இன்று அகுரண பிரதேச சபையிக்கு SJB சார்பில் களமிறங்கி இருக்கின்ற இஸ்திஹார் இமாதுதீன் என்பவர் அகுரணயில் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற ஓர் மனிதன் என்பதனை விட தனக்கொரு களத்தை அங்கு அமைத்து தேசிய அரசியலில் நுழைய துடிக்கின்ற ஒரு மனிதன் என்பதுதான் எமது பார்வை.
அவரது அந்த முயற்சியை எவரும் தவறு என்று சொல்ல முடியாது. அது அவரது அரசியல் உரிமை. அகுரனையில் ஏசிஎஸ்.ஹமீட், டாக்டர் மஹ்ரூப் என்பவர்களுக்குப் பின்னர் தலைமைத்துவத்துக்கு அங்கு பாரிய இடைவெளி இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஹமீட் வாரிசாக வந்த ஹலீம் கண்டி முஸ்லிம்களின் அரசியல் பலயீனங்களினால் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்றாலும், அவர் சாதித்தது எதுவுமே கிடையாது.

இந்தப் பின்னணியில் அகுரணையில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்ற எண்ணங் கொண்ட பலர் அங்கு தமக்கொன ஒரு அரசியல் இயக்கத்தை 2011ல் அகுரணையில் தோற்றுவித்தனர். இதில் சட்டத்தரணி மசூதீன் டாக்டர் கமால் நாசர் இஞ்ஜீனியர் சிராஜ் அரூஸ் மௌலவி அஸ்லம் இஸ்திஹார் இர்பான் ரிபாஸ் என்போர் அதில் முன்னணியில் இருந்தனர். இந்த அமைப்பு நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் பேரவை (PMJD) என முதல் முறையாக 2011ல் தேர்தலை சந்தித்தது.
அந்தத் தேர்தலில் மு.கா.வுடன் இவர்கள் கூட்டணி சமைத்து மூன்று ஆசனங்ளை கைப்பற்றி அகுரண சமூகத்தின் கவனத்தை ஈர்த்தனர். அதில் சபைக்கு நுழைந்தவர்களில் ஒருவர்தான் இந்த இஸ்திஹாகார். PMJD தேர்தல் பரப்புரைக்காக ‘அகுரண டுடே’ என்ற செய்தித்தாளை வெளியிட்டு சமூகத்தை அன்று விளிப்பூட்டி வந்தனர்.
அதன் பின்னர் 2018ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த அணி தனித்துக் களமிறங்கி நான்கு ஆசனங்களை வெற்றி கொண்டது. எவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக்கு ஹலீம் இணங்காததால் மொட்டுக் கட்சியுடன் இணைந்த அவர்கள் தவிசாளர் பதவியை பெற்று ஆட்சி அமைத்தனர். இஸ்திஹார் தவிசாளரானார்.
தேசிய அரசியலுக்கு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மசூதீன்- இஸ்திஹார் PMJD அணி 2019ல் பசிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு இணங்க இஸ்திஹார் தலைமையிலான குழுவைக் கண்டியில் அவர்கள் பொதுத் தேர்தலுக்குக் களமிறக்கினார்கள். மொட்டுக் கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை.
இந்தக் கட்டுரையாளன் முன்ணிலையில் பாசில் அவர்களுக்கு அந்த வாக்குறுதியை வழங்கி அவர்களை ஆசிர்வாதித்தார்.ஆனால் பின்னர் பசில் நயவஞ்சகத்தனமாக உடுநுவர பாரிஸ் ஹாஜியார் என்பவரை மொட்டு சார்பில் களமிறக்கி இவர்களுக்கு ஆப்பு வைத்தார். பாரிஸ் தேர்தலில் 22653 விருப்பு வாக்குகளைப் பெற்றார். இந்த இஸ்திஹார் தலைமையிலான அணி அந்தத் தேர்தலில் 13674 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர் 2024 இதே இஸ்திஹார் தமது சகாக்களுக்குத் தெரியாது பொதுத் தேர்தலில் ஐதேக. லாபீர் ஹாஜியாருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி கடைசி நேரத்தில் இஸ்திஹார் தனது தலைமையில் பந்து சின்னத்தில் தேர்தலுக்கு நின்றது. இந்தத் தேர்தலிலும் 13378 வாக்குகளை மட்டுமே அவர்களினால் பெற முடிந்தது.
இவருடன் அந்த அணியில் களமிறங்கிய முன்னாள் மாகாணசபை இதாயத் சத்தாரை தெருவில் இறக்கி விட்டு அவர் தனது அரசியல் எதிரி ஹலீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இன்று சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி அணியில் களமிறங்கி இருக்கின்றார்.
அரசியலில் களுத்தரப்பு இயல்பானதுதான். பந்து சத்தாரும் இப்போது மீண்டும் ஹலோ அணியிலாம்.! இதே இஸ்திஹார் என்பிபி. தரப்பில் பொதுத் தேர்தலில் வாய்ப்புக் கேட்டு மூக்குடைபட்ட கதைகளும் இருக்கின்றன.
ஆனால் இந்தத் தேர்தலில் தனது அரசியல் இயக்கமான PMJD யில் உள்ள பெரும்பாலனவர்கள் இன்று இஸ்திஹாருடன் இல்லை. அந்த அமைப்பில் தலைவரான கலாநிதியும் சட்டத்தரணியுமான மசூதீன் தலைமயிலான சகாக்கள் இஸ்திகாருக்கு எதிராக இன்று என்பிபி. சார்பில் களமிறங்கி பரப்புரைகளில் இருக்கின்றனர்.
தற்போதய அரசியல் பின்னணியில் என்பிபி.யை ஆட்சிக்கு கொண்டுவருவதுதான் அகுரணை சமூகத்துக்கும் அபிவிருத்திக்கும் ஆரோக்கியவம் என்பது இவர்கள் தரப்பு வாதமாக இருக்கின்றது.





