ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.. எக்ஸ் தளத்தில் அலி லாரிஜானி வெளியிட்டு இருக்கும் பதிவில், “உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை. கவனமாக இருங்கள், நீங்களே ஒழிக்கப்படலாம்” என்று டிரம்ப்பை எச்சரித்து இருக்கிறார்.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் மீதான போர் 11-வது நாளாக நீடித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் மோதலின் தீவிரம் அதிகரிக்கிறதே தவிர தணிந்தபாடில்லை. ஈரானை டிரம்ப் கடுமையாக எச்சரித்து தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், ஈரான் பாதுகாப்பு தலைவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

ஈரானை எச்சரித்த டிரம்ப்
முன்னதாக ட்ரூத் வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டு இருந்ததாவது:- ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் வரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அமெரிக்கா முந்தைய தாக்குதல்களை விட “இருபது மடங்கு கடுமையாக” தாக்கும். இதன் மூலம் ஈரான் ஒருபோதும் மீண்டெழ முடியாது. “மரணமும், நெருப்பும், கோபமும் அவர்கள் மீது பொழியும். அப்படி நடக்கக்கூடாது என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
அதேபோல, பாக்ஸ் நியூஸ்க்கு அளித்த பேட்டியில் ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டு இருப்பது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஈரானின் தலைவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர் நிம்மதியாக வாழ முடியாது’ என்று கூறியிருந்தார்.
கவனமாக இருங்க, நீங்களே ஒழிக்கப்படலாம்
இதற்கு பதிலடியாக தான் தற்போது ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அவர் தனது எக்ஸ் தளத்தில், “உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை. கவனமாக இருங்கள், நீங்களே ஒழிக்கப்படலாம்” என்று டிரம்ப்பை எச்சரித்து இருக்கிறார்.
ஈரானை டிரம்ப் கடுமையாக எச்சரித்து தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், ஈரான் பாதுகாப்பு தலைவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்வு அந்நாட்டு மூத்த தலைவர்களால் நடைபெற்றது.
எண்ணெய் விநியோகம் பாதிப்பு
அப்போது, ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அமெரிக்காவுக்கு பங்கு வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார். வெனிசுலாவில் அமெரிக்கா தலையிட்டதைப் போலவே, ஈரானின் விவகாரங்களிலும் தங்கள் கருத்து ஏற்கப்பட வேண்டும் என்பதே டிரம்பின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் ஈரான் ஏற்க மறுத்து புதிய உச்ச தலைவரை தேர்வு செய்து இருப்பது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் ஆட்டம் கண்டுள்ளது. எண்ணெய் விநியோகமும் பாதிக்கபட்டு இருப்பதால் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் நெருக்கடியை சர்வதேச சந்தை எதிர்கொண்டுள்ளன.
டெல் அவிவ் நகரிலும் வெடிச்சத்தம்
ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்த இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் சைரன்கள் அலறி வருகின்றன. டெல் அவிவ் நகரிலும் வெடிச்சத்தம் கேட்டது.
ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகளையும் டிரோன்களையும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே தாக்கி அழித்து வருகின்றன. இவ்வாறாக நீடித்து வரும் மோதலால் மத்திய கிழக்கில் நிலமை மோசமாகி கொண்டே செல்கிறது.




