பாத்திமாவை விஷ, ஊசி செலுத்தி கொலை செய்தேன் – பாட்டியின் வாக்குமூலம்

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக் கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும்  பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் விசாரணைகளின் போது, தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் தனது பேத்தியின் பெயர் பாத்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். ‘நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லீம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு பெண் பிள்ளை பிறந்த நிலையில், அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தது. சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டனர்.

பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில்,பேத்தியின் தகப்பன்  தன்னுடன்  தனது பிள்ளையை அனுப்புங்கள். நான் வளர்க்கிறேன் என கூறி  பேத்தியை அழைத்து சென்று விட்டார். பேத்தி என்னை விட்டு பிரிந்ததும், அவளின் பிரிவு துயரும், அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  திருகோணமலைக்கு சென்று எனது பேத்தியின் தந்தையிடம் பேத்தி சில நாட்கள் என்னுடன் இருக்கட்டும் என வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தேன்.

பாட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று  தங்கி இருந்தோம்.

அப்போது பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு. நானும் உயிரை மாய்த்துக்கொள்ள  முடிவெடுத்தேன்..

Previous Story

உலக வலம் 10.09.2023

Next Story

மூன்று விரல்கள்... பெரிய தலை... மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டது ஏலியன்களின் உடல்களா?