பாகிஸ்தான்..இங்கு அடிக்கடி ராணுவம் ஆட்சியை கைப்பற்றி வருகிறது. ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கைப்பற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானில் மீண்டும் ராணுவம் ஆட்சியை கவிழ்க்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானின் தற்போது பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி செயல்பட்டு வருகிறார்.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானில் ராணுவ புரட்சியை தொடங்கி அதிகார மாற்றத்துக்கு அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் அதிபர் பதவியை அவர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளாராம்.
தற்போது பாகிஸ்தான் அதிபராக இருக்கும் ஆசிப் அலி சர்தாரியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை கைப்பற்ற அவர் திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை பாகிஸ்தான் பத்திரிகையாளர் சையத் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பாகிஸ்தானின் நிலைமை மோசமாகி உள்ளது. அசீம் முனீர் அதிபராக பதவியேற்க காய் நகர்த்தி வருகிறார்.

இந்த விவகாரத்தில் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினரின் பங்கு இருக்கிறதா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இப்படியான சூழலில் அதிகார மாற்றம், அரசியல் கட்சிகளுக்கு இடையே நிலவும் குழப்பம் என்பது பாகிஸ்தானின் ஜனநாயக கட்டமைப்பின் மீது அழுத்தத்தை உள்ளாக்கி வருகிறது.
நாட்டில் கொந்தளிப்பான நிலை உள்ளது. வரும் நாட்களில் நாட்டின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதியது. இருப்பினும் கூட அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ‛பீல்ட் மார்ஷல்’ என்ற பதவி வழங்கப்பட்டது. இது ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவியாகும்.
பாகிஸ்தானில் இதுவரை ஒருவர் மட்டுமே இந்த பட்டத்தை பெற்றிருந்தார். அவரது பெயர் அயூப் கான். இவர் ராணுவ ஜெனரலாக 1959ம் ஆண்டில் பணியாற்றினார். அதன்பிறகு அவர் அந்த நாட்டின் அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.

பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியாக அழைக்கப்பட்டார்.1951 முதல் 1958 வரை ராணுவ ஜெனரலாக இருந்த அயூப் கான் அதன்பிறகு ஆட்சியை கவிழ்த்தார். அதிபராக இருந்த இஸ்கந்தர் மிர்சாவை பதவியில் இருந்து இறக்கிவிட்டு அதிபரானார்.
1958 முதல் 1969 வரை அவர் அதிபராக இருந்தார். 1969 இல் நாடு முழுவதும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தபோது ராஜினாமா செய்தார். இந்த பாணியில் தான் அசீம் முனீர் தற்போது பாகிஸ்தான் அதிபராக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் 1958 ம் ஆண்டை தவிர இன்னும் 2 முறை ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானில் ஆட்சியை கவிழ்த்து அதிகார பதவியை எட்டி பிடித்த வரலாறு உள்ளது.
அதன்படி 1971ம் ஆண்டில் வங்கதேசத்தை உருவாக்குவதற்காக நடந்த இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு 1977 ம் ஆண்டில் ராணுவ ஜெனரல் ஜியா உல் ஹக், பிரதமர் ஜூல்பிஹர் அலி பூட்டோவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்.
1977 ம் ஆண்டில் நடந்த சம்பவத்தை போல் தான் இப்போது அசீம் முனீர் பாகிஸ்தானில் அதிபர் பதவியை எட்டி பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்பிறக 1999ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தார். இவர் யார் என்றால் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் அண்ணன் தான். அப்போது கார்கில் போர் நடந்தது.
நவாஸ் ஷெரீஃப் கார்கில் போருக்கு ராணுவ அதிகாரி பர்வேஷ் முஷாரஃப்பை தலைமை தாங்க உத்தரவிட்டார். பர்வேஷ் முஷாரஃப் தலைமை தாங்கி இந்தியாவை எதிர்க்க தொடங்கினார். இதனை சாதகமாக்கிய பர்வேஷ் முஷாரஃப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சியை கவிழ்த்து அதிபரானார்.
அமெரிக்காவின் பேச்சை நவாஸ் ஷெரீஃப் கேட்டு போரை முடக்கிவிட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தான் வென்று இருக்கும் என்று மக்களிடம் கூறினார். அதோடு நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக ராணுவத்தை ஒன்றிணைந்து ராணுவ புரட்சி செய்தார்.
அதில் வெற்றியும் பெற்றார். நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பொறுப்பேற்றார். அதன்பிறகு கூட அவர் தான் வகித்த ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யாமல் அதிபராக இருந்தார். 2008 ம்ஆண்டு வரை அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பாகிஸ்தானை கட்டுப்படுத்தினார்.
இப்போது மீண்டும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் ஆட்சியை கவிழ்க்கும் பட்சத்தில் இது ராணுவத்தால் சிதையும் 4வது ஆட்சியாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





