-நஜீப்-
தேர்தல் அறிவிப்பு யாருடைய வேலை!
கழுதையில் வேலையை நாய் செய்யப் போன நிகழ்வுகள் நடப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இது போலத்தான் நமது நாட்டில் தேர்தல் அறிவிப்புக்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் திணைக்களம் தேர்தல் அறிவிப்புச் செய்தாலும் பணம் இல்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் தேர்தலை தடுத்த நிகழ்வுகளும் நாட்டில் முதல் முறையாக நடந்திருக்கின்றது.
இப்போது ஜனாதிபதி ரணில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் அறிவிப்புக்களை விடுத்திருக்கின்றார். ஆனால் தேர்தல் ஆணையாளர் சமன் சிரி ரத்நாயக்க ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பற்றிய அறிப்பை செய்வது ஜனாதிபதி அல்ல அது தேர்தல் திணைக்களம் பார்க்கின்ற வேலை அதனை நாம் உரிய காலத்துக்குச் செய்வோம் என்று அண்மையில் ஒரு ஊடகச் சந்திப்பில் சொல்லி இருந்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தை கலைத்து விடுவதன் மூலம் ஜனாதிபதிக்கு பொதுத் தேர்தலை முன் கூட்டி நடத்துவதற்கான பாதையைத் திறந்து விடவும் மார்க்கங்கள் இருக்கின்றன. அத்துடன் ஜனாதிபதி இரு தேர்தல்கள் 2024ல் நடக்கும் என்று பேசினாலும் ஒரு தேர்தலுக்குத் தேவையான காசை மட்டுமே அவர் இந்த வரவு செலவுத் திட்டல்த்தில் ஒதுக்கி இருக்கின்றார்…?
சஜித் அரசில் இரட்டை பிரதமர்கள்!
தேர்தல் அறிவிப்புக்களைத் தொடர்ந்து தனி நபர்களும் கட்சிகளும் வேட்பளர்களை களத்தில் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சஜித் தானே எமது அணியின் வேட்பாளர் என்று முன் கூட்டி அறிவித்தாலும் அந்த அணிக்குள் ஒரு குழப்பம் தொடர்கின்றது.
பதவி பறிக்கப்பட்ட ரோசான் ரணசிங்ஹவை வேட்பாளராகக் கொண்டு வருவது பற்றியும் பேசப்படுகின்றது. அவருக்கு தனது அணியில் பிரதமர் பதவி என சஜித் சமாளிக்க முனையக்கூடும். ஆனால் இதற்கு முன்னர் போராசிரியர் ஜீ.எல்லுக்கு இந்தப் பதவி என்று சொல்லப் பட்டிருந்ததாம். அப்படியானால் சஜித் ஆட்சியில் இரட்டை பிரதமர்களோ என்று கேட்கத் தோன்றுகின்றது.
இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தி தனது வேட்பாளர் அணுர என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. திலித் ஜயாவீரவும் தனது பரப்புரையை துவங்கி இருக்கின்றார்.
தம்மிக்க பெரேரா மொட்டுக் கட்சி வேட்பாளராக வர ஆசைப்படுகின்றார். ஆனால் மொட்டு இதனை உறுதி செய்யவில்லை. வெற்றி வாய்ப்பு கம்மி என்று உறுதியானால் ராஜபக்ஸாக்கள் ஆளைக் களத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கவும் இடமிருக்கின்றது. அப்போ ரணில்? ஆள் கோதாவிலே இல்லை. இது நமது கணிப்பு!
மொட்டு ஏற்பாடுகளும் ஒதுங்குவோரும்!
வருகின்ற பதின்ஐந்தாம் (15) திகதி மொட்டுக் கட்சி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தனது கூட்டத்தை நடாத்த இருக்கின்றது. அன்று கட்சியில் முக்கிய பதவிகளுக்கு நியமனங்கள் செய்யவும் அதிக இடமிருக்கின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸாவுக்கு அடுத்த நிலை பதவி ஒன்றை அவரது அரசியல் வரிசு நாமலுக்கு கொடுத்து ஆளை ஊதிப் பெருப்பிக்கும் ஒரு முயற்சியும் இந்த ஏற்பாட்;டில் இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பிரதேச கிராம மட்ட தேர்தல் பரப்புரைகளையும் மொட்டு கட்சி நாடுபூராவும் நடாத்த இருக்கின்றது. இதற்கிடையில் தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற மொட்டு உறுப்பினர் பலர் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாகவும் பகிரங்கமாகவே பேசுகின்றார்கள். இதில் மு.காவில் இருந்து முதல் முறை நாட்டாளுமன்றம் வந்த விமலவீர திசாநாயக்கவும் முக்கியமானவர்.
அவர் தம்மைப் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு வாய்ப்புக் குறைவு. ஊழல் மோசடிக்காரர்களுக்குத்தான் இங்கு வாய்ப்பு அதிகம் என்று தனது மனத் தாங்களை அம்பலப்படுத்தி இருக்கின்றார். கட்சி பின்னடைவுகளைச் சந்திக்கின்றது என்பதனை தான் ஒத்துக் கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக பேசியும் வருகின்றார்.
மின் கட்டணத்துக்கு அமைச்சு யாசகம்!
நாட்டில் மின் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் கிட்டத்தட்ட ஏழு இலட்சம் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு மின்சாரம் தூண்டிக்கப்பட்டிருந்த செய்தி அணைவருக்கும் தெரியும். எனவே மின்சாரக் கட்டணம் செலுத்த மக்கள் பிச்சை எடுக்கப் புறப்படுவது ஒன்றும் இந்த நாட்டில் அதிசயம் கிடையாது.
ஆனால் நாம் இங்கு சொல்லப்போகும் கதை மின் கட்டணம் செலுத்த மீன்பிடி அமைச்சு மீனர்களிடம் யாசகம் எடுத்த கதை. அண்மையில் ராஜபக்ஸாக்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டை-குடாவெல்லவில் மீனவர்கள் மாநாடொன்றை தேசிய மக்கள் சக்தி நடாத்தியது.
அங்கு ஜேவிபி ஜனரஞ்சகப் பேச்சாளர் பதுள்ளை-சமந்த வித்தியாரத்ன பிரதம பேச்சாளராக வருகை தந்திருந்தார். மீன்பிடிப் படகுகளுக்கு இலக்கங்கள் வழங்குவதற்காக தலா ஒரு பாடகுச் சொந்தக்காரரிடம் எழுபத்தி ஐயாயிரம் (75000) ரூபா வசூலிக்கப்பட்ட தகவல் அம்பலமானது.
ஏன் இலவசமாக வழங்க முடியுமான இதற்கு காசு வாங்குகின்றீர்கள் என்று கேட்டதற்கு, அமைச்சு மின்சாரக் கட்டணப் பாக்கிப் பணத்தை செலுத்த முடியாதிருக்கின்றது. அதற்காகத்தான் இந்த வசூல் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இது பகிரங்க மேடையில் பேசப்பட்ட செய்தி.
பதில் பொலிஸ் மா அதிபர் பந்து!
சர்ச்சைக்குரிய தேசபந்துபந்து தென்னகோன் பதில் பொலிஸ் அதிபர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது பெரும் விமர்சனத்துக்கு தற்போது இலக்காகி இருக்கின்றது. இவரை நியமனம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி பலமுறை பின்னடித்து தாமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் ராஜபக்ஸாக்களினதும் மொட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக இந்த நியமனத்தை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தெரிகின்றது.
ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து காலிமுகத்திடலில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதன்மீது மொட்டுக் கட்சி அடியாட்கள் நடத்திய தாக்குதலுக்கு பக்க துணையாக நின்றவர் இவர். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் இவர் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
இது போன்று நிறையவே குற்றச்சாட்டுக்கள் இவர்மீது இருக்கின்ற போது, இந்த நியமனத்தை ஜனாதிபதி செய்திருக்கின்றார். இப்படிப்பட்ட ஒருவருக்கு ஒரு பொறுப்பு வாய்ந்த பதவி வழங்கி இருப்பது சர்வதேச சமூகம் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும்.?
தேர்தல்களை எதிர் நோக்கியுள்ள இந்த நேரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு மனிதனை இந்த பதவிக்கு நியமித்திருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
நன்றி: 03.12.2023 ஞாயிறு தினக்குரல்