நேற்று அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியிருந்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழித்தது.
இதற்கு பதிலடியாக ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தின் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு தாக்கியிருக்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈரான், தாக்குதல் நடத்திய இடம் என்பது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய சொத்து என்று கூறியுள்ளது.
ஈரானின் அணு ஆயுதம் உலக நாடுகளுக்கு எதிராக மாறும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்து வந்தது. அதேபோல் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் சேதமடைந்தன.

இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. மாறி மாறி நடத்தும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும் ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதால், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை எனக்கூறி ஈரான் நிராகரித்தது.
எனினும் ஈரானுக்கு 2 வாரங்கள் கெடு வழங்கி இருப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ஈரானுடன் நேரடி போரில் ஈடுபடுவதா? இல்லையா? என 2 வாரங்களில் முடிவு எடுப்பேன் என்றும் அறிவித்து இருந்தார்.
ஆனால் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டவில்லை.. இதையடுத்து நேற்று அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டின்
போர்டோ,
நட்டான்ஸ்,
இஸ்பகான்
ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.
அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
இந்த குண்டுகள் பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் உள்ளவற்றையும் அழித்துவிடும். ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் மலையை குடைந்து மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டது ஆகும்.
எனவே அதை அழிக்க ‘பங்கர் பஸ்டர்’ குண்டுவை முதல் முதலாக போட்டிருந்தது அமெரிக்கா. இந்த குண்டுவீச்சில் ஈரானின் மேற்படி அணுசக்தி தளங்கள் பெருத்த சேதத்தை சந்தித்திருக்கின்றன.
இதனிடையே தங்களுடைய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியதை ஈரானும் உறுதி செய்துள்ளது. எதிரிகளின் இந்த அச்சுறுத்தலை பார்த்து அணு திட்டங்களை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அந்த நாட்டு அணுசக்தி அமைப்பு கூறியிருந்தது.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தனது சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்திருந்தார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் இதற்கு பதிலடியாக வெளியிட்ட பதிவில். ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் சட்ட விரோத அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா துரோக ராஜதந்திரத்தை கடைப்பிடித்து இருப்பதை உலகம் மறந்து விடக்கூடாது.
அமெரிக்க ராணுவ அத்துமீறல் மற்றும் இந்த முரட்டு ஆட்சியால் செய்யப்பட்ட குற்றங்களுக்கு எதிராக முழு பலத்துடன் எதிர்க்கவும், ஈரானின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக , கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படையின் தளமான அல்-உதெய்த் தளத்தை குறிவைத்து ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இதில் அந்த தளம் கணிசமான சேதத்தை சந்தித்துள்ளது.
கத்தார் தலைநகர தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல்-உதெய்த் தள விமான தளம் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக இது இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்று வருகிறார்கள். இங்குதான் நேரடியாக ஈரான் கைவைத்துள்ளது.
இதனிடையே கத்தார் தளம் என்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க விமானப்படையின் தலைமையகம் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய சொத்து என்றும் ஈரான் ராணுவம் அறிக்கையில் கூறியுள்ளது.
ஈரான் தனது பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எந்த சூழ்நிலையிலும் பதில் அளிக்கும் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் ராணுவம் பதில் அளித்துள்ளது.





