியாமல் இருக்கின்றது.
ரணிலின் பிரச்சார முரண்பாடு!
தற்போது ஜனாதிபதி ரணிலின் பிரச்சார ஏற்பாடுகளில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. இதனை மஹிந்தானந்த அலுத்கமகே பகிரங்கமாக கூறி இருக்கின்றார். ரவி கருணாநயக்க ஒரு வேலைத் திட்டத்தையும் பிரசன்ன மற்றொன்றையும் மனுஷ நாணயக்கார இன்னொரு பக்கத்திலும் இதற்கு மேலாக வெளிநாட்டிலிருந்து வந்திருக்கின்ற தரப்பினர் மற்றுமொரு விதத்திலும் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து வருவதால் அவை ஒன்றோடு ஒன்று பொருந்துவதாக இல்லை என்பதனை அங்கு மஹி சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
இதற்கிடையில் மஹிந்தவின் இளைய மகன் ரணிலின் மற்றுமொரு பிரச்சாரப் பகுதியை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இது ராஜபக்ஸாக்களை வலைத்துப் பிடிக்க போட்ட ஒரு உத்தி என்ற விமர்சனமும் இதற்கு இருப்பதாக ஒரு கதையும் இருக்கின்றது.
அத்துடன் சிரந்தி ராஜபக்ஸ வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று வீட்டுக்குள் அழுத்தம் கொடுப்பதாகவும் ஒரு செய்தி.
மொட்டு பிரிந்தால் அணுரதான்!
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியினர் பல கூறுகளாகப் பிரிந்து நின்றால் நிச்சயம் அணுரகுமார தான் நாட்டில் அடுத்த ஜனாதிபதி. அதனை எவருக்கும் தடுக்க முடியாது. அப்படி நடந்தால் எமக்கு இந்த நாட்டில் வாழ முடியாத ஒரு நிலை வரும் என்று மொட்டு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் நடாத்திய ஒன்றுகூடலில் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இதே கருத்தை ஒரு முறை ராஜித சேனரத்தனாவும் கூறி இருந்தார். ரணிலும் சஜித்தும் இணையா விட்டால் நிச்சயம் அணுரதான் நாட்டில் ஜனாதிபதி என்பது அவரது கணிப்பாக இருந்தது. இவர்களின் கருத்துக்களைப் பார்க்கின்ற போது இவர்கள் அனைவரும் அணுகுமாரவுக்காக தேர்தல் பரப்புரைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறான கருத்துக்கள் பொது மக்களிடம் அணுர பற்றிய இமேஜை மேலும் உயர்த்தி விட இவை துணையாக அமையும். ஒட்டு மொத்த பார்வையும் இப்போது அணுரவை நோக்கித்தான் இருக்கின்றது.
சிறுபான்மை ஆதரவு சஜித்துக்கே?
இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களின் முழு ஆதரவும் எங்களுக்குத்தான். சுமந்திரன் மற்றும் அடைக்கலநாதன் எனப்பலர் எங்களுடன். அதே போன்று ஹக்கீம் ரிசாடும் அப்படித்தான். மலையகத்திலும் மனோ திகா ராதா அனைவரும் எங்களுடனே இருக்கின்றார்கள்.
மன்னாரில் நடந்த ஒரு கூட்டத்தில் எடுத்த புகைப்படங்களை வைத்துத்தான் ஐமச. மரிக்கார் இப்படித் தெரிவித்திருக்கின்றார். அவரது இந்தக் கருத்துக்கு பதில் கொடுத்த ரிசாட் தரப்பினர் நாம் இன்னும் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை.
தேர்தல் திகதி அறிவிக்கபட்ட பின்னர் இது பற்றி கட்சி கூடித் தீர்மானிக்கும் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் மனோ ஹக்கீம் போன்றவர்கள் எற்கெனவே சஜித்திடம் அமைப்பாளர் பதவிகளை வாங்கி விட்டதால் கட்சி என்ன தீர்மானம் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும் என்ற முடிவில் தலைவர்கள் தமது தீர்மானத்தை எடுத்து விட்டார்கள் என்றுதான் இந்த அமைப்பாளர் பதவிகள் காட்டுகின்றன.
நன்றி: 21.07.2024 ஞாயிறு தினக்குரல்