-நஜீப் பின் கபூர்-
தேர்தலுக்காக மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதாகச் சொல்லி இருக்கின்ற அரசாங்கம், அதே நேரம் ஐஎம்எப் இரண்டாம் கட்ட கடனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மீது அசாதாரணமான வட் வரியை போட்டு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதானால் சயனைட் கலந்த தேனில் என்று கூட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு சலுகைகளைச் சொல்ல முடியும். பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பமும் மாதாந்தம் அரசுக்கு முப்பத்தி இரண்டு ஆயிரம் ரூபாய்களை (32000) நேரடியாகவும் மறைமுகமாகவும் புதிதாக வரிகளைச் செலுத்த வேண்டி இருக்கின்றது. நமது இந்தத் தகவல்கள் மூலம் எதிர்வரும் நாட்கள் எவ்வளவு தூரம் மக்களுக்கு துன்பங்கள்-துயரங்கள் நிறைந்ததாக அமையப் போகின்றது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
இதனால் தேர்தல் பற்றிய நம்பிக்கைகளும் ஆயத்தங்களும் எவ்வளவு தூரம் யதார்த்தமாக அமையப் போகின்றது என்பதில் நிறையவே சிக்கல்கள்-குழப்பங்கள் இருந்து வருகின்றன. என்னதான் உலகில் தலை சிறந்த ஜனநாயக நாடு அல்லது ஜனநாயகத்தின் ஆசான் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கடைசியக நடந்த தேர்தலில் தானக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் அதிகாரத்தில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்; விலகிச் செல்லாது வன்முறையில் ஈடுபட்டதும் நமக்குத் தெரியும். இதனை முன்கூட்டியே அப்போது ஜோ பைடன் தனது தேர்தல் பரப்புரைகளிலும் எச்சரித்து வந்தார். அதே போன்று ட்ரம்ப் குழப்படிகளிலும் இறங்கினார். இது தொடர்பான வழக்குகளும் தற்போது அங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
அன்று தென் அமெரிக்க-பிரேசிலில் அதிகாரத்தில் இருந்த பொல்சனோரா இதே பாணியில் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு எதிரணி வேட்பாளர் என்றிருந்த லூலாத சில்வா யாப்பையும் நீதியையும் மதித்து நடந்து கொள்ளும் சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்துமாறு படையினரிடம் அன்று பகிரங்க வேண்டு வேண்டுகோள் விடுத்த சர்வதேசத்தையும் இது விடயத்தில் விளிப்படையச் செய்திருந்தார். இதனால் பொல்சனோராவுக்கு தேர்தலை நடத்த வேண்டி வந்தது. அந்தத் தேர்தலில் லூலாத சில்வா வெற்றி பெற்று அதிகாரத்துக்கும் வந்தார்.
ஒரு ஆட்சியத் தலைவர் வன்முறையாக நடந்து கொள்ள முனையும் போது, அவர் மனநிலை அப்படி இருக்கின்றது என்றால் அங்கு அரசியல் யாப்பு நீதி சட்டம் அனைத்தும் கோமாவிற்குக் கொண்டு செல்லப்படும். இதனை நாம் உலகில் பல இடங்களில் பார்த்திருக்கின்றோம். ஏன் உள்நாட்டிலும் கூட அப்படியான ஒரு அச்சம்தான் வருகின்ற தேர்தல்கள் தொடர்பிலும் இருந்து வருகின்றது. என்னதான் தேர்தல் என்று ஜனாதிபதி ரணில் தினந்தோரும் ஊடகங்கள் முன் பேசினாலும் இந்த மனிதன் தேர்தலை வைப்பாரா என்ற சந்தேகம் அரசியல் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்ல பாமர மக்களிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றது.
இப்படியான ஒரு நிலை இங்கும் ஏற்படலாம் என்ற ஒரு அச்சம் இருக்கத்தான் செய்க்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது ஆட்சியாளர்கள் தமது அதிகாரிகளை வைத்து செய்த அட்டகாசங்களை இந்த நாட்டில் உள்ள மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே போன்று இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட எழுத்து மூல உடன்படிக்கைகளின் படி அரசியல் யாப்பிலும் பதின்மூன்றாம் திருத்தத்தை செய்து செய்து அது சட்டமாக நாட்டில் இருக்கின்ற போதும் மாகாணசபைத் தேர்தலுக்கு இதே ஆட்சியாளர்கள் ஆப்பு வைத்திருக்கின்றார்கள். பிராந்திய வல்லரசான இந்தியாகூட இது விவகாரத்தில் கையாளாகாத ஒரு நாடாக இன்றுவரை இருந்து வருகின்றது.
மொட்டுக் கட்சியின் தலைவராக இருக்கின்ற மஹிந்த ராஜபக்ஸ தான் அதிகாரத்தில் இருந்த நாட்களில் எந்த தேர்தலையும் தள்ளிப்போட்டது கிடையாது. இன்று தேர்தல்கள் தள்ளிப்போவதற்குதான் எந்த வகையிலும் காரணம் அல்ல என்று தன்னை ஒரு மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று காட்டிக் கொள்கின்றார். ஆனால் தற்போதய ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸாக்களின் நிகழச்சி நிரல்படிதான் நடந்து கொண்டு வருகின்றார் என்பதனை இந்த நாட்டில் எத்தனை பேர் புரிந்து கொள்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியாது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2024 வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது மொட்டுக் கட்சி சொந்தக்காரர்களான ராஜபக்ஸ மேற் கௌ;ளும் நடவடிக்கைகள் வினேதமாகவும் வேடிக்கையாகவும் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. மஹிந்த ராஜபக்ஸ இந்த வரவு செலவு அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் போது அவரது மகன் நாமல் ராஜபக்ஸ இது மக்களுக்கு பெரும் சுமைகளைக் கொடுக்கும் ஜனாதிபதி ரணிலின் வரவு செலவு. தனக்க இந்த வரவு செலவுத் திட்டத்திற்க்கு மனட்சாட்சிப்படி வாக்களிக்க முடியாது. என்று சொல்லி வாக்களிப்பை தவிர்த்து வந்திருக்கின்றார் நாமல் ராஜபக்ஸ.
இதே பாணியில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த வேறு எவராது செய்திருந்தால் அந்தக் கட்சி அவர் மீது ஒழுக்காற்று விசாரணை என்றெல்லாம் நடவடிக்கைகள் பாய்ந்திருக்கும். ஆனால் இன்று வரை அப்படி ஏதும் நாமல் விடயத்தில் நடக்கவில்லை. என்ன வேடிக்கை இது. எனவே மொட்டுக் கட்சிக்குள் ராஜபக்ஸ புதல்வர்களுக்கு அங்கு எப்போதும் விஐபி சலுகை. அது பற்றி அந்தக் கட்சிக்குள் இதுவரை எவரும் வாய்திறந்ததை நாம் பார்க்கவில்லை.
இப்போது வட் வரியால் வரும் தாக்கங்கள் பற்றிப் பார்ப்போம். மக்களின் அத்தியவசியப் பொருட்கள் அனைத்துக்கும் போல வட் வரி விதிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் 2024ம் ஆண்டில் நாற்பது ஆயிரம் கோடி (40000) ரூபாவைரை அரசு மேலதிக வருமானமாக எதிர்பார்க்கின்றது. உணவுப் பெருட்கள், மருந்து வகை, மருத்துவ உபகரணங்கள். விவசாயப் விதைகள் விவசாய உபகரணங்கள். பால்வகை, மின்சார உபகரணங்கள் கையடக்கத் தொலைபேசிகள் அதற்குத் தேவையான உபகரணங்கள். எரி பெருட்கள் இவை அணைத்துப் பொருட்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகள் அறவிடப்பட இருக்கின்றன.
பாடசாலைப் பிள்ளைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் வருகின்ற ஜனவாரி முதல் தமது கட்டணத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளும். எரிபொருள் விலை மற்றும் மீண்டும் மின்சாரம் குடிநீர் கட்டண அதிகரிப்ப அபோன்று பாடசாலை உபகரணங்களுக்கும் அந்த நிலைதான். எனவே இந்த வட் வரியில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. அதே நேரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த வருடம் ஒதுக்கிய தொகையை விட ஏறக்குறைய மேலும் ஒரு மடங்கு அதிகமாக இந்த முறை பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் பத்தாயிரம் (10000) ரூபா சம்பள அதிகரிப்பு என்று அறிவிக்ப்பட்டிருக்கின்றது. அதே நேரம் அவர்களிடம் அரசு அதனை விட இருமடங்கு வரிகள் மூலம் பணத்தை வசூல் பண்ண இருக்கின்றது. இதன் பிரதிபலன்களை இன்னும் இரு வாரங்களில் நாட்டு மக்கள் அனுபவிப்பார்கள்.
எனவே அசாதாரண வரிச்சுமைகளை மக்கள் தலைகளில் சுமத்தி விட்டு ஆட்சியாளர்கள் எப்படித் தேர்தலைச் சந்திக்கப் போகின்றார்கள் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கின்றது. ஐஎம்எப் கடனைப் பெற்றுக் கொண்டு தேர்தல் காலங்களில் பொருட்களில் விலைகளை குறைத்து அதன் மூலம் சர்வதேசத்தையும் உள்நாட்டையும் ஏமாற்ற ஆட்சியாளர்கள் முயன்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. எனவே வழக்கம் போல உள் நாட்டையும் உலகையும் இந்த சுற்றிலும் ஆட்சியாளர்கள் ஏமாற்ற நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இப்படி ஒரு அசதாரண வரியை மக்கள் தலைகளில் சுமத்திவிட்டு ஆட்சியாளர்கள் எப்படித்தான் தேர்தலுக்கு செல்லப் போகின்றார்களோ தெரியாது. எனவே கூடிய மட்டும் விரைவாக அவர்கள் இந்தத் தேர்தலை வாழ்வு சாவு (டூவோ டை) என்று தேர்தலுக்கு போக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அல்லது உள்ளூராட்சி தேர்தலில் செய்தது போல அதிகாரிகளை வைத்து நாம் வழக்கமாக எச்சரிப்பது போல காசு இல்லை பாதுகாப்புக் கொடுக்க முடியாது தேவையான அச்சுவேலைகளைச் செய்ய முடியாது என்று ஏதாவது தில்லு முள்ளு வேலைகளைச் செய்தாலும் ஆச்சர்பயப்பட ஏதும் இல்லை. ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக நடந்து கொண்டாலும் பிரச்சினையில்லை என்று பேசிய பௌத்த தேரர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்கின்ற நாடு இது. தேர்தல் என்று எவரும் வாயே திறக்கக்கூடாது என்று நமது அரசியல் வாதிகள் நமக்கு உபதேம் பண்ணி இருந்தும் தெரிந்ததே.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு என்பத்தி ஐயாயிரம் (85000) ரூபாவாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்தத் தொகை ஒரு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் (175000) ரூபாவாக உயர்வடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கை செலவுகள் 95 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பொருளாதார படுகொலையாளிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வரவு செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. அப்படி அவரால் சொல்லவும் முடியாது மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணிலை சிறைக்குள் தள்ளுவோம் என்று அதிகாரத்தை கைப்பறியவயர்ககள்தான் இந்த ராஜபக்ஸாக்கள். நாட்டு மக்களால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டுதான் ஜனாதிபதி ரணில் பேசிக் கொண்டு வருகின்றார்.
வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கை மீண்டு விட்டதா, இல்லையா என்பதை உலகம்தான் தீர்மானிக்கும், எம்மால் தீர்மானிக்க முடியாது. பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர மாற்றுத் திட்டங்கள் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அத்துடன் திட்டங்களை செயற்படுத்திக் கொண்டு செல்லும் போது தான் தனித்து விடப்பட வேண்டிய நிலை ஏற்படுமா என்றும் அவர் அச்சப்படுகின்றார். சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் என்பதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் பொருளாதார செயற்பாடுகள் காணப்படுகின்றன.
2048 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 07 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும்.
ஆனால் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதத்தாலும், 2025 ஆம் ஆண்டு 2.7 சதவீதத்தாலும், 2026 ஆம் ஆண்டு 3 சதவீதத்தாலும், 2027 ஆம் ஆண்டு 3.1 சதவீதத்தாலும் அதிகரிக்கும் என ரணில் குறிப்பிடுகிறார். இவ்வாறான நிலையில் 2048 ஆம் ஆண்டு பொருளாதார முன்னேற்றம் என்பது ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு நகைச் சுவை மட்டுமே. இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் பொதுத் தேர்தலுக்குப் போனால்தான் சில டசன் கணக்கானவர்களையாவது தமது தரப்பில் ராஜபக்ஸாக்களின் மொட்டு அணி வென்றெடுக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியல் இருந்து ஒரிவரையாவது வெலன்றெடுக்க முடியுமா அல்லது ஐதேக.வை தனது கூட்டணியை ஆளும் மொட்டுத் தரப்பினர் தேர்தலில் சேர்த்துக் கொள்வார்களா என்பதும் சந்தேகமே.
இந்த அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த அனைத்து கெடுபிடிகளையும் தொந்தரவுகளையும் ரணில் தலையில் சுமத்திவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போலத்தான் ராஸபக்ஸாக்கள் நாடகமாட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.
நன்றி: 17.12.2023 ஞாயிறு தினக்குரல்