”இலங்கையில் மனித உரிமை மீறல்களை என் தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது,” என, அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.
இலங்கை பார்லிமென்ட் கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:இலங்கையில் இன வேறுபாடு, மோதலுக்கு இனி இடமில்லை.
குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு போரால் 30 ஆண்டுகளாக இலங்கை பாதிக்கப்பட்டது. இதில் பலர் மாயமாகி விட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் லாபங்களுக்காக மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் எந்த கட்சியும் ஈடுபடக் கூடாது.
மனித உரிமைகளை இலங்கை மீறியதாக சர்வதேச அளவில் தவறான கருத்து நிலவுகிறது; இதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் யோசனைகளை செயல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளது.
மனித உரிமை மீறல்களை என் தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.