தேரர் அவமானம்:சந்திரிக்கா புகழாரம் !

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சந்திரிக்கா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர். அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றிபெற்ற நாளாக பதிவாகியுள்ளது.மாணவர், மாணவிகள் தமதும், இலங்கை மக்களது ஜனநாயகஉரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர். துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் அவர்கள் இந்த ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டினர்.

தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள் நடந்துகொண்டனர். அரசாங்கம் அல்லது நாட்டின் தலைவர் மக்களின் விருப்பத்திற்கு மாறான தீர்மானங்களை எடுக்கும் போது அது குறித்து கேள்வியெழுப்ப மக்களுக்கு உரிமை இருக்கின்றது.அந்த வகையில் மாணவர்கள் இலங்கையில் ஜனநாயகத்தை உச்ச நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்கள் தமது எதிர்ப்பை அமைதியாகவும், பலமாகவும் வெளிக்காட்டினர்.இதனையே நாங்கள் ஜனநாயகம் என்கிறோம். நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் அந்த மாணவர்களுக்கு கௌரவத்தை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய்!

Next Story

முதியவரை சாப்பிட்ட வாலிபர் கைது!