தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த ஒருவர் மிக மோசமான விபரீத முயற்சியைச் செய்துள்ளார். இதனால் அவர் உயிரிழக்கும் சூழலுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம் கிட்டதட்ட அவரது உயிரையே பறித்துள்ளது. மிக மோசமான நிலையில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அப்படி என்ன செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம், இந்த நபர் ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் ரதுகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த ஆபத்தான இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த அவர் இதற்காக மண்டை ஒட்டை துளையிட்டு உள்ளே சிப் வைக்க முயன்றுள்ளார். இதுதான் அவரது திட்டம். இதற்காகத்தான் அவர் மண்டை ஓட்டை துளை போட்டுள்ளார்.
என்ன செய்தார்
தான் எடுத்த விபரீத முயற்சி குறித்து ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் நகரைச் சேர்ந்த இவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எப்படி ஆப்ரேஷன் செய்கிறார்கள் என்பதை யூடியூபில் பார்த்து இவரும் இதை முயன்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஒரு டிரில்லிங் இயந்திரம் வாங்கினேன்.. என் தலையைத் துளையிட்டு, என் மூளையில் ஒரு சிப்பை பொருத்தினேன்.. இருப்பினும், இதனால் எனக்கு மிகப் பெரியளவில் ரத்த இழப்பு ஏற்பட்டது.
இதனால் நான் உயிரிழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்பட்டேன்.. இருப்பினும், எனது ஆப்ரேஷன் வெற்றிகரமாகவே இருந்தது. கனவுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை இது திறந்துள்ளது உயிரே போய் இருக்கும்: கடந்த மே 17ஆம் தேதி நானே எனக்கு இந்த ஆப்ரேஷனை செய்து கொண்டேன். மூளையைத் துளையிட்டு உள்ளே எலக்ட்ரோடு பொருத்தினேன்..
கனவுகள் வரும் போது அதை முறையாகச் சோதனை செய்ய எனக்கு இது தேவைப்பட்டது” என்றார். இருப்பினும், இந்த ஆப்ரேஷனால் அவர் உயிரே போகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முகம் முழுக்க கட்டுக்களுடன் ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெறும் படங்களை அவரே பகிர்ந்துள்ளார். 40 வயதான ராடுகாவுக்கு ஓராண்டிற்கு முன்பு தான் இந்த வினோத யோசனை வந்துள்ளது. ஓராண்டாக இது குறித்து தீவிரமாக யோசித்த இவர் இப்போது இந்த விபரீதத்தைச் செய்துள்ளார்.
தனக்கு தானே ஆப்ரேஷன்
கடந்த ஜூன் மாதம் தான் முதலில் தன்னை வைத்தே இந்த சோதனையைச் செய்யலாம் என அவர் முடிவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதற்காக நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரிடம் செல்ல அவர் யோசித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுப்பார்கள். அப்படிச் செய்தாலும் மருத்துவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என்பதால் அவரே ஆப்ரேஷனும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். சுமார் நான்கு மணி நேர அவர் இந்த ஆப்ரேஷனை அவருக்கே செய்துள்ளார்.
இதில் சுமார் ஒரு லிட்டர் ரத்தத்தை அவர் இழந்துள்ளார். இதன் காரணமாக அவரது உடல் மிக மோசமான நிலைக்க சென்றுள்ளது. அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார். உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரிடம் சென்று தான் ஆலோசனை பெற வேண்டும். இதுபோல சமூக வலைத்தளங்களைப் பார்த்து தவறான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.