நிமிஷா பிரியா விவகாரம்: ரத்த பணம்னு நிதி மோசடி பண்றாங்க.. 

 கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் ஆவேசம்

மத்தியஸ்தம் என்ற பெயரில் சாமுவேல் ஜெரோம் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பதாக ஏமனில் கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் அப்துல் ஃபதா மஹ்தி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நிமிஷா பிரியா விவகாரத்தில் பணத்தைத் திரட்டி மோசடி செய்துள்ளதாகவும் ஜெரோமை அப்துல் மஹ்தி சாடியுள்ளார். இந்த விவகாரத்தில் நிமிஷா பிரியா குடும்பத்தினரும் ஏமாற்றப்பட்டுள்ளதாக சேவ் நிமிஷா கவுன்சிலும் கூறியிருக்கிறது.

ஏமன் நாட்டில் மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா சிறையில் இருக்கிறார். அவருக்குக் கடந்த வாரம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இருப்பினும், பல்வேறு தரப்பினரும் எடுத்த முயற்சிகளால் மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. நிமிஷா பிரியா வழக்கு அந்நாட்டுச் சட்டப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பைக் கோரலாம். அவர்களுக்கு தியா எனப்படும் ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பைக் கோரலாம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. மஹ்தி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நிமிஷா பிரியா வழக்கில் இப்போது மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திடீர் திருப்பம் அதாவது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபதா மஹ்தி இப்போது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதாவது சமூக ஆர்வலராகத் தன்னை காட்டி கொண்ட சாமுவேல் ஜெரோம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்துல் ஃபதா மஹ்தி சாடியுள்ளார். நிமிஷா பிரியா பெயரில் திரட்டப்பட்ட நிதியை ஜெரோம் தவறாகப் பயன்படுத்தியதாக அப்துல் ஃபதா மஹ்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோசடி

ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞர் போலக் காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாக அப்துல் ஃபதா மஹ்தி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினரின் ஒப்புதலோ அல்லது தகவலோ தெரிவிக்காமலேயே கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதியைத் திரட்டியதுக்காக அப்துல் ஃபதா மஹ்தி சாடியுள்ளார்.

இதன் மூலம் சுமார் $40,000 நன்கொடைகளை வசூலித்ததாக மஹ்தி குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட ஜெரோமால் மறுக்க முடியாது என்றும் மஹ்தி காட்டமாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஏமன் அதிபர் மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்த பிறகு, தலைநகர் சனாவில் ஜெரோமை சந்தித்தேன்..

ஜெரோம் மத்தியஸ்தம் என்ற பெயரில் எனது சகோதரர் சிந்திய ரத்தத்தை வைத்து வியாபாரம் செய்கிறார். அவர் தனது மோசடியான கதையை நிறுத்தவில்லை என்றால் உண்மை எல்லாமே வெளியே வரும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

நிமிஷா பிரியா வழக்கு!

இதற்கிடையில், சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலும் தங்களுக்கும் ஜெரோமுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறது.

கடந்த டிசம்பர் 27ம் தேதி இந்தியத் தூதரகம் மூலம் அனுப்பப்பட்ட $20,000 தொகையைப் பெற்ற மறுநாளே ஜெரோம் குழுவை விட்டு வெளியேறியதாக கவுன்சிலின் சட்ட ஆலோசகர் சுபாஷ் சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களால் ஏற்பட்ட மன வேதனைக்காகத் தலால் மஹ்தியின் குடும்பத்திடம் கவுன்சில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நிமிஷா பிரியா மற்றும் தலால் மஹ்தி என இரு குடும்பங்களும் ஏமாற்றப்பட்டதாகச் சந்திரன் கூறினார்.

Previous Story

திங்கட்கள் மாரடைப்பு அதிகம்! ஆய்வில்  ஷாக் தகவல்!

Next Story

LIVE - 2nd T20- Dutch-Bangla Bank Bangladesh vs Pakistan T20I Series 2025