உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் இன்று உச்சத்தை தொட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. சரமாரியாக ஏவுகணைகளையும், 500 ட்ரோன்களையும் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு F-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மொத்தம் 477 ட்ரோன்களும், 60 ஏவுகணைகளும் உக்ரைன் மீது ஏவப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய வான்வழி தாக்குதல் இது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
விமானி உயிரிழந்தார். இறந்த விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது மேற்கு நாடுகள் தான்.. அதிபர் புதின் குற்றச்சாட்டு!”
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இது இருந்தது. டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்யா-ஈரான் தயாரிப்பான ஷாஹெட் வகை ட்ரோன்கள் 477 எங்களை தாக்கின. 60 ஏவுகணைகள் பல்வேறு திசைகளிலிருந்த ஏவப்பட்டதால், இரவு முழுவதும் எச்சரிக்கை அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.
எங்கள் உயிரைக் காக்கும் அனைத்தையும் குறிவைத்து ரஷ்யர்கள் தாக்கினார்கள். எங்களது F-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ, நாட்டை பாதுகாக்கும் பணியின்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கும் சக வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாரத்தில் மட்டும் 114 ஏவுகணைகள் மற்றும் 1,270 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகள் அமைதிக்காக அழைப்பு விடுத்தாலும், புடின் போரைத் தொடர முடிவு செய்துள்ளார்” என்று கூறியுள்ளார். ” இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விளாடிமிர் புடின் கூறியிருந்தாலும், அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை. இரு தரப்புகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளன.