-ச. ஆனந்தப்பிரியா-
எனது உடல் நிலை பற்றி சில ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் வேலு.கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்து தாயகம் திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இசைக்கோர்ப்புக்காக இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு, லைகா புரொடக்ஷன்ஸ் சிஇஓ தமிழ்க்குமரன் ஆகியோர் லண்டன் சென்றனர். இது குறித்தான அதிகாரபூர்வமான தகவலை படக்குழு சமூக வலைதளங்களில் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து திரும்பிய போது நடிகர் வடிவேலு, சுராஜ் ஆகியோருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்தது.
மேலும், ஓமிக்ரான் என சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் வடிவேலு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நடிகர் வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன், ‘ஹலோ, நல்லா இருக்கேன்பா’ என்ற வழக்கமான உற்சாக குரலிலேயே ஆரம்பித்தார். என்ன ரொம்ப சீரியசா இருப்பதாக தகவல் வருகிறதே என்று கேட்டதும் விரிவாகவே அது பற்றி பேசினார் வடிவேலு.
“ஒன்னுமில்ல, சிறிய அளவில் 1.2 என்ற அளவில்தான் வைரஸ் பாதிப்பு. அதனால் இருமல் வந்துவிட்டது. அதற்குள் நான் கண் முழிக்கவில்லை. கவலைக்கிடமாக உள்ளேன் என தவறான செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன,” என்றார் வடிவேலு.
“அந்த செய்திகளைப் பார்த்து என் மனைவிக்கு பயங்கர வருத்தம். ‘இப்படி எல்லாமா செய்தி போடுவார்கள்? நன்றாகத்தானே பேசி கொண்டிருக்கிறீர்கள்?’ என அது போல செய்தி பரப்பியவர்களை திட்ட ஆரம்பித்து விட்டார். அந்த செய்திகள் எதையும் நம்ப வேண்டாம்.
நான் நன்றாகவே இருக்கிறேன். இன்றோ நாளையோ இன்னும் இரண்டு நாட்களில் பரிசோதனை முடிந்து நான் வீட்டுக்கு திரும்பி விடுவேன். பிறகு என்ன? திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் இருந்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படப்பிடிப்பு தொடங்கும். வழக்கமான உற்சாகத்துடன் ரசிகர்களை மீண்டும் திரையில் சந்திப்பேன்” என்கிறார் நம்பிக்கையாக.