தலை முடியை நேராக்க இரசாயன பொருட்களைப் பயன்படுத்துவதால், பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக புதிய விவரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முடியை நேராக்க பயன்படுத்தும் இரசாயனங்கள் மார்பக மற்றும் கருப்பை தொடர்பான புற்றுநோய்களின் அபாயத்தை மூன்று மடங்காக அதிகரிப்பதாக தேசிய புற்றுநோய் கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (அக்.17) வெளியிடப்பட்ட ஆய்வில், கடந்த 12 மாதங்களில் தலை முடியை நேராக்க இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாத பெண்கள், 70 வயதை எட்டும்போது கருப்பை புற்று நோய் ஏற்படும் சாத்தியம் 1.6 விழுக்காடு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தலை முடிக்கு எந்த இரசாயனமும் பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படும் சாத்தியம் 4 விழுக்காடு என்று, ஆய்வின் ஆசிரியரும் தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளருமான சந்திரா ஜாக்சன் கூறினார்.
இந்தப் புதிய ஆய்வில், 35 முதல் 74 வயதுடைய அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 34,000 பெண்களின் தரவினை சேகரித்து, தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்ததாக அவர் கூறினார்.