கடந்த 2016 அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகைக்கு 1 கோடி ரூபாய் தந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் வரும் 10ல் அவருக்கான தண்டனையை அறிவிக்க உள்ளது.
இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக, பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார்.
இவ்வாறு தரப்பட்ட பணத்துக்கு பொய்க்கணக்கும் எழுதியுள்ளார். இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்; வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்துள்ளார்.
டிரம்பின் வழக்கறிஞர்கள், ‘தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும். டிரம்ப் அதிபராக பதவியேற்கவுள்ளதால், அவருக்கு உள்ள சட்டப் பாதுகாப்பின் அடிப்படையில் வழக்கை கைவிட வேண்டும்’ என வலியுறுத்தினர்.
ஆனால், நீதிபதி இதை ஏற்க மறுத்துவிட்டார். ‘டிரம்ப் 20ம் தேதி தான் பதவியேற்க உள்ளதால், 10ம் தேதி தண்டனை விதிக்க, எந்த சட்ட தடையும் இல்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்பட்டதால் தான் நீதி நிறைவேற்றப்படும்’ என்று நீதிபதி கூறினார்.
தண்டனை தேதிக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தை நாடி, தண்டனையை நிறுத்துவதற்கும் டிரம்ப் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.