-நஜீப்-
ரணிலின் மற்றுமொரு உறுதி.!
நமது ஜனாதிபதி ரணில் வாக்குறுதிகள் வழங்குவதில் பெரும் வள்ளல். பள்ளி சிறார்களுக்கு இலவச டெப் வசதி. இளசுகள் கரங்களுக்கு தங்கச் சங்கிலி. இனப்பிரச்சினைக்கு தீர்வு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது என மனிதன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றோடு போக.
இப்போது மலையகம் 200 என்ற நிகழ்வில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் முன்னிலையில் மலையக மக்களுக்கு காணி உறுதி தரப்போகின்றேன் என ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருக்கின்றார். மலையத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் அப்பாவிகள.அவர்களுக்கு நிறையவே தேவைகளும் பிரச்சனைகளும் இருப்பதை மனித நேயம் கொண்ட அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிகார கதிரையில் இருக்கப் போகின்றார் என்பது தெரியாது. மலையகத் தலைமைகளும் இந்தியாவும் ரணில் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வாக்குறுதிகள் தொடர்ப்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனை மலையகத் தலைமைகள் குறிப்பாக தொண்டா ஜூனியர் தேடிப்பார்ப்பது நல்லது.
நன்றி: 12.11.2023 ஞாயிறு தினக்குரல்
ரோசானா-சம்மியா தீர்மானிக்கவும்!
கடந்த சில தினங்கள் பூராவும் நாட்டில் கிரிக்கட் வாரம் போல்தால் அமைந்திருந்து. உலக கிண்ணத்துக்கான அணியின் படுதோல்வி. ஆதற்கு இலங்கை கிரிக்கட் சபை பலி. அமைச்சருக்கும் கிரிக்கட் சபைக்கும் மோதல். பலப்பரீட்சையில் ஜனாதிபதி ரணில் சம்மியின் கிரிக்கட் சபைக்கு ஆதரவாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார்.
பின்பு மக்கள் உணர்வுகளுக்கு அஞ்சியே ஜனாதிபதி ரணில் தனது தீர்மானத்தை மென்மைப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. இதனால் வரலாற்றில் அமைச்சரிடம் வீழ்ந்த முதல் ஜனாதிபதியாகின்றார் ரணில். பிழையான வழிகாட்டல்களைக் கொடுத்து சகா, சாகல ஜனாதிபதியை இந்த விவகாரத்தில் கவிழ்துவிட்டார் என்று சொல்ல முடியும்.
‘ரோசானா-சம்மியா’ விடிவதற்குள் ஜனாதிபதி முடிவு செய்து கொள்ளட்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் பகிரங்கமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சவால் விடுத்திருந்தார். விளையாட்டுக்காரருக்கு எதிராக ஜனாதிபதி நகர்த்திய காய்கள் எதுவுமே வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி பின் வாங்கி அமைச்சருக்கு வெற்றி வாய்ப்பை வழங்கி இருக்கின்றார். என்ன வாதங்கள் சொன்னாலும் மிஸ்டர் கிளீன் அமைச்சர் பந்துக்கு கிளீன் போல்ட்.
நன்றி: 12.11.2023 ஞாயிறு தினக்குரல்
தேர்தல் களத்தில் ரணில் அவுட்!
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ரணில் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அவருக்கு யாரும் இடஞ்சல் கொடுக்கக் கூடாது. குறைந்தது அவருக்கு ஒரு பத்து வருடங்களாவது வாய்ப்புக் கொடுக்க வேண்டும். தேர்தல் கேட்டு கோஷம் போடுவோர் துரோகிகள். இப்படியொல்லாம் ரணில் விசிரிகள் பேசியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ரணில் தேர்தல் வருகின்றது என்று அறிவித்த போது, ஐதேக. தேசிய அமைப்பாளர் வஜிர அபேவர்தன ரணிலுக்கு எதிராக எந்த வேட்பாளரும் போட்டிக்கு வரக்கூடாது. அவர் தனிக்குதிரையாக போட்டிக்கு அனுமதிக்கப்பட என்றும் பேசி இருந்தது பற்றியும் நாம் முன்பு ஒரு முறை சொல்லி இருந்தோம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நமக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பிந்திய தகவல்: ரணில் தேர்தலுக்கே வராமல் ஸ்கெப்பாகின்றார் என்பதுதான். மொட்டுக் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துகின்றது. அந்த அணி ரணிலுக்கு வாய்ப்புத்தர தயாராக இல்லை.
அதனால்தான் சஜித்தும் ரணிலும் இணைய வேண்டும். ரணில் ஜனாதிபதி சஜித் பிரதமர் என்றும் ஒரு கதையை சந்தைக்குப் போட்டிருக்கின்றார்கள் ரணில் விசிரிகள். ஆனால் அதற்கும் கடும் எதிர்ப்பு. இந்த நிலையில் ரணில் தானாகவே களத்திலிருந்து ஓரம் போகின்றார்.
நாளை புரட்சிகர வரவு செலவாம்!
2024 வரவு செலவு அறிக்கை தெடர்பாக நாம் கடந்த வாரம் பதிவிட்டிருந்த ஒரு குறிப்பில் அதனை மஹிந்த பார்த்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கும். இதனை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் நமது குறிப்புக்கு சில தினங்களுக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வில் மேலும் உறுதியாகி இருக்கின்றது.
இலங்கை அரசியல் அரங்கில் தந்தைக்கு பின்னர் ஆதிக்கம் செலுத்த எதிர்பார்த்திருக்கும் மகன் நாமல் தந்தையிடம் போய் தனது அரசியல் வியூகங்கள் பற்றி கலந்துரையாடி இருக்கின்றார். அப்போது தான் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக கூற, அவர் ஆதங்கங்களை கேட்ட மஹிந்த தீர்மானங்கள் எடுக்கின்ற விடயத்தில் நிதானமும் அமைதியும் தேவை என்று சொல்லி மூத்தவர்களைப் போய் சந்தித்து அவர்கள் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுமாறு மகனிடம் கேட்டிருக்கின்றார்.
அப்படிச் சொன்ன மஹிந்த, பெரியவர்கள் இடத்தில் மகன் போகும் போது அவருக்கு சொல்ல வேண்டிய செய்திகளை அவர்கள் மூலம் சொல்லி மகனுக்கு கால் கட்டுப் போடும் காரியமும் அங்கு நடக்கின்றது. எனவே ரணில் வரவு செலவுக்கு மஹிந்த பச்சைக் கொடி உறுதி. 2024 வரவு செலவு அறிக்கை புரட்சிகரமாக அமையும் என்பது ரணில் விசிரிகள் கதை.
நன்றி: 12.11.2023 ஞாயிறு தினக்குரல்
இங்கேயும் ஞானமும் அம்பிட்டியும்.!
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீருக்குப் பதிலாக அலி சஹிர் மௌலான நியமனம் செய்யப்பட்டார். அவரை வரவேற்க்கும் ஓர் நிகழ்வு அண்மையில் ஏறாவூரில் நடைபெற்றது. வைபவத்தில் மு.கா. தலைவர் ஹக்கீமும் ஹிஸ்புல்லாஹ்வும் அமர்ந்திருந்தனர்.
அப்போது மௌலானாவை ஆசிர்வாதிக்க வந்த மௌலவி அங்கு உதிர்த்த வார்த்தைகள் வேடிக்கையாகவும் அண்டப் புளுகாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் இருந்தது. இப்போது சமூக ஊடகங்களில் இதற்குக் கடும் விமர்சம். அசிங்கமான வார்த்தை பிரயோகத்தால் மீன்பாடும் மண்ணில் பலத்த சல சலப்பு! இவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் கிடையாதா என்ற ஆதங்கம் சமூகத்தில் ஒலிக்கின்றது. இது தொடர்பாக நடவடிக்கை தேவை என உலமா சபையிலும் முறைப்பாடாம்.!.
ஹக்கீம் சிறை செல்லாத ஓர் புனிதத் தலைவர் என மௌலவி அவருக்கு சான்றிதழ் வேறு கொடுத்திருக்கின்றார். தலைவர் சிறை போகாத செய்திகள் ஒருபக்கம்.! மேடையில் சங்கடத்துக்கு ஆளான மு.கா.தலைவர், பைத்தியக் காரத்தனமான ஆசீர்வாதம் என நண்பர் ஒருவரிடத்தில் திட்டியதாகவும் தகவல்.
இதுவும் ஒருவகையில் ஞானசாரர் மற்றும் அம்பிட்டியாக்கள் முஸ்லிம்களிலும் இருப்தைக் காட்சிப்படுத்தும் ஓர் நிகழ்வே.
நன்றி: 12.11.2023 ஞாயிறு தினக்குரல்