வட கொரியா இம்மாதம் ஐந்து முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள நிலையில், நேற்று ஆறாவது முறையாக இரு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது.
அமெரிக்கா விதித்து உள்ள தடை, கொரோனா பரவல் போன்றவற்றால் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
அதனால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை, நீருக்கடியில் பாய்ந்து தாக்கும் ஏவுகணை, அணு ஏவுகணை என அடுத்தடுத்து சோதனைகளை நடத்தி அமெரிக்காவை பணிய வைக்க, வட கொரியா முயற்சித்து வருகிறது.
ஒரு புறம் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை மிரட்டவும், அந்நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா விதித்துள்ள தடையை அகற்றவும், வட கொரியா ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வட கொரியா நேற்று கிழக்கு கடலோரம் உள்ள ஹம்ஹங் நகரில் இருந்து இரண்டு குறுகிய துார ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. அவை 190 கி.மீ., துாரம் பாய்ந்து சென்று கடலில் விழுந்தன. இத்துடன் இந்த மாதத்தில் மட்டும் வட கொரியா ஆறு முறை ஏவுகணை சோதனைகளை நடத்திஉள்ளது.
இதற்கிடையே வட கொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக தென் கொரிய அரசு, அதன் கடற்பகுதியில் உள்ள கப்பல்களை எச்சரித்துள்ளது.எல்லை திறப்புகொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த எல்லைகளில் ஒரு பகுதியை வட கொரியா மீண்டும் திறந்துள்ளது.
இதன்படி வட கொரியாவின் சினுய்ஜூ நகரில் இருந்து சீனாவின் டன்டங் நகருக்கு முதல் முதலாக சரக்கு ரயில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரயில் வட கொரியாவில் இருந்து யாலு ஆற்றைக் கடந்து சீனா சென்றது. அதன் பின் சீனாவில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த ரயில், வட கொரியாவின் உய்ஜு நகரில் உள்ள விமான தளத்தில் சரக்குகளை இறக்கியது.