-நஜீப் பின் கபூர்-
நமது நாடு 1948ம் ஆண்டு பெப்ரவாரி 04ம் திகதி சுதந்திரம் பெற்றது. அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்தவர்கள் நம்மை வெற்றிகரமாக ஏமாற்றியும் வந்திருக்கின்றார்கள். அவர்கள் உலகில் நம்மை ஆச்சர்யம் மிக்க நாடாக மற்றுவதாக சொல்லி இருந்தார்கள். அந்த ஆச்சர்யம் என்ற பதம் இன்று வளர்ந்திருக்கின்ற அமெரிக்கா சீனா மற்றும் டுபாய் கட்டார் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை மிச்சியதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சந்திர மண்டலத்தில் இருந்து சோறு என்றார்கள் நாடு சிங்கப்பூராகின்றது என்றார்கள். இந்த அனைத்துக் கதைகளும் அரசியல்வாதிகள் நமக்கு விட்ட நகைச்சுவைகள் என்பதை இப்போதுதான் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். யதார்த்தத்தில் இன்று என்ன நடந்திருக்கின்றது. பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாதா கேவலமான நிலைக்கு நிலைக்கு அவர்கள் நாட்டை ஆளாக்கி தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உலகில் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றாகவும் எம்மைக் கொண்டு வந்து கேவலப்படுத்தி இருக்கின்றார்கள்.
ஜனநாயக நாடுகளில் பெரும்பான்மைக்குத்தான் முக்கியத்துவம். அதன்படிதான் தீர்மானங்கள் என்றும் அங்குள்ள யாப்புக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் யாரை பதவிகளில் இருந்து தேர்தல் மூலம் விரட்டியடித்தார்களோ அவர்களையே அதிகார ஆசனத்தில் அமர்த்தி உலகிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது நமது அரசியல் யாப்பு. மொட்டுக் கட்சியினர் எதிரணியில் இருந்த போது யாரை எல்லாம் தண்டிப்போம் என்று கூக்குரலிட்டார்களோ அவர்களையே அதிகாரமிக்க பதவிக்கு அமர்த்தி தற்போது இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள் நமது அரசியல்வாதிகள்.
ஆளும் தரப்பு என்னதான் மக்களின் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் இலக்காகி இருந்தாலும் அதனைப் பாவித்து அதிகாரத்தில் இருப்போருக்கு அச்சுறுத்தல்களை கொடுக்க முடியாத வகையில் பிரதான எதிர்க் கட்சி கையாளாக நிலையில் நிலையில் இருந்து வருகின்றது. ஆளும் தரப்பில் இணைந்து பதவிகளை வாங்கிக் கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பதற்குத்தான் அவர்கள்களில் கணிசமானவர்கள் முண்;டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் நாட்டில் எந்தத் தேர்தல்களையும் ஆட்சியாளர்கள் உரிய காலத்தில் வைக்கத் தயாரில்லாத நிலையும் இன்று காணப்படுகின்றது. அது அப்படி இருக்க…
பதவியில் அமர்வதற்காக மதத்தை இனத்தை குலத்தைக் கூட அரசியல்வாதிகள் அவ்வப்போது சந்தைப்படுத்தி வந்திருக்கின்றார்கள் இந்த அரசியல் இன்று நேற்றுத் துவங்கியதல்ல. 1948ல் நாடு சுதந்திரம் அடையும் போது இலங்கையில் சமசமாஜக் கட்சி செல்வாக்குடன் இருந்தது. அவர்கள் அதிகாரத்தில் வந்துவிடுவார்கள் சமவுடமைவாதிகள் அப்படி அதிகாரத்தைக் கைப்பற்றினால் பௌத்த சமயத்துக்கு பெரும் பாதிப்பு-அழிவு என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. எனவே மக்கள் சமசமாஜக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று வலதுசார ஐதேக. சிங்கள வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மதம் இனம் குலம் கோத்திரம் என்பன அன்று முதல் இன்று வரை நமது அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.
காலத்துக்கு எற்றவாறு இந்த மதம் இனம் குலம் மொழி என்பவற்றை எந்த இடத்தில் எப்படி உசுப்பேற்றி வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் வாக்குகளைக் கொள்ளையடிக்கலாம் என்ற யுத்திகளை நமது அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக பிரயோகித்து வந்திருக்கின்றார்கள். அதன் உச்ச கட்டத்தை நாம் கடந்த காலங்களில் தெளிவாகப் பார்த்தோம். டாக்டர் சாபி கதை மலட்டுக் கொத்து மலட்டு உள்ளாடைகள் பரப்புரைகளில் நாம் இவற்றைப் பார்த்தோம்.
இன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொல் பொருள் ஆய்வுகள் மகவலி அதிகாரசபை என்பவற்றின் செய்பாடுகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்ட துறையினருக்கு கட்டளை போட்டாலும் அதனை அதிகாரிகள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி அரசாங்கம் அதிகாரிகள் செயல்பாடுகள் அப்படி நகர்கின்றபோது,
பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததில் பிலிப்பைஸ் அதிபர் மாக்கோர்ஸ் பெயர் முன்னணியில் இருக்கின்றது. ஆனால் இன்று அவரையும் விஞ்சிய கொள்ளைக்கார அரசியல்வாதிகள் பலர் உலகில் பல இடங்களில் தோன்றி இருக்கின்றார்கள். இது நமது நாட்டுக்கும் இன்று பொருந்தும்.
உலகில் மிகவும் உன்னதமான ஆட்சிமுறை ஜனநாயகம்தான் என்ற கருத்து இன்று வரையிலும் மக்களிடத்தில் இருந்து வருகின்றது. அதில் என்னதான் நல்ல அம்சங்கள் இருந்தாலும் சில நாடுகளில் அதற்குத் தெரிவாகின்ற ஆட்சியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் தொடர்ப்பில் சமகாலத்தில் நிறையவே நம்பகத் தன்மையற்ற கருத்துக்களும் கடும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. சில நாடுகளில் ஜனநாயக ரீதியில் தெரிவாகின்ற மக்கள் பிரதிநிதிகள் பார்க்கின்ற வேலைகள் இன்றும் ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகின்ற கட்டுமிரண்டித்தனத்தையும் தோற்கடிக்கும் அளவில் இருக்கின்றது.
மக்கள் பிரதிநிதி என்ற பதம் அனேகமாக ஜனநாயக நாடுகளில் உச்சரிக்கப்டுக்கின்ற ஒரு வார்த்தையாகத்தான் இருந்து வருகின்றது. ஜனநாயகம் என்று பார்க்கின்ற போது பண்பானது நாகரிகமானது-மென்மையானது என்ற எண்ணம் இருந்தாலும் சில இடங்களில் இது அடவடித்தனமானது கட்டுமிராண்டித்தனமானது என்றும் வகைப்படுத்த வேண்டிய இடங்களும் நாடுகளும் இதில் இருக்கின்றன. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் நிலவும் ஜனநாயகத்திற்கும் ஆசிய நாடுகள் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் பின்பற்றப்படும் ஜனநாயக முறைமைகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் காணப்படும் கட்சி அரசியலிலும் ஜனநாயகம் மேலோங்கிக் காணப்படுகின்றன. அதே நேரம் ஆசிய நாடுகளில் பலவற்றில் காணப்படும் கட்சி அரசியலில் குடும்ப ஆதிக்கமே மேலோங்கி இருப்பதை பார்க்க முடியும். இது ஒரு வகையில் மன்னராட்சிக்கு ஒப்பானது. இந்திய இலங்கை போன்றவற்றில் பெரும்பாலும் இந்த முறைதான் அமுலில் இருக்கின்றது. என்றூலும் அவ்வப்போது ஆபூர்வமாக அதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
கட்சி அரசியலில் ஜனநாயகமற்ற ஒரு தன்மையே பொதுவாக இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு அரசியல்வாதி தனது குடும்ப ஆதிக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நிலைதான் பெரும்பாலும் காணப்படுகின்றது. வடக்குக் கிழக்கை விட தெற்கில் இந்த ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றது. அதனால்தான் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்போரை மையமாக வைத்து குடும்ப ஆதிக்கம் தேர்தல்களில் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இங்கு கட்சி செயல்பாட்டாளர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. வாரிசு அடிப்படையில்தான் அரசியல் அதிகாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது அல்லது கைமாறுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பாக நேரடியாகப் பேசுவாதாக இருந்தால் இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சியாளர்களை எடுத்துக் கொண்டால் டீ.எஸ், பண்டாரநாயக்க ஜே.ஆர்., ராஜபக்ஸாக்கள் மற்றும் பிரமேதாசக்கள் ஆதிக்கம் இன்றும் அரசியலில் பலமாக இருக்கின்றது. அதற்கு அடிப்படைக் காரணம் காட்சி அரசியலில் ஜனநாயகம் முறையாக பின்பற்றப்படாமையே என்று கூறலாம்.
தந்தை வயதாக இருக்கும் போது அவர் இடத்திற்கு மகன்-மகள் பேரன் என்ற இந்த வாரிசு முறை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தேசிய அரசியல் முதல் கிராம அரசியல்வரை இது வேறுன்றி இருக்கின்றது. இதற்க நிறையவே உதாரணங்களைச் சொல்ல முடியும் அது மாவட்ட மட்டத்தில் இருந்து தொகுதி வரை தொடர்கின்றது. அனேகமான மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் அங்கு குடும்ப ஆதிக்கம்தான் சுதந்திரத்துக்குப் பின்னிருந்து இன்று வரை தொடர்கின்றது. இதனால் இங்குள்ள ஜனநாயகம் புனிதமாற்றதாகவும் அதன் எதிர்பார்ப்புக்களுக்கும் அடிப்படைக் கொள்கைகளுக்கும் மாற்றமாக செயல்பட்டு வருகின்றது.
இங்கு உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்புக்களும் தமது தனிப்பட்ட கட்சிகள் குடும்ப அரசியல் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில்தான் உருவாக்கப்படுகின்ற அல்லது அடிக்கடி மாறுதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதனால்தான் இவற்றில் திருப்தியற்ற நிலையும் அடிக்கடி திருத்தங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
1978க்குப் பின்னர் ஜே.ஆர். காலத்தில் உருவாக்கபட்ட அரசியல் யாப்பு நாட்டில் சமூக ரீதியிலும் அரசியல் பொருளாதார ரீதியிலும் பெரும் குழப்ப நிலையைத் தோன்றுவித்திருக்கின்றன. மாவட்ட ரீதியிலான நாடாளுமன்ற உறுப்புரிமை தெரிவு காரணமாக மாட்ட ரீதியில் அரசியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருப்பதற்காக ஒழுங்கமைப்பை செல்வாக்கான அரசியல் வாதிகள் தன்னலான அனைத்து முயற்ச்சிகளையும் மேற் கொண்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் ஓர் அரசியல் தலைமைத்துவம் கட்சிகளில் இன்று செயல்பட்டு வருகின்றது.
இந்தப் பயணத்தின் தற்போத வடிவம் ஜனநாயக பயங்கரவாதம் அல்லது அடக்குமுறை என்றளவில் வந்து நிற்கின்றது. எனவேதான் சட்டம் நீதி ஒழுங்குமுறை யாப்பு என்பன கண்டுகொள்ளப்படாத நிலையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள்தான் நமது நாட்டு அரசியல் ஜனநாயகம் என்று இது வந்து நிற்க்கின்றது.
சட்டம் நீதி நியாயம் சம்பிரதாயங்கள் மற்றும் யாப்பு என்பன இன்று ஏட்டுச் சுரக்காய் நிலைக்கு வந்திருக்கின்றன. எனவேதான் இனம் மதம் அதிகாரத்தில் இருப்போர் எதிரணியினர் விஐபிக்கள் சாதாரண குடிமக்கள் என்று ஆள் பார்த்து அது அமுலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 2048ல்தான் நாடு அபிவிருத்த அடைந்த நாடாக வருகின்றது. அதுவரைக்கும் யாரும் தேர்தல் என்றோ ஜனநாயகம் என்றோ வாய்திறக்கக் கூடாது என்றளவுக்கு ஆட்சியாளர்கள் நாட்டை அடக்கி ஆள முனைகின்றார்கள். அதனால்தால் ஒலிபரப்புச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களை நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் அமுலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மக்கள் இன்று தேர்தல்களில் ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அப்படித் தேர்தல்களை வைத்தாலும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐம்பது சதவீதமான வாக்குகள் கூடப் பெற மாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் அண்மையில் பகிரங்கிமாக கூறி இருக்கின்றார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்தவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து தேர்தல் மூலம் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றி கொள்ள முடியாதவர் இப்படி மக்கள் உணர்வுகளை இடைபோடுவது எந்த அடிப்படையில் என்று நமக்குப் புரியவில்லை.
அவர்தான் சுதந்திரம் பெற்று நூற்றாண்டு நிறைவடையும் (1948-2048) போதுதான் நாடு அபிவிருத்தி அடையும் என்ற கண்டுபிடிப்பையும் நமக்கு சொல்லி இருக்கின்றார். அதுவரைக்கும் ரணில் ஆட்சியை எதிர்க்க வேண்டாம். அவருக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எவருமே ககையேட்காத நிலையில்தான் அவர் நாட்டை காப்பாற்றி வருகின்றார் என்று அவரது விசிரிகள் கதைக்கின்றார்கள். இப்படியான கதைகளைச் சொல்லிச் சொல்லியே இன்று வரை அரசியல்வாதிகள் காலத்தை ஓட்டி விட்டார்கள் இனி அரசியல்வாதிகள் கதைகளை நம்புவதா அல்லது மக்களே தீர்மானங்களை எடுப்பதா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதற்கிடையில் இன்று இருக்கின்ற பிரதமர் தினேஸ் குனவர்தனாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் ஒரு கௌரவப் பதவியில்தான் இருக்கின்றார். அதுதான் அவரின் நிலை. அதே போன்று ஜனாதிபதியாக இருக்கின்ற ரணிலும் ராஜபக்ஸாக்களினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்கின்றார். அவர்கள் ரணிலுக்கு தனது தீர்மானங்களை எடுக்க முடியாத அளவுக்குக் கட்டுப்படுத்தி வருகின்றார்கள். இப்படி ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லி இருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம. அவர் கருத்து யதார்த்தமானது என்றுதான் கூற வேண்டும்.
இடைக்கால நிருவாக சபை!
பிந்திய தகவலாக வந்திருப்பது உள்ளூராட்சித் தேர்தலும் கிடையாது மாகாணசபைத் தேர்தலும் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் நேரடியாகவே தமிழ் தலைவர்களிடம் சொல்லி விட்டார். இடைக்கால நிருவாக சபையைத்தான் தர முடியும் என்று நேரடியாகவே அவர்களிடம் ஜனாதிபதி சொல்லிவிட்டார். இந்த இடைக்கால சபை யோசனையும் காலம் கடத்துக்கின்ற ஒரு கதை மாட்டுமே.
இதற்கு முன்னைய சந்திப்பில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ் தலைவர்களின் கண்டிப்பான கோரிக்கைக்கு பதில் கிடைத்து விட்டது. தமிழ் தலைவர்கள் ஆளுக்கோர் யோசனையை முன்வைத்து பேரித் தலைவர்களுக்கு வாய்ப்பாக களத்தை மாற்றி இருக்கின்றார்கள். இந்த இடைகால சபை என்பது காலம் கடத்தும் அரசாங்கத்தின் உத்தி மட்டுமே பொறுத்திருந்து பாருங்கள்.
நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்