-நஜீப்-
தற்போதய ஜனாதிபதி இன்று தொடர்ந்தும் பொய்களைச் சொல்லி அடுத்த கட்டத்துக்கு தாவிக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த விளையாட்டை அவரால் தொடர்ந்தும் செய்து கொண்டு போக முடியாது.
தனது வீடு எரிக்கபட்ட போது அங்கு 2000 புத்தகங்கள் இருந்ததாக அன்று ஊடகங்கள் முன் ஒப்பாரி வைத்தார்.
சில தினங்களுக்கு முன்னர் சி.என்.என்.செய்தி சேவைக்கு பேசுகின்ற போது தன்னிடம் இருந்த 4000 புத்தகங்களை போராட்டக்காரர்கள் எரித்து விட்டார்கள் என்று சொல்லி இருந்தார்.
நமக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்தப் பொருளாதார நெருக்கடியை தீர்க்க குறைந்தது ஐந்து வருடங்களாவது போகும் என்றவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் இருக்க தன்னால் அடுத்த வருட இறுதிக்குள் (2023) நாட்டை சீர்செய்ய முடியும் என்று அதே ஊடகத்துக்குச் சொல்லி இருந்தார்.
‘கோட்டா கோ’ கோஷத்தை ஆதரித்தவர் இன்று அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள்-பாசிசவாதிகள் சட்ட விரோதிகள் என்று சொல்லி வருகின்றார். இது எமது கண்டு பிடிப்பல்ல. ரணில் அவரது வாயாலே சொல்லிக் கொண்டிருக்கின்ற முரண்பாடான கதைகள்.
மேலும் எரி பொருள் நெருக்கடி தற்போது குறைந்துள்ளது. பாடசாலைகள் தற்போது திறக்கப்படும் என்றெல்லாம் இப்போது கூறிக் கொண்டிருக்கின்றார். இவை எல்லாம் அப்பட்டமான பொய்கள் பொருத்துப் பாருங்கள் நடப்பதை.