மறதிக்கு மருந்தாக வயாகரா!

ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

அல்சைமர்ஸ் போன்ற டிமென்ஷியாவினால் திரளும் புரதங்களை, வயாகரா மருந்து இலக்கு வைப்பதாக, உயிரணுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சுமார் 70 லட்சம் நோயாளிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த க்ளீவ்லேண்ட் அணி, வயாகரா மருந்து எடுத்துக் கொள்ளும் ஆண்கள், அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் மதிப்பு வாய்ந்தது என இந்த ஆராய்ச்சியாளர்கள்நேச்சர் ஏஜிங்என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளனர்.

 

இது போன்ற ஆய்வுப் பணிகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மருந்தை வேறு ஒரு தேவைக்கு பயன்படுத்துவது விரைவானது, எளிமையானது, புதிய மருந்தைக் கண்டுபிடிப்பது மற்றும் புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதை விட விலை மலிவானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ஆரம்பத்தில் வயாகரா (சில்டெனாஃபில்) மருந்து இதய நோய்க்கான மருந்தாகத்தான் வடிவமைக்கப்பட்டது. இந்த மருந்து ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது.இந்த மருந்து இதயம் மட்டுமின்றி, ஆணுறுப்பில் உள்ள ரத்த தமனிகளுக்கும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஆணுறுப்பு விரைப்புத்தன்மைப் பிரச்னைக்கான மருந்தாக மேம்படுத்தப்பட்டது.

 

ஆனால் நிபுணர்களோ இம்மருந்துக்கு மற்ற பயன்பாடுகளும் இருப்பதாகக் கருதினர். சில்டெனாஃபில் மருந்து ஆண் மற்றும் பெண்களுக்கு பல்மொனெரி ஹைப்பர்டென்சன் எனப்படும் நுரையீரல் பிரச்னைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இம்மருந்து அல்சைமர்ஸ் நோய்க்கும் பயன்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மூளையில் வழக்கத்துக்கு மாறாக அதிக புரதம் சேர்ந்து இருப்பதுதான் இந்த வகையான டிமென்ஷியா நோய்க்கு காரணம் என மருத்துவர்கள் கருதுகின்றனர், ஆனால் உண்மையான காரணம் என்னவென்று இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

 

வயாகரா மருந்து

மனித திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், இந்த மருந்தை அதிகம் உட்கொள்பவர்களின் மூளையில் செல் வளர்ச்சி அதிகரித்தது மற்றும் புரதம் சேர்வது குறைந்துள்ளது என அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் நகரில் உள்ள இந்த அறிவியல் ஆய்வாளர்கள் அணி கண்டுபிடித்துள்ளது.

 

அதே போல சில்டெனாஃபில் எடுத்துக் கொள்ளும் மக்களுக்கு அல்சைமர்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில், 72.3 லட்சம் தனிநபர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன, ஆனால் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை என இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஃபிக்சியாங் செங் கூறினார்.

 

காரணம் சில்டெனாஃபில் மருந்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அல்சைமர்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது மட்டுமே நிறுவப்பட்டுள்ளது, நாங்கள் இப்போது ஒரு பரிசோதனைக்கு திட்டமிட்டு வருகிறோம். மேலும் சில்டெனாஃபில் மருந்தால் அல்சைமர்ஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இரண்டாம் கட்ட தோராய பரிசோதனை ஆய்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

 

அல்சைமர்ஸ் நோயின் அபாயத்தை சில்டெனாஃபில் மருந்தால் குறைக்க முடியுமா என்பதைக் கண்டறிய இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைஎன பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்ககழகத்தைச் சேர்ந்த மூளை ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் தாரா ஸ்பிரேஸ்ஜோன்ஸ் கூறினார்.

 

இந்த ஆய்வின் அடிப்படையில், இந்த தரவுகள் அறிவியல் ரீதியில் சுவாரசியமாக இருந்தாலும், அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள சில்டெனாஃபில் மருந்தை எடுத்துக் கொள்ளத் தொடங்கமாட்டேன்என்கிறார் பேராசிரியர் தாரா.

Previous Story

இந்திரா காந்தி உத்தரவு  

Next Story

பிபின் ராவத்-பாஜக குரல் :விமர்சனம்