பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. ரியோ டி ஜெனிரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி நேரத்திற்குள் 26 செ.மீ மழை பெய்திருக்கிறது.
பிரேசில் தலைநகர் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவித்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்திருக்கிறது. நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. பிரேசிலில் நிலச்சரிவில் சிக்கி இருந்தவர்களை 24 பேரைக் காப்பாற்றியுள்ளனர். 439க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் பிரேசில் அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கனமழை காரணமாக மீட்புப் பணிகள் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகவே தொடங்கப்பட்டன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை பேரிடர் மேலாண்மை படையினர் தேடி வருகின்றனர். கொட்டும் மழைக்கு இடையே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பிரேசில் வெள்ளத்துக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.