-ஜஹங்கீர்-
“துறைவாரியான
நிபுணத்துவக் குழுக்களை
அமைப்பதிலும் அவர்களது
கருத்துக்களை ஏற்பதற்கும்
ஜம்மியத்துல் உலமா
தயங்குவதும் பின்னடிப்பதும்
ஏன் என்பதனை நமக்குப்
புரிந்து கொள்ள முடியும்”
சமூகத் தலைமைகள் எப்போதும் மக்களுக்கு தெளிவானதும் சரியானதுமான பாதையைக் காட்ட வேண்டும். அதற்கு ஆளுமையும் அறிவும் அவசியம். வரலாற்று ரீதியில் சமூகத்தில் எத்தனையோ தலைமைகள்-தலைவர்கள் வந்து போய் இருக்கின்றார்கள். அப்படி வந்து போன எல்லோரையும் சமூகம் நினைவில் வைத்திருப்பதுமில்லை. அது அவசியம் கிடையாது. சிலரது நாமங்களை மட்டும்தான் வரலாற்றில் சமூகம் நினைவில் வைத்திருக்கும். இது தலைமைகள் பற்றிய எமது கருத்து.
இன்று நாம் வாழ்கின்ற சமூகத்தில் எத்தனையோ வகையான தலைமைகள் இருக்கின்றன. இவர்களும் தலைவர்களா இதுவெல்லாம் தலைமைகளா என்று சமூகம் சிந்திக்கும் அளவுக்கும் தலைமைகள் இருக்கின்றன. ஊரில் பெரிய கொடை வள்ளல்கள் பரோபகாரிகள் என்று பார்க்கின்ற போது அவர்கள்தான் பெரும் போதை வியாபாரிகளாகவும் பெரும் வர்த்தக மோசடிக்காரர்களாகவும் இருக்கின்றார்கள். இது எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும்.
உதவிக் கரங்கள்
சமூகப் பணிக்கு சமயப் பணிக்கு என்று அதிக அன்பளிப்புகளைச் செய்கின்றவர்களைப் பட்டடியில் போட்டு ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் அவர்கள் பெரும் போதை வியாபாரியாக அல்லது கள்ளுக்கடைக்காரர்களாக இருப்பார்கள். நமது நாடாளுமன்றத்தில் கூட இன்று ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கள்ளுக்கடைக்கார்ரகள். பெரும் கொள்ளையர்கள். இவர்கள்தான் பௌத்தின் காவலர்களாக நின்று பேசுகின்றார்கள் கதைக்கின்றார்கள்.
புத்தரின் போதனைக்கும் இவர்களுக்கும் என்னதான் தொடர்புகள் இருக்க முடியும். அதே போன்று பள்ளிவாயில்களை எடுத்துக் கொள்ளுங்கள் போதை பாவனை வியாபாரம் என்பவற்றிற்கு எதிரான போதனைகளா? அதற்கு அனுசரனையாளர்களாக போதை வியாபாரிதான் கை கொடுக்கின்றரர்கள் என்றால் அவர்கள் ஆதிக்கம் சமூகத்தில் எந்தளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.?
அதே போன்று அரசியல் தலைமைகளின் பின்னாலும் பெரும் மோசடிக்கார்களும் மாபியக் கூட்டத்தினரும் போதை வியாபாரிகளும்தான் இன்று இருக்கின்றார்கள். பொலிசாருக்கு கொடுப்பனவுகள் கூட போதை வியாபாரிகள் மாதாந்தம் செலுத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை சில வழக்குகளில் நாம் பார்த்திருக்கின்றோம்.
தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டங்களிலும் ஊர் அளவிலும் கூட சகல துறைகளிலும் இவர்களின் கைதான் இன்று மேலோங்கி இருக்கின்றது. ஆனால் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் அல்லாஹ் இஸ்லாம் நேரிய வழி முறைகள் என்று மிகுந்த பக்குவத்துடனும் புனிதத்துடனும் செயலாற்றி வரும் இஸ்லாத்துக்குள்ளும் இஸ்லாமிய அமைப்புக்களுக்குள்ளும் இவர்களின் ஆதிக்கம் ஊடுருவிக் காணப்படுகின்றது. மேலும் பணத்துக்கும் காசுக்கும்தான் ‘பத்துவாக்கள்’ என்ற அளவில் நிலமை மாறி இருக்கின்றது. என்ன கொடுமை இது?
எல்லா மனிதர்களுக்கும் எல்லாத்துறைகளிலும் அறிவும் புலமையும் இருப்பதில்லை-இருக்கவும் முடியாது. அமைப்புக்களும் தலைமைகளும் ஏதாவது ஒரு விவகாரத்தில் மக்களுக்குத் தெளிவுகளைச் சொல்வதாக இருந்தால்-தீர்ப்புக்களை வழங்குவதாக இருந்தால் துறைவாரியான நிபுணர்களின் கருத்துக்களை ஆலோசனைகளைபை; பெற்றுக் கொள்வதுதான் ஆரோக்கியமானதாக இருக்க முடியும். இது இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய வழிமுறைக்கும் ஏற்புடையது. மனிதர்கள் எல்லோரும் புனிதர்கள் அல்ல அவர்கள் நபிமார்களும் அல்ல.
குர்பான்-உல்ஹியா
சற்று நீண்ட முகவுரையுடன் நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் 2023 உல்ஹியா அல்லது குர்பான் விவகாரம்தான் எமது கருப் பொருள். இந்த தலைப்பில் பேசுவதற்கு பெரும்பாலானவர்கள் முன்வருதில்லை. காரணம் ஜம்மியத்துல் உலமா ஒரு கருத்தை சொல்லி விட்டால் அதற்கு மாற்றுக் கருத்து சொல்வதில் தமக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகள். மற்றும் மிம்பர்கள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் சமூக ரீதியிலான விமர்சகர்கள் பல்வேறு வழிகளில் நெருக்கடிகளுக்கு ஆளாக இடமிருக்கின்றது. அதனால்தான் அப்படி. பலர் பேசப் பின்னடிக்கின்ற அல்லது தயங்கும் ஒரு விவகாரத்தை நாம் இங்கு கதைக்க முனைகின்றோம்.
நாம் முன்பு சொன்னது போல ஜமியத்துல் உலமா வழங்கிய தீர்ப்புக்கள் அனைத்தும் சரியானதுதான் என்று எவருக்கும் வாதிட முடியுமா? அவர்களும் சராசரி மனிதார்கள். ஆனாலும் முஸ்லிம் சமூகத்தில் ஜம்மியத்துல் உலமா தீர்ப்புக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் சொல்வதில் ஒரு நோவினை பல இடங்களில் தெரிகின்றது. அது நமக்கும் கூட இருக்கின்றது. அதற்காக மௌனமாக இருப்பதிலும் நமக்கு உடன்பாடு கிடையாது.
1.நாட்டில் பல வட்டி வங்கிளுக்கு ஹலால் சான்றிதழ் கொடுத்தது.
2.ஹலால் சன்றிதலுக்கு துண்டுக்கு பேரம் பேசி சமூகத்தை நெருக்கடிகளுக்கு ஆளாக்கியது.
3.விசாரணைகள் அல்லது வாக்குமூலங்கள் கொடுக்கின்ற இடங்களுக்கு தலைமைகள் லஞ்சமாக வட்டலாப்பத்தை எடுத்துப் போய் மூக்குடை பட்டதுடன் சமூகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது.
4.பயண முகவர்களின் காசுக்காக இருபது இலட்சம் வரை பணத்தை நிரந்தர வைப்பு செய்திருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் ஹஜ்ஜூக்குப் போக வேண்டும் என்று ஊக்குவிப்புச் செய்து முகவரிடம் காசு சம்பாதித்தல்.
5.எல்லாத்துறையிலும் தமக்கு ஆற்றலும் அறிவும் புலமையும் இருக்கின்றது என்ற இறுமாப்பில் முட்டால்தனமான தீர்ப்புக்களைச் சொல்வது.
6.மௌனமாக இருந்து தவறுகளுக்கு அங்கிகாரம் வழங்குவது.
7.அண்மையில் பெண் காதி நீதிபதிகள் தொடர்ப்பில் மு.கா.தலைவர் ஹக்கீமுக்கும் ஜம்மியத்துல் உலமாவுக்கும் இடையில் நடக்கின்ற முரண்பாடான கருத்துப் பரிமாறல்கள் என்று நிறையவே கதைகளைச் சொல்ல முடியும்.
ஆனால் அந்தப் பட்டியலைத் தவிர்த்து தற்போதய இசுவாக இருக்கின்ற உல்ஹியா விவகாரத்தில் விலங்குகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு அம்மை நோய் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா செற்பாடுகள் பற்றித் தான் நாம் நேரடியாகப் பேச வருகின்றோம்.
வேண்டுகோள்
சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரத்தில் தாமதிக்காமல் உலமா சபை சமூகத்தை தெளிவு படுத்த வேண்டும்-பதில் கொடுக்க வேண்டும். சமூகம் அதனை எதிர்பார்க்கின்றது என்று நாம் சொல்லி இருந்தோம். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. கடந்த வாரம் (16.06.2023) நாட்டில் நடந்த அனைத்து ஜூம்மாப் பேருரைகளின் போதும் அம்மை நோய் ஆபத்தை எந்த இமாமும் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான வழிகாட்டல் அவர்களுக்கு வழங்கப்படவும் இல்லை.
அடுத்து ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்ட அறிக்கையில் கூட சிறு பிள்ளைகளுக்கு உல்ஹியாவின் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் பாடம் போதிப்பது போதிக்கின்ற பாணில் அது அமைந்திருந்தது. சமூகம் மாடுகளுக்கு கொடிய அம்மை நோய் இது விடயத்தில் (உல்ஹியா) ஜம்மியத்துல் உலமாவின் பதிலை சமூகம் எதிர்பார்த்தது அவர்கள் அறிக்கையில் எந்தத் தீர்வும்-பதிலும் சொல்லப்பட்டிருக்கவில்லை. அந்த அறிக்கையைப் படித்தவர்கள் நமது குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நியாயங்களைப் பார்க்கலாம்.
சில பிரதேச உலமா சபைகள் இந்த நோய் விவகாரத்தில் சற்று முன்னேற்றகரமான நகர்வுகளைச் செய்திருந்தாலும். அவர்களும் மாடுகளுக்கு நோய் இருப்பதாகச் ‘சொல்லப்படுக்கின்றது’ என்று ஒரு சந்தேகத்தில் தான் அறிக்கைகள் விட்டிருக்கின்றார்கள் நாட்டில் 75 சதவீதமான மாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதனை அவர்களும் மூடி மறைக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அரசாங்கமும் துறைவாரியான நிபுணர்களும் மாடுகளுக்கு நோய் இருக்கின்றது என்பதனை உறுதி செய்திருக்கின்றர்கள்.
ஆய்வாளர் இர்சாட் கமால்
குறிப்பாக இது விடயத்தில் இர்சாட் கமல் என்ற துறைசார் ஆய்வாளர் மிருக வைத்திய பேராசிரியர்களின் கருத்துக்களுடன் தனது கருத்தையும் ஊடகங்களில் தெளிவாகப் பதிவேற்றி இருந்தார். மாடு வளர்ப்போர் அதற்கு தடுப்பூசிகள் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தார்கள். இதனை சில பள்ளி நிருவாகங்கள் அறிவிப்பும் செய்திருந்தன. ஆனால் குர்பான் மாடுகளுக்குத் தடுப்பூசி கொடுக்கக் கூடாது என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டிருந்தது. நாம் அறிந்த வரை பல இடங்களில் குர்பான் மாட்டு வியாபாரிகள் இந்த மாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கி இருக்கின்றார்கள்.
தடுப்பூசி ஏற்றப்பட்ட மாடுகள் உணவுக்கு உகந்ததல்ல என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றார்கள். அப்படியானால் அதன் பின் விளைவுகளுக்கு பொறுப்பேற்பது யார்.? இந்த நோய் மாடுகளைக் குர்பானுக்கு பாவிப்பதால் சமூகத்தக்கு ஏற்படுகின்ற ஆபத்துக்கள் தொடர்பாக குரல் கொடுப்பவர்களின் குரல்களை ஜம்மியத்தல் உலமா கண்டு கொள்ளவில்லை-மதிக்கவில்லை என்பதற்கு நல்ல ஒரு உதாரணத்தை நாம் இங்கு தருகின்றோம். ஒரு மூத்த பத்திரிகையாளர் ஜம்மியத்துல் உலமா பொறுப்புதாரிகளின் தனிப்பட்ட தொலைபேசிக்கும் காரியால தொலை பேசிக்கும் (31) முறை தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தை பெற முயற்ச்சித்திருக்கின்றார். அந்த நேரத்தையும் திகதியையும் அவர் தனது டயரியில் பதிந்தும் வைத்திருக்கின்றார். நாமும் தொடர்பு கொண்டோம் பதிலில்லை.
அறிக்கை சொல்வது என்ன?
ஒரு முறை ஜம்மியத்துல் உலமா காரியாலய தொலைபேசி இணைப்பு கிடைத்த போது மறுமுனையில் தலைவர் ஒரு கூட்டத்தில் இருக்கின்றார். என்ற அவர்களின் வழக்கமான பதிலை சொல்லி இருக்கின்றார். பின்பு குறிப்பிட்ட அமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் ஊடாக பத்திரிகையாளர் தொடர்பு கொண்ட போது இது விடயமாக நாம் அறிக்கை தர இருப்பதாகச் சொல்லிக் கதையை முடித்திருக்கின்றார்கள். சிங்களத்தில் ஒரு கதை இருக்கின்றது ‘மல்லே பொல்’ அதன் தமிழ் வடிவம் எங்கே பயணம் என்ற கேள்விக்கு பையில் தேங்காய் என்பது. ஜம்மியத்துல் உலமா அறிக்கையும் இப்படித்தான் இருந்தது என்பதனைப் பலர் பார்த்திருக்கலாம்-படித்திருக்கலாம்.
சமூக சிந்தனைக்கு
நாம் தலைப்பை ‘தலைமைகள் கோமாவில்’ என்று போட்டிருக்கின்றோம் கட்டுரையைப் படிப்பவர்கள் அதனை ‘ஜம்மியத்துல் உலமா’ எனச் செருக வேண்டிய இடத்தில் செருகிக் கொண்டால் நல்லது. அவர்கள் இப்படி நடந்து கொண்டது மாட்டு வியாபாரிகளுக்கும் இவர்களுக்கும் கொடுக்கல் வாங்கலா என்றுதான் அனேகமானவர்கள் கதைகள் இருக்கின்றது. விவகாரத்தை அல்லாஹ்விடத்தில் அவர்கள் பதில் சொல்லிக் கொள்ளட்டும் என்று நாம் கதையை முடிக்க விரும்பவில்லை. இப்படியான தலைமைகள் சமூகத்துக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பது தொடர்பில் சமூகம் சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கின்றது. அத்துடன் சமூகத்தில் துறைவாரியான நிபுணர்களின் வழிகாட்டல் அனைத்துத் துறைகளிலும் தேவை.
துறைவாரியான நிபுணத்துவக் குழுக்களை அமைப்பதிலும் அவர்களது கருத்துக்களை ஏற்பதற்கும் ஜம்மியத்துல் உலமா தயங்குவதும் பின்னடிப்பதும் ஏன் என்பதனை நமக்குப் புரிந்து கொள்ள முடியும். இதனை சமூகம் சிந்திக்க வேண்டும். நமக்கு நோய் வருகின்ற போது எவராவது ஜாமியத்துல் உலமா தலைமையகத்திடமா மருந்து கேட்டுப் போகின்றோம் என்றுதான் நாமும் வம்புக்கு கேட்க வேண்டி இருக்கினறது.
நாம் இது பற்றி பல உலமாக்களிடம் கேட்ட போது. இதில் ஆபத்துக்கள் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் எச்சரிக்கை தேவை என்று கூறினாலும். அவர்கள் இதற்கு தீர்ப்பை மேலிடம் தான் தர வேண்டும் என்று நமக்கு வழி காட்டி விட்டு தங்களது கருத்துக்களை எதிலும் பதிய வேண்டாம் என்று விலகிச் செல்கின்றார்கள்.
இந்த முறை குர்பான் விவகாரத்தில் உள்ள ஆபத்துக்கள் பற்றி ஜம்மியத்துல் உலமா நடாத்திய கூட்டங்களில் பலர் விஞ்ஞான ரீதியிலான கருத்துக்களை வெளிப்படுத்தி வாதிட்டாலும் பணம் இந்தச் சுற்றிலும் ஜெயித்திருக்கின்றது போலும். ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு முறை சொன்னது போல அவரவர் தமது பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நாமும் இந்த நேரத்தில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு சொல்ல வேண்டி இருக்கின்றது.
முக்கிய குறிப்பு
சமூகத்தில் நல்ல சிந்தனையுள்ள புனிதமான உலமாக்களும் ஆலிம்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே போன்று நேர்மையாக உழைத்து தமது செல்வத்தை நல்ல காரியங்களுக்கச் செலவு செய்கின்ற புனிதமான பரோபகாரிகளும் கொடைவள்ளல்களும் நம் மத்தியில் இருக்கின்றார்கள்.