தி காஷ்மீர் ஃபைல்ஸ் ‘அருவருக்கத்தக்க’ படம்-  இஸ்ரேலிய இயக்குநர்

மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்  தூதர்

சர்வதேச திரைப்பட விழா

நடாவ் லபிட் இயக்கிய படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளும் பெற்றுள்ளன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் நடாவ் லபிட் கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இவ்வாறு பேசியதற்காக அவர் வெட்கப்படவேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளர்.

இந்து வலதுசாரி ஆதரவாளர்களும் நடாவ் லபிட் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கடுமையாகப் பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோதியாலும் பாஜகவினராலும் வலுவாக அங்கீகரிக்கப்பட்ட திரைப்படம். இது, திங்கள் கிழமையன்று இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

“இந்திய சர்வதேச திரைப்பட விழாவைப் போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டிப் பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரசார பாணியிலான படம் திரையிடப்பட்டுள்ளது,” என்று விவரித்தார். அவருடைய கருத்து தற்போது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்று வருகின்றது.

என்ன பேசினார் நடாவ் லபிட்?

விவேக் அக்னிஹோத்ரியின் திரைப்படம் தங்க மயில் விருதுக்காக போட்டியிட்ட மூன்று இந்திய படங்களில் ஒன்று. இஸ்ரேலிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான நடவ் லாபிட் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் இந்த வலுவான விமர்சனத்தை திரைப்படத்தின் மீது முன்வைத்தார்.

தேர்வுக் குழுவின் தலைவரான லபிட், “நாங்கள் (தேர்வுக் குழு உறுப்பினர்கள்) அனைவரும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இது ஒரு மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டி பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரசார திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது.

இந்த விழாவில் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்வதை நான் மிகவும் வசதியாக உணர்கிறேன்.  கலைக்கும் வாழ்க்கைக்கும் ஓர் இன்றியமையாத விமர்சன விவாதத்தை இந்த மேடை ஏற்றுக்கொள்ளும் என்பதால் உங்களுடன் வெளிப்படையாக இதைப் பகிர்ந்து கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஜிங்கோ கோடோ, ஸ்பானிய ஆவணப்பட தயாரிப்பாளர் ஜேவியர் அங்குலோ பார்டுரன், பிரெஞ்சு திரைப்பட ஆசிரியர் பாஸ்கேல் சாவான்ஸ், இந்திய திரைப்பட இயக்குனர் சுதிப்டோ சென் ஆவர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெளியானபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்தப் படத்தை ஆதரித்துப் பேசியதும் அதை இழிவுபடுத்தும் சதி நடப்பதாகக் கூறியதையும் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது மட்டுமின்றி, பாஜக முதலமைச்சர்கள் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

‘நீங்கள் வெட்கப்படவேண்டும்’ – இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர்

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர், நவோர் கிலோன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லபிட்டை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “நடாவ் லபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் ஹீப்ரூவில் எழுதவில்லை. இந்தக் கடிதம் சற்று நீளம் என்பதால் அதன் சாராம்சத்தை முதலில் கூறிவிடுகிறேன். நீங்கள் வெட்கப்படவேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்திய கலாசாரம், விருந்தாளி என்பவர் கடவுளைப் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்.

இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பைக் கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்ற உங்கள் தேவையை நான் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், அதற்குப் பிறகு நானும் அமைச்சரும் மேடையில், ‘நாங்கள் ஒரே மாதிரியான எதிரியோடு சண்டையிட்டு மோசமான சுற்றுப்புறத்தில் வசிப்பதால், நம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது எனப் பேசிக்கொண்டோம்’ என்று ஏன் ஒய்நெட் நியூஸிடம் கூறினீர்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, நெருக்கம் குறித்து நாங்கள் பேசினோம். இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப தேசம் என்பதைப் பற்றியும் அமைச்சர் இஸ்ரேலுக்கு வருகை தருவது குறித்தும் இதைத் திரைப்படத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். நாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்பதைப் பற்றிப் பேசினேன்.

மேலும், மிகப்பெரிய திரைப்பட கலாசாரம் கொண்ட இந்தியா இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகப் படிப்பதற்கு முன்பு அவற்றைப் பற்றிப் பேசுவது உணர்ச்சியற்ற, ஆணவமான நடத்தை என்பதை நான் அறிவேன். மேலும் அவை இந்தியாவில் வெளிப்படையான வடுவாக உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள், அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், ஷிண்டர்ஸ் லிஸ்ட், ஹோலோகாஸ்ட் (யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்) போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன்.

இதுபோன்ற கருத்துகளை நான் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டிக்கிறேன். இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது நிச்சயமாக காஷ்மீர் பிரச்னையின் மீதான உணர்வைக் காட்டுகிறது.

ஒய்நெட்டுக்கு நீங்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து, தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய உங்கள் விமர்சனத்திற்கும் இஸ்ரேலிய அரசியலில் நடப்பதை நீங்கள் விரும்பாததற்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகத் தெரிகிறது.

கடந்த காலத்தில் நீங்கள் குரல் கொடுத்ததைப் போலவே, இஸ்ரேலில் நீங்கள் விரும்பாதவற்றின் மீதான உங்கள் விமர்சனத்தை வெளிப்படுத்துவதில் சுதந்திரத்தைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள். ஆனால், உங்கள் விரக்தியை மற்ற நாடுகளிலும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே உங்களுக்கு எனது யோசனை. அத்தகைய ஒப்பீடுகளைச் செய்வதற்கு உங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளீர்கள் என்றும் தைரியமானவர் என்றும் நினைத்துக் கொண்டு நீங்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவீர்கள். இஸ்ரேலிய பிரதிநிதிகளாகிய நாங்கள் இங்கேயே தங்குவோம்.

உங்களுடைய ‘துணிச்சலைத் தொடர்ந்து’ எங்களுடைய குறுஞ் செய்திப் பெட்டிகளில், எனது பொறுப்பின் கீழ் இருக்கும் அணியினர் மீது என்ன தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையிலான நட்பு மிகவும் வலுவானது. நீங்கள் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து அது தப்பிக்கும்.

ஒரு மனிதனாக நான் வெட்கப்படுகிறேன். அவர்களுடைய தாராள மனப்பான்மைக்கும் நட்புக்கும் நாம் திருப்பிச் செலுத்திய மோசமான நடத்தைக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்,” என்று தனது ட்வீட்களில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தூதரின் இந்த ட்வீட்டை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ரீட்வீட் செய்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மை மிகவும் ஆபத்தானது. அதனால் மனிதர்களைப் பொய் சொல்ல வைக்க முடியும்,” என்று மட்டும் ட்வீட் செய்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

யார் இந்த நடாவ் லபிட்?

இஸ்ரேலிய திரைப்பட இயக்குர் நடாவ் லபிட், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் விருது தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 1975ஆம் ஆண்டில் பிறந்த நடாவ் லபிட், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். கட்டாய ராணுவ சேவை முடிந்த பிறகு, லபிட் சிறிது காலம் பாரிஸ் சென்றார்.

பிறகு இஸ்ரேலுக்குத் திரும்பியவர், ஜெருசலேமில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பள்ளியில் பட்டம் பெற்றார்.

கோல்டன் பியர், கான் ஜூரி பரிசுகளை லபிட்டின் குறிப்பிடத்தக்க படங்களான போலீஸ்மேன், தி கிண்டர்கார்டன் டீச்சர் ஆகியவை பெற்றன.

தன்னுடைய கருத்துகளுக்காக அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி, அனுபம் கேர் நடித்துள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெளியானதில் இருந்து சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது. பல திரைப்பட விமர்சகர்கள் இதை ஒரு பிரசார படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படம் 1990களில் காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் மற்றும் கொலைகளை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் மார்ச் 11ஆம் தேதியன்று வெளியானது. படம் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆனது. நாட்டின் நான்கு மாநிலங்கள் படத்திற்கு வரி விலக்கு அறிவித்தன. இந்த நான்கு மாநிலங்களும் (ஹரியானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத்) பாஜக ஆட்சியின் கீழ் உள்ளன.

இந்த ஆண்டு வெளியான அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் இது கூறப்படுகிறது.

வெளியான ஒரு நாளில் பிரதமர் நரேந்திர மோதியுடன் விவேக் அக்னிஹோத்ரி இருக்கும் ஒளிப்படம் வைரலானதால் சர்ச்சை எழுந்தது.

படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் நரேந்திர மோதியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதை விவேக் அக்னிஹோத்ரி ரீட்வீட் செய்தார்.

Previous Story

பிரதமர் பதவியை வழங்குமாறு, சஜித்தின் மனைவி கோட்டாபயவுக்கு போன் செய்தார் – டயானா தெரிவிப்பு

Next Story

ஓமன்: இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிகாரி கைது