அதிக மாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவும் ஆற்றலை கொண்டிருக்கலாம் என்றும் இது தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகெங்கும் கடந்த சில நாட்களாகவே ஓமிக்ரான் கொரோனா தான் பேசுபொருளாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளன.
இந்த உருமாறிய கொரோனா அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டிருப்பதால் இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஒமிக்ரான் கொரோனா
உலக சுகாதார அமைப்பும் இதனைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. மேலும், உலகில் அடுத்த கொரோனா அலை ஏற்படவும் இதைக் காரணமாக அமையும் என அஞ்சப்படுகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து தடை விதித்து வருகின்றன. இருந்தாலும் கூட இந்தத் தடை உத்தரவுகள் பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
போக்கையே மாற்றிவிடும்
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “ஒமிக்ரான் மீண்டும் ஒரு சர்வதேச நெருக்கடியாக மாறுவதை நமால் தடுக்க முடியும். இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறுகிறது, ஆனால் நமது கூட்டு முயற்சி ஒருநாளும் நின்று விடக்கூடாது.
டெல்டா வைரசை விட ஓமிக்ரான் தீவிரமானது இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், தற்போதுள்ள சூழலில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. ஒமிக்ரானின் சில அம்சங்கள், அதாவது வேகமாகப் பரவுவது, மிக அதிகப்படியாக உள்ள மாற்றங்கள் ஆகியவை தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் தெரிவித்தார்.
டெல்டா தான் மோசம்
மேலும் ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி எப்படிச் செயல்பட்டு வருகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசிகளின் இயக்குநர் கேட் ஓ பிரையன், “இந்த ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் ஆய்வு செய்யவுள்ளோம். நாம் இன்னும் கூட டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட பெருந்தொற்றை சமாளிக்கத் தான் போராடி வருகிறோம். வேக்சின் பணிகளை வேகப்படுத்துவது தான் நமது தற்போதைய இலக்கு” என்று அவர் தெரிவித்தார்.
பூஸ்டர் டோஸ்
முன்னதாக ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வேலை செய்வதாகவே முதற்கட்ட ஆய்வு முடிவுகள் காட்டுவதாகவும் உலகம் முழுவதும் பூஸ்டர் டோஸை செலுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும், பூஸ்டர் டோஸ் பணிகளை இப்போது தொடங்கக் கூடாது என்றும் ஏழ்மையான நாடுகளில் வேக்சின் பணிகள் மெதுவாக உள்ளதால், அங்கு வேக்சின் செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாடுகளில்
இந்த ஓமிக்ரான் கொரோனா இதுவரை 59 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய உருமாறிய வைரஸ்களை காட்டிலும் ஓமிக்ரான் அதிகமாகப் பரவக்கூடியதாகத் தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் தெரிவித்தார். அதேநேரம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் இந்த வைரஸை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.