-நஜீப்-
தனது அரசியல் இருப்புக்காக இந்தியா போய் பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் சந்திக்க பெரும் முயற்சி எடுக்கின்றார் என்பது அனைவரும் அறிவார்கள். ராஜபக்ஸாக்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் வந்த ரணில் இன்றளவுக்கும் கதிரையில் நிலைக்க இந்திய உதவிகள்தான் அடிப்படை.
ராஜபக்ஸாக்கள் ஒரு கட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு பதிமூன்றைத் தூக்கி எறிவோம் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரமும் கிடையாது என தேர்தல் மேடைகளில் வீராப்பு பேசியது இந்தியாவுக்கும் தெரியும்.
இப்போது மோடியை சந்தித்து தான் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்று ரணில் கணக்குப் பார்க்கின்றார். அதற்காகத்தான் இந்தப் பயணம். ஆனால் இந்திய வரும் முன்னர் 13 மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனக்கு ஒரு உத்தரவாதத்தை ரணில் தர வேண்டும் என்று மோடி எதிர்பார்ப்பதாக ஒரு கதை சொல்லப்படுகின்றது.
இதில் நமக்கு நம்பிக்கை இல்லை. தமிழர் விவகாரத்தில் நடிக்கின்றார்கள் என்பதுதான் எமது நிலை. அப்படி ரணில் உத்தரவாதம் கொடுத்தாலும் யார் நம்புவார்கள். கடந்த காலங்களில் அவர் நடத்தைகள் தெரிந்ததே. மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் முன்னால் பசில் சொன்ன ஒரு தகவலே தேர்தல் கதைக்கு அடிப்படை.
நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்