கட்டுரை படுதோல்வியில் முடிந்த சர்வ கட்சி கூத்து! July 31, 2023August 1, 2023 –நஜீப் பின் கபூர்– நாட்டில் நடக்கின்ற கபட நாடகங்கள் ஏமாற்றுக்கள் வஞ்சனைகள் தொடர்பாக நாம் தொடர்ந்தும் முன்கூட்டியே தகவல்களைச் சொல்லி வந்திருக்கின்றோம். அவற்றைப் பல்லாயிரக் கணக்கான நமது வாசகர்கள் படித்திருப்பார்கள்–பார்த்திருப்பார்கள். ஆனால் இதிலுள்ள வேதனையும் சோகமும் என்வென்றால் தாம் சார்ந்த சமூகம் சார்பில் ஆஜராகின்ற அரசியல் தலைமைகளும் அந்த வஞ்சனைகளுக்கும் ஏமாற்றுக்களுக்கும் துணை நிற்பதுதான். இது நமது தொடர் குற்றச்சாட்டு. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகள் விவகாரத்தில் இவ்வாறான ஒரு கபட நாடகத்தை ஆட்சியாளர்களும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வஞ்சக அரசியலில் இருந்து குடிமக்களை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் நாம் தொடர்ந்தும் களத்தில் நிற்பதால்தான் இவற்றைத் திரும்பத் திரும்ப சுட்டிக் கட்ட வேண்டி வருகின்றது. ஜனாதிபதி ரணில் அதிகாரத்துக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் சொல்லி வந்த செய்து வந்த காரியங்கள் பற்றி நாம் அடிக்கடி பொது மக்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தோம். அதிகாரத்தக்கு வந்த ரணில் இந்தியாவுக்கு முதல் முறையாக விஜயம் மேற்கொள்ள இருந்த வேளை நாம் இது பற்றிய சில தகவல்களைச் சொல்லி இருந்தோம். அந்த விஜயத்தின் பின்னர் இந்த இனப்பிரச்சினை தொடர்ப்பில் என்ன மாற்றங்கள் நம்பிக்கைகள் புதிதாக வந்திருக்கின்றன? ஜனாதிபதி இந்தியாவுக்கு போன போது அரசியல்வாதிகளும் ஏனையோரும் சொன்ன சில கருத்துக்களை இப்போது பார்ப்போம். இந்தியப் பிரதமர் மோடி 13 தொடர்பாக சில செய்திகளை இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு கடுமையான வார்த்தைகளில் சொன்னதாகக் கூறப்படுகின்றது என்று ஒரு மூத்த தமிழக ஊடகவியலாளர் சொல்லி இருந்தார். ‘சொன்னதாக‘ என்ற அவரது வார்த்தையில் இருந்து அவருக்கு அதுபற்றிய தகவலகள்; துல்லியமாகக் கிடைக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அவர் ஒரு மோடி ஆதரவலரும் கூட. அதே போன்று இங்கிருக்கின்ற ஒரு மூத்த தமிழ் அரசியல் தலைவர் அவர் இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பவரும் கூட, அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேசும் போது இந்தியப் பிரதமர் மோடி மொன்மையான வார்த்தைகளில் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக ரணிலுடன் பேசினாலும் அதில் ஒரு கடும் தொனியும் தெரிகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் அக்கரையை இனி இலங்கை வரவேற்காது என்று செய்தி சொல்லி இருக்கின்றது த ஹிந்து. ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னணியில்தான் இந்த செய்தியும் வெளியாக இருக்கின்றது. மேற்சொன்ன மூன்று வார்த்தைகளின் முரண்பாடுகளை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள், இதிலிருந்தே இந்தியப் பிரதமர் மோடி நம்பிக்கையாகவும் உறுதியாகவும் ஏதும் காரியம் பார்க்கவில்லை என்ற நமது வாதம் உறுதிப்படுகின்றது. அத்தோடு மோடியும் ரணிலும் என்ன பேசினார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் யானை பார்த்த குருடன் போல் ஆளுக்கொரு விளக்கத்தை இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகள்தான் மதில் மேல் நின்று வேலை பார்க்கின்றார்கள் என்றால், தமிழ் சமூகத்தில் உள்ள சிவில் சமூகத்தினராவது இனப்பிரச்சனை விவகாரத்தில் மிகப் பெரியதொரு ஏமாற்று நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை தாம் சார்ந்த சமூகத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பது எமது கோரிக்கை. இந்திய அரசு சார்பு பத்திரிகையான த இந்து ஈழத் தமிழர் விவகாரத்தை இந்தியா கொழும்பிடமே விட்டு விட்டது என்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. அதுவும் ரணில் இந்திய விஜயத்தின் பின்னர். இந்தக் கதையைத்தானே நாம் நெடுங்களமாக நமது வார இதழில் அடித்துச் சொல்லி வந்திருக்கின்றோம். எனவே தமிழ் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் வியாபாரிகள் உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல மாட்டார்கள். நாம் மேற்சொன்ன செய்திகள் அதனைத்தான் காட்டுகின்றன. ரணில் அழைக்கின்ற போது கொழும்புக்கு ஓடிவந்து ஏதோ நல்ல செய்தியை சமூகத்துக்கு எடுத்தக் கொண்டு தமிழ் மக்களிடம் போவோர் போலத்தான் இவர்கள் இன்று வரை 2009க்குப் பின்னிருந்து நடந்து கொண்டு வருகின்றார்கள். இதற்குப் பின்னரும் தமிழ் சமூகம் தமது அரசியல் தலைமைகளிடம் ஏமாறும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் மாற்று வழிகளை அவர்கள் கண்டறிய வேண்டி இருக்கின்றது என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. நமது ஜனாதிபதி ரணில் இந்திய போய் இறங்கியதிலிருந்து மோடி மனிப்பூர் விவகாரத்தில் மூக்குடைபட்டு பகிரங்க இடங்களில் தலைகாட்டுவதை தவிர்த்து வந்த ஒரு நேரமாக அது இருந்தது. எனவேதான் நாடாளுமன்றம் ஊடகங்களை அப்போது அவர் தவிர்த்து தலைமறைவாக இருந்து வந்திருந்தார். பிரதமர் மோடியும் ஜனாதிபதி ரணிலும் என்னதான் பேசிக் கொண்டார்கள் என்று இதுவரை அம்பலத்துக்கு வராவிட்டாலும் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பொருளாதார நலன்கள் சார்ந்த விடயங்களில் நாம் கடந்த வாரம் சொன்னது போல சில இணக்கப்பாடுகளை அவர்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் மக்கள் அங்கீகாரம் இல்லாத ஒரு தலைவர் இந்தியாவுடன் செய்து கொள்ளும் இணக்கப்பாடுகள் எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம் ஆகும் என்று கேள்வி தற்போது இலங்கை அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் எழுப்பப்பட்டு வருகின்றது. பெரும் செல்வாக்குடன் அதிகாரத்தில் இருந்த ரஜீவ்–ஜே.ஆர். பகிரங்கமாக போட்ட உடன்பாடுகள் கூட இன்று குப்பையில் எறியப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இரகசிய இணக்கப்பாடுகள் பேச்சுவார்த்தைகளை நாட்டுக்கு முன்வைத்து அதற்கு ஜனாதிபதி எப்படி அங்காரம் வாங்கப் போகின்றார் என்று நமக்குக் கேட்கத் தோன்றுகின்றது. அடுத்து இரு நாடுகளிலும் இந்தியாவிலும் இலங்கையிலும் தேர்தல்கள் அடுத்த வருடத்தில் நடக்க இருக்கின்றது. இங்கு அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும். அப்போது இவர்கள் இருவரும் போட்ட தீர்மானங்களின் நடைமுறை என்ன என்று அப்போது தெரியவரும். நாம் தொடர்ச்சியாகச் சொல்லி வருவது போல இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்த முன்னேற்றங்களும் இந்த மோடி–ரணில் சந்திப்பில் நடக்கவில்லை என்பது கண்கூடு. ஜனாதிபதி ரணிலின் இனப் பிரச்சினை தீர்வு விவகாரத்தில் நடக்கின்ற இந்த முன்னேற்றங்கள் பின்னடைவுகள் பற்றி இந்தியாவுக்கு இப்போது பொதுவாக ஆர்வம் இல்லை என்பதுதான் நமது கணக்கு. தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் தனக்கு அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளை சரி செய்வது பற்றித்தான் மோடி யோசிக்கின்றார். பொதுவாக இந்தியாவில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் போல் ஒரு பாரிய கூட்டணியை அமைத்திருக்கின்றது. கடந்த காலங்களைப் போல் அல்லாது இந்த முறை எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையில் கணிசமான முன்னேற்றம் தெரிகின்றது. கடந்த பொதுத் தேர்தல் தொடர்ப்பிலும் அரசியல் ஆய்வாலர்கள் மோடி சரிவு பற்றிய தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்த போது நாம் அப்படியான சரிவுகள் எமது கண்களுக்குத் தெரியவில்லை. பாரதிய ஜனதா சுலபமாக தனது இலக்கை அடையும் என்று அன்றும் சொல்லி இருந்தோம். ஆனால் தற்போதய நிலையில் மோடிக்கு எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி‘ ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்க்கிடையில் மணிப்பூர் நிகழ்வுகள் உலகலவிய ரீதியில் மோடிக்கு மட்மல்ல முழு இந்தியாவுக்குமே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. இது இந்திய அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நாங்களும் நம்புகின்றோம். அது எந்தளவுக்கு என்று சொல்ல இன்னும் காலம் இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் கொந்தளிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு மார்க்கம்தான் இப்போதைக்கு மோடிக்குத் தேவைப்படுகின்றது. இது அரசியலில் மோடி நிலை. சஜீதின் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிப்பது என்று துவக்கத்தில் சொன்னாலும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதில் பங்கேற்றிருக்கின்றார்கள். அணுராவின் தேசிய மக்கள் சக்தி சரத் வீரசேக்கர உதய கம்மன்பில ஆளும் தரப்பிலுந்து பிரிந்து போய் இருப்பவர்கள் ரணிலின் நடவடிக்கைகளுடன் அல்லது நாடகத்துடன் இணையத் தயாராக இல்லை என்பது தெரிகின்றது. இதனை வைத்து நான் தமிழர்களுக்குத் தீர்வு கொடுக்கத் தயாராகத்தான் இருந்தேன் எதிர்க் கட்சிகள் அதனைக் குழப்பிவிட்டான என ஜனாதிபதி ரணில் சொல்ல அதிக வாய்ப்புக்கள் இருந்தாலும் இது ரணிலின் நயவஞ்சக அரசியல் என்பது சிறு குழந்தைக்குக் கூடத் இப்போது தெரியும். எனவே ரணிலின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபட மாட்டது. கூட்டத்தில் பங்கு கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை ரணிலின் நாடகம் என்று சொல்லி இருக்கின்றார். ஒரு தீர்வுத் திட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்தேன் எதிர்க் கட்சிகள் அதற்று இடம் கொடுக்கவில்லை என்று காட்டவும் இது ஜனாதிபதி ரணிலுக்கு உதவக்கூடும். இந்தியாவும் இலங்கையும் இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்க்கமான ஒரு முடிவுக்குத் தயாராக இல்லை என்பதால் மோடி தரப்பு ரணிலின் சர்வ கட்சிப் பேச்சு வார்த்தைத் தோல்வியைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டாது. அவர்கள் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் இது இருக்க வேண்டும். ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த நாளில் இருந்தே ரணிலுக்கு இந்தியாவின் பக்க துணை தேவைப்படுகின்றது. அதற்காக அவர் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையில் எடுத்தார். அவர் எடுத்த எந்த நகர்வுகளும் அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. செல்லவும் வாய்ப்புக்கள் இல்லை. எனவே ஜனாதபதி ரணில் எங்களை இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றார். என்று அந்த சமூகம் சார்ந்த கட்சிகளே அவருக்கு முகத்திற்கே சொல்லியும் இருக்கின்றன. என்றாலும் பெரியவர் அழைக்கின்ற போதெல்லாம் கொழும்புக்கு ஓடிப்போவதை அவர்கள் செய்து கொடுதான் வருகின்றார்கள். சீ…சீ… இந்தப் பழம் உங்களுக்கு ஒருபோது எட்டாது என்று நாம் தொடர்ச்சியாக சொன்னாலும் தமிழ் தலைவர்கள் முயற்சியைத் தொடர்கின்றார்கள். அது அவர்களின் தொழில் என்பதால் அப்படி. இதன் பின்னரும் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். தனது கதிரை கூட அடுத்தவன் கையில் இருக்கின்ற போது, இவன் எங்கே நமக்குத் தீர்வு தரப்போரான் என்று இந்தத் தலைவர்கள் இன்று வரை யோசிக்கவில்லை. அதனால்தான் அவர்களின் கொழும்பு ஓட்டம் தொடர்கின்றது. இந்தியப் பயணத்தை தொடர்ந்து ஏதோ இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு இன்னும் தான் முயன்று கொண்டுதான் இருக்கின்றேன் என்பதனை ஜனாதிபதி காட்ட புதிய வெளியீடாக திரைக்கு வந்தது சர்வ கட்சி நாடகம். அதனைத்தான் இப்போது நாமும் பார்க்கின்றோம், பேசப்போகின்றோம். என்னதான் தேர்லுக்கு முட்டுக் கட்டைகளை ஜனாதிபதி ரணில்–ராஜபக்ஸாக்கள் போட்டாலும் ஜனாதிபதி, பொதுத் தேர்தல் என்பவற்றை அவர் விரும்பியோ விரும்பமலோ ஓரிடத்தில் சந்தித்துத்தான் ஆகவேண்டும். பொருளாதார நலன்களுக்காக இந்தியாவை தொடர்ந்தும் உதவிக்கு வைத்தக் கொண்டு தேர்தல்களைச் சந்திக்கின்ற போது சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைத் தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டுக்காகத்தான் தற்போது இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த சர்வகட்சி நாடகத்தை ரணில் திரைக்கு விட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் அவர் எந்தளவுக்கு வலுவாக இருக்கின்றார் என்பதனை மற்றுமொரு இடத்தில் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். வருகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஒரு அம்சமாக இதனை உள்வாங்கிக் கொள்ளவதற்காகத்தான் சர்வ கட்சி கூட்டத்தை அவர் கூட்டி இருக்கின்றார். முதலில் ஆளும் தரப்பு தனது நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களோ நாங்கள் வேறு நமது கொள்கைகள் வேறு யானை வேறு மொட்டு வேறு இதனால் ரணில் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருகின்றார்கள். இதனால்தான் சரத் வீரசேக்கர போன்றவர்கள் ரணிலுக்கு எதிராகப் போர்கொடி தூக்கி இருக்கின்றார்கள். இன்று ரணிலின் மிகப் பெரிய விசுவாசியாக இருக்கின்ற பிரசன்ன ரணதுங்ஹ கூட இனப்பிரச்சனை விவகாரத்தில் ரணிலின் நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்க்கின்றார். அப்படி இருக்கும் போது இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வு நாடகமும் நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை பெற்றுக் கொள்ளவது என்பதும் நடக்கினற விடயங்களா? இதற்கு நமது தமிழ் அரசியல் தலைமைகள் தருகின்ற பதில் என்ன? தமிழ் உறுப்பினர்கள் கதையை மட்டும் கேட்டுக் கொண்டு தன்னால் 13 குறித்து முடிவுகளை எடுக்க முடியாது. தனக்கு இருப்பதோ ஒரே ஒரு உறுப்பினர். அனைவரின் விருப்பத்தில் பேரில்தான் தன்னால் முடிவுகளை எடுக்க முடியும். இதனைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் வெளியேற வேண்டியதுதான். இது சர்வகட்சி கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் சொன்ன கதை. இதற்குப் பின்னரும் இனப்பிரச்சனைக்கு ரணில் தீர்வு தருவார் என்று எவராவது கூறுவார்களாக இருந்தால் அவர்கள் மீதுதான் அந்த சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். அல்லது அவர்களது மூளைகளைப் பரீசோதிக்க வேண்டி இருக்கும். நன்றி: 30.07.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 21, 2024October 21, 2024 ‘சின்வார் கொல்லப்பட்ட வீடு என்னுடையதுதான்’ October 19, 2024October 19, 2024 சின்வார் மரணம் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமா? October 19, 2024October 19, 2024 ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்கு கட்சிகள் பச்சைக் கொடி! October 18, 2024October 18, 2024 யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் எப்படி கொன்றது? October 14, 2024October 14, 2024 வேட்புமனு சமர்ப்பனமும் புதிய நாடாளுமன்றமும்! October 7, 2024October 8, 2024 இஸ்ரேல் ஹமாஸ்: ‘காயம், வலி, ஆதரவற்ற நிலை’- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை Previous Story ஜாமியுல் அஸ்ஹர் மாணவ தலைவர்களுக்குப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு-2023 Next Story அரியானா: மசூதி எரிப்பு, இமாம் கொலை - நேரடி ரிப்போர்ட்
October 7, 2024October 8, 2024 இஸ்ரேல் ஹமாஸ்: ‘காயம், வலி, ஆதரவற்ற நிலை’- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை