நஜீப் பின் கபூர்
நன்றி: 29.03.2026 ஞாயிறு தினக்குரல்
![]()
*****
ட்ரம்ப் முரண்பாடுகளில் யுக்தியும் இராஜதந்திரமுமாம்!
போரும் ஏஐ. தொழிநுட்பமும் பற்றிய சில தகவல்கள்.!
போர்-சமாதானம் பற்றி முரணான கருத்தும் கதைகளும்!
ட்ரம்ப் ஒரு ரஸ்யா உளவாளி… விநோதமான கருத்து.!
*****

போர் தொடர்பாக அதனைத்துவங்கிய ட்ரம்ப் சொல்கின்ற கதைகள் இங்கு மட்டுமல்ல முழு உலகத்திலும் விமர்சனங்கள் இருக்கின்றன. புதிதாக ஐந்து நாட்கள் அமைதி. அதற்குள் சமாதானப் பேச்சுவாhத்தைகள். தானும் புதிய ஈரானியத் தலைவரும் இணைந்து ஹோர்மூசை பராமறிப்போம் என்றும் ட்ரம்ப் பேசி இருக்கின்றார்.
ஆனால் ட்ரம்பை ஈரான் நம்பத் தயாராக இல்லை. சீனாவும் ரஸ்யா தமக்கு உத்தரவாதங்கள் தர வேண்டும் என்று ஈரான் கேட்டிருப்பதாகத் தெரிகின்றது. கட்டாரும் பாகிஸ்தானும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்குவதாக கூறிவருகின்றன.
அதே போன்று ட்ரம்பை கடுமையான வார்த்தைகளில் பேசுகின்ற சர்வதேச ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஏன் அமெரிக்க ஊடகங்களும் நிறையவே இருக்கின்றன-இருக்கின்றார்கள்.
இதற்கிடையில் ட்ரம்ப் பற்றி நமது ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். அது பற்றியும் பேசுவதுடன் இந்தப் போரிலும் எதிர்காலத்தில் நடக்கின்ற போர்கள் மட்டுமல்லாமல் ஏனைய அனைத்து துறைகளிலும் ஏஐ தொழிநுட்பத்தின் ஆதிக்கம் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது.
அது அப்படி இருக்க…! பொதுவாக பத்திரிகை வாசிப்பவர்கள் பற்றி நமக்கு இப்படி ஒரு கணிப்பு இருக்கின்றது. இளைய தலைமுறையினர் பெரும்பாலும் செய்தித்தாள்கள்-பத்திரிகை படிப்பதில்லை. அவர்கள் முற்று முழுதாக சமூக ஊடகங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றார்கள். அதுதான் அவர்களுடைய சாம்ராஜ்யம். அதற்கு வெளியே அவர்கள் எதனையும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
பத்திரிகை வாசிப்பவர்கள் என்று பார்க்கும் போது நடுத்தர வயதுக்காரர்களும் அதனைக் கடந்தவர்களும் தான் இன்று அச்சு ஊடகங்களில் இருக்கின்றாhகள் என்று நாம் நம்புகின்றோம். அது என்ன விகிதம் என்பதும் நாம் பகிரங்கமாக கணக்குச் சொல்லாவிட்டாலும் அனைவரும் அறிந்த கதைதான்.
எனவே நாம் இங்கு குறிப்பிட்டிருக்கின்ற ஏஐ தொழிநுடப்பம் பற்றி ஆழமாகவோ அகலமாகவோ விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றோம். காரணம் அதனை அவர்கள்-நமது வாசகர்கள் எந்தளவுக்கு ஜீரணிக்க முடியும் என்பது நமக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் பெரியளவில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. என்றாலும் ஏஐ என்ற ஒரு அரக்கனோ வில்லனோ வித்துவானோ என்ற ஒன்று இருக்கின்றது என்பதனை இவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஏஐ தொழிநுட்பம் பற்றி மிகவும் சுருக்கமான அல்லது இலகுவான ஒரு விளக்கத்தை இங்கு பதிய எதிர்பார்க்கின்றோம். அது அவர்களுக்குப் போதுமானது. ஆனால் ஏஐ என்ற ஒன்று இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்று அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ட்ரம்ப் பற்றி நமது ஜனாதிபதி என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை பேச முன்னர் இந்த ஏஐ பற்றி முதலில் பார்ப்போம். நாம் கையில் வைத்திருக்கின்ற கையடக்கத் தொலை பேசியிலே இந்த ஏஐ தொழிநுட்பத்தை பாவித்து நமது இளவுசுகள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.
அவர்களே இதில் இந்தளவு விளையாட்டுக்களை செய்து காட்ட முடியுமாக இருந்தால் நவீன தொழிநுட்பங்களில் அனைத்துத்துறைகளிலும் அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றவர்கள்- நாடுகள் உளவு அமைப்புக்கள் என்னவெல்லாம் செய்ய முடியுமாக இருக்கும் என்பதனை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். இது போரில் எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்தும் செலுத்த முடியும் என்று பார்ப்போம்.
ஈரான் ஆன்மீகத் தலைவர் மற்றும் அரசியல் இராணுவத் தலைவர்கள் நிபுணர்கள் துல்லியமாக அடித்து சாத்துவதில் இந்த ஏஐ தொழிநுட்பங்கள் கனிசமான பங்களிப்பை செய்திருக்கின்றன. ஒருவரின் குரல் ஓசையை வைத்து அவர் இருக்கும் இடத்தை இந்த ஏஐ தொழிநுட்பத்தில் கண்டறிய முடியும் என்பதால்தான் புதிய ஈரானியத் தலைவர் முஜிதபா தனது குரலை தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் இன்றுவரை பகிரங்கமாக வெளியிடாமல்-பேசாமல் இருக்கின்றார். அதனால்தான் அறிக்கை வடிவில் இதுவரை அவரது சில செய்திகள் மற்றுமொருவரால் வாசித்து சொல்லப்படுகின்றது.
ஏஐ தொழிநுட்பம் எந்தளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது-ஆபத்ததானது என்பதற்கு இந்த கதையையும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ரஸ்யா மற்றும் சீன அதிபர்கள் வெளி நாடுகளுக்கு பயணிக்கின்ற சந்தர்பங்களில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் சில சூட் கேஸ்கள் போன்ற உபகரணங்கள் இருப்பததை நாம் அவதானிக்க முடியும்.
அவற்றில் சில தமது தலைவர்களின் இயற்கை தேவைகளின் போது வெளியேரும் சீறுநீர் மற்றும் மலம் என்பவற்றைக் கூட அவர்கள் அங்கு அந்த நாடுகளில் வைத்து விட்டு வருவதில்லை என்று சொல்லப்படுகின்றது. அவற்றை பாதுகாவலர்கள் அந்த சூட்கேஸ் போன்ற உபகரணங்களிலே சேகரித்துக் கொள்கின்றார்கள்.
இந்தக் கழிவுகளை வைத்துக் கூட குறிப்பிட்ட தலைவர்களை எதிரிகள் இந்த ஏஐ தொழி நுட்பத்தில் இலக்கு வைக்க முடியும் என்ற ஒரு நிலை இருக்கின்றது. புரிகின்றதா? இந்த ஏஐ தொழிநுட்பத்தின் அட்டகாசம் எப்படி எல்லாம் இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்களாக இருக்கின்றது.
எனவே இதற்கு மேல் இந்த ஏஐ தொழிநுட்பங்கள் தொடர்பாக ஆழமாக உட்புகுந்து நாம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அது நமது வாசகர்களுக்கு அனேகமாக அவசியம் இல்லாத ஒன்றாகவும் இருக்கக் கூடும்.

இது பற்றி தொழிநுட்ப வார்த்தையில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் (Artificil intelligence-AI) மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படுகின்ற வேறுபாடுகள் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்தப் படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமாக அச்சொட்டாக படைக்கப்படும் போது இது செயற்கை நுண்ணறிவாகின்றது. ஏஐ பற்றி இந்தளவுக்கு நமது வாசகர்களுக்கு இப்போதைக்கு போதும் என்று நம்புகின்றோம்.
இப்போது போர் பற்றிய புதிய சில தகவல்களை பார்ப்போம். யார் போரைத் துவங்கினார்கள் அதற்கான நியாயங்கள் ஒரு பக்கம் இருக்க இன்று இந்தப் போரை இருதரப்பும் புலிவாலைப் பிடித்த நிலையில் கைவிட முடியாது இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இது உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களை மட்டுமல்லாது உயிரினங்களையும் ஏன் கருவறையில் இருக்கின்ற சிசுக்களைக் கூட பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த கதை தான்.
நாம் மேற்சொன்ன பேச்சுவார்த்தைகள் தோற்றுப் போகுமாக இருந்தால் மீண்டும் இருபக்கத் தாக்குதல்கள் கொடூரமாக அமையலாம் என்று தெரிகின்றது. இந்தப் போரை துவங்கியது நானல்ல பாதுகாப்புச் செயலாளர் பீட் எக்சஸத் தான் என்று கூறி தோல்வியில் இருந்து ட்ரம்ப் தன்னை விடுவித்துக் கொள்ள எதிர்பார்க்கின்றார்.
இது ஈரான் தலைவர்களை வேட்டையாட மேற்கொள்ளும் சதி என்றும் குற்றச்சாட்டு. பொதுவாக பார்க்கின்ற போது போரில் அமெரிக்காவுக்கு பின்னடைவு என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் நம்பிக்கை இல்லாத சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. பேச்சு வார்த்தைக்கு ஈரான் ஏழு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றது.

ஈரான்-அமெரிக்க நிபந்தனைகள்
1.தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது. அமெரிக்கா இனி எப்போதும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதை உறுதியளிக்க வேண்டும்.!
2.மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூட வேண்டும். இது அமெரிக்க ராணுவத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக இருக்கும்!
3.அனைத்து பிராந்திய மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் சிக்கலுக்கு நிரந்தர முடிவு காண நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
4.ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் ஒரு தெளிவான விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். அது ஈரானின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும்.
5.ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
6.மின்சாரத்திற்காகவே அணுசக்தி திட்டத்தை மேற்கொள்கிறோம். இதற்கு முழு ஆதரவு தரப்பட வேண்டும். வழக்கமான சோதனைகளுக்கு ஈரான் உடன்படும்!
7.அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சமாதானத்துக்கு 15 அம்சத் திட்டமொன்றை அறிவித்தார் அதனை ஈரான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்படி இருக்க சமாதானம் கானல் நீராகத்தான் நமக்குத் தெரிகின்றது.
சில நாட்களுக்கு முன்னர் நமது ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க ஜேவிபி. கட்சித் தலைமையகமான பெலவத்தையில் ஊடாக சந்திப்பொன்றை நடாத்தி இருந்தார். அந்த சந்திப்பு நட்பு ரீதியில் அமைந்திருந்தது.
அதே நேரம் இது அணுர விசுவாசிகளின் ஊடகச் சந்திப்பு என்றும் ஒரு விமர்சனம் இருக்கின்றது. இந்த சந்திப்பில் போர் நெருக்கடிகள் தொடர்பாக அரசு எடுக்கவுள்ள தீர்மானங்களை ஜனாதிபதி அங்கு பகிர்ந்து கொண்டதால் வந்திருந்தவர்கள் கேள்விகளே எழுப்பாத அளவில் ஜனாதிபதி அணுராவின் பதில்கள்-விளக்கங்கள் அமைந்திருந்தன என்று அதில் பங்கு கொண்ட ஒரு முன்னணி ஊடகவியலாளர் ஒருவர் நமக்குத் தகவல் தந்தார்.

இங்கு ஜனாதிபதி அணுர அமெரிக்க ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளியிடுவது தொடர்பாக அங்கு பேசி இருக்கின்றார். பெரும்பாலானவர்கள் விமர்சிப்பது போல ஜனாதிபதி ட்ரம்ப் முட்டாள்தனமாக தனது கருத்துக்களை முன்னுக்குப் பின் முரணாக வெளிப்படுத்துகின்றார் என்று நான் நம்பவில்லை. அது கூட அவரது ஒரு அணுகுமுறை திட்டமிட்ட வேலை-செயல்பாடு இராஜதந்திரமாகவே தான் பார்ப்பதாகவும் ஜனாதிபதி அணுர அங்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்படியாக இருந்தால் ஏறக்குறைய இது ட்ரம்பின் ஒரு யுக்தி என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அடுத்தவர்களை குழப்பி காரியம் சாதிக்கின்ற டரம்பின் உளவியல் செயல்பாடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ட்ரம்ப் செயல்பாடுகள் பற்றி வித்தியாசமான ஒரு கருத்தை முன்வைத்த முதல் உலக அரசியல் தலைவராக நமது ஜனாதிபதி அணுராதான் இருக்க முடியும். சிலர் ஒன்றும் தெரியாத அப்பாவி அல்லது பைத்தியக்காரர்கள் போல இருந்து காரியம் சாதிப்பதை நாம் பார்க்கின்றோம். இதுவும் அப்படி ஒரு இராஜதந்திரம்தானா.?
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ரஸ்யா-சீனா உளவாளி என்ற ஒரு கருத்து சிலiரால் முன்வைக்கப்படுகின்றது. இது ஒரு கிண்டலான கதையாக இருந்தாலும் அப்படி விவாதிப்பவர்கள்.
தனக்குத் தேவையில்லாத ஒரு போரை அவர் தனது மருமகனைத் திருப்பதிப் படுத்துவதற்காகத்தான் முன்னெடுத்து வருகின்றார். தனது மகளின் கனவன் ஒரு யூதர் என்பது தெரிந்ததே. இதன் மூலம் அமெரிக்க உலக அரங்கில் பின்னடைய ரஸ்யாவும் சீனாவும் உலக அரங்கில் போட்டியே இல்லாமல் முன்னணிக்கு வந்து விடும் அந்த வகையில்தான் இந்த உளவாளி கதை சமைக்கின்றது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் போரில் தனது இலக்கை அடைந்து விட்டதாக இப்போது உலகிற்கு கதை சொல்ல முற்பட்டாலும் அதனை எவரும் நம்பத் தயாராக இல்லை. இந்தப் போரில் ஈரான் கை மேலோங்கி இருக்கின்றது எனவே தான் சமாதானத்துக்கு அது பல நிபந்தனைகளை முன்வைத்து இப்போது ட்ரம்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.
மேலும் ரஸ்யா சீனா பிரான்ஸ் ஐ.நா. போன்றவை இதில் நமக்கு உத்தரவாதம் கொடுப்பதுடன் இதற்கு எழுத்து மூல உறுதியும் தர வேண்டும் என்று ஈரான் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றது. எனவே சமாதானம் எதிர்பார்ப்பது போல இலகுவில் சாத்தியம் இல்லை. அதனை அடைய விட்டுக் கொடுப்புக்கள் அதிகமாக தேவைப்படுகின்றது.
இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலே சமாதானம் காற்றோடு பறந்து ஆகாயம் ஏவுகணைகளாலும் டேனர்களாலும் நிரம்பி வழிகின்றன. மக்கள் பங்கர்களுக்குள் தலைதெரிக்க ஓட பலர் தெருவில் குண்டடிபட்டு வருகின்றார்கள்.
ட்ரம்ப் தரைவழித் தாக்குதல் என்று சொல்ல வா பார்ப்போம் என்கின்றது ஈரான். ஏட்டிக்குப்போட்டி நிலை. போரின் துயரங்களால் ஒவ்வொரு தனிமதனும் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றான். பத்திரிகை அச்சுக்குப் போகும் நேரத்திலும் பின்னர் மக்கள் கைகளுக்குப் போகும் நிமிடத்திலும் கூட களநிலவரத்தில் மாறுதல்களுக்கு நிறையவே வாய்ப்பு.





