-நஜீப் பின் கபூர்-
ஜனாதிபதி தேர்தலில் புள்ளடியே நமது வாக்காளரின் ஏக தெரிவு!
ஒரு தேர்தலில் 1,2,3என வாக்குப் பதிவோர் 10000ம் கூட இல்லை!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள் குறிப்பது பற்றிய அறிவிப்பை செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய நிஜமான அல்லது உண்மைக்குப் புறம்பான கதைகள் காட்டுத் தீ போல நாளாந்தம் பரவிக் கொண்டிருக்கின்றன. நமது நாட்டு அரசியல் யாப்பின்படி தேர்தலில் வெற்றி பெறுகின்ற ஓர் வேட்ப்பாளர் செல்லுபடியான மொத்த வாக்கில் ஐம்பது பிளஸ் பெற்றாக வேண்டும் என்று ஒரு கதை. 1978 ஆண்டு யாப்பு உருவானதிலிருந்து இது நாட்டில் நிலவி வருகின்றது. இதன் உண்மைத் தன்மைகள் தான் என்ன?
1978 ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தில் வடிமைக்கப்பட்ட இந்த அரசியல் யாப்பின் கீழ் நடை பெற்ற எந்த ஒரு ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நெருக்கடியை இலங்கை அரசியல் யாப்பு இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் ஜனாதிபத் தேர்தல் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்த ஐம்பது பிளஸ் கதை அரசியல் அரங்குகளில் உச்சரிக்கபட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகின்றறோம். எனவே இதைப் பற்றி இந்த வாரம் பேசுவது மிகவும் பொறுத்தமான விடயமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
நன்கு படித்தவர்கள் முதல் பாமர மக்கள் மத்தியில் இப்படியான ஒரு கதை பேசப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் போது இந்த ஐம்பது பிளஸ் கதை ஒரு மாயை என்பதனை எமது வாசகர்களுக்கு நாம் அடித்துச் சொல்லி வைக்கின்றோம். அப்படியானால், இந்த இசுவைப் பற்றி பல இடங்களில் பேசுகின்றார்களே என்று ஒருவர் யோசிக்கக் கூடும்.
எனவே நமது இந்தக் கதைக்கு சட்ட ரீதியாக இருக்கின்ற நம்பகத் தன்மை அல்லது உத்தரவாதம் என்ன என்றும் ஒருவர் கேட்க இடமிருக்கின்றது. அந்தக் கேள்வியும் நியாயமான ஒன்றுதான். எனவே நமது இந்த கட்டுரையைப் படிக்கின்ற ஒருவர் இதன் பின்னர் இப்படியான செய்திகளை காதில் வாங்கிக் கொள்ளத் தேவையில்லை என்பது எமது ஆலோசனை.
சிறு அரசியல் கட்சிகள் அல்லது சில்லரை அரசியல் இயக்கங்களை வைத்திருப்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நமது ஆதரவு இல்லாது இந்தத் தேர்தலில் எவரும் வெற்றி பெறமுடியாது என்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கின்றோம்-பார்த்திருக்கின்றோம். இதன் உண்மைத் தன்மை என்ன?
நாம் முன்பு கூறி இருப்பது போல இந்த சட்டச் சிக்கலுக்கு நமது ஜனாதிபதி தேர்தல்கள் இன்னும் இலக்காகவில்லை. அப்படித்தான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் இது சிக்கலுக்கு இலக்காகும் என்று ஒரு பரவலான கருத்தும் நாட்டில் இருப்பதும் நமக்குத் தெரியும். ஆனால் அது கூட நடைமுறையில் ஒரு பொருட்டாக அமைய மாட்டது என்பதுதான் எமது வாதம்.
இதுவரை நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் இந்த ஐம்பது பிளஸ் கதை ஒரு சிக்கலை ஏற்படுத்தவில்லை. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் ஐம்பது பிளஸ் என்ற எல்லைக் கேட்டைத் தெளிவாகத் தாண்டி இருந்தனர்.
சரி இந்த முறை அப்படி ஒரு சிக்கல் வருகின்றது என்று வைத்துக் கொண்டாலும் எமது வாதப்படி அந்த நிலையிலும் இந்தப் ஐம்பது பிளஸ் கதை ஒரு செல்லாக் காசுதான். இப்போது ஒரு எளிமைiயான உதாரணத்துடன் ஒரு விளக்கத்தை பார்ப்போம். வேட்பாளர் எண்ணிக்கையை ஆறு பேர் என்று எடுத்துக் கொள்வோம். மொத்தமாக வருகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் நூறு என்று வைத்துக் கொள்வோம்.
அந்த நூறு வாக்குகளும் முறையே
A 040
B- 034
C- 014
D- 005
E- 004
F- 003
என்ற வேட்பாளர்களிடையே மேற்சொன்ன அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்;து எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தை எட்டவில்லை என்பது தெளிவு.
இப்படியான ஒரு முடிவு வரும் போதே இந்த விருப்பு வாக்கில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நிலையில் A-40 க்கும் B-34 க்கும் இடையில் நேரடிப் போட்டி நிலை வரும்.
இப்போது A,B தவிர்ந்த ஏனைய அனைத்துப் போட்டியாளர்களும் களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்கில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் முதலாம் இரண்டாம் நிலையில் இருக்கின்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த எண்ணிக்கை A,B வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
உதாரணத்துக்கு இப்படியாக இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு A க்கு (7) ஏழும் B க்கு (3) மூன்றும் கிடைத்திருக்கின்றது என்று வைத்துக் கொண்டால் A பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை A 40+7=47 வேட்பாளர் B 34+3=37 இந்த எண்ணிக்கை அமையும் அல்லது A 40+2=42, B 34+9=43 – என்று அமைந்தால் வேட்பாளர் B வெற்றி பெறுவார்.
சரி எவருமே தமது இரண்டாம் மூன்றாம் தெரிவுகளைப் பதிவு செய்யவில்லை. அல்லது அந்த எண்ணிக்கை தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கங்களையும் செலுத்தவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது A பெற்ற 40, B பெற்ற 34 என்ற எண்ணிக்கை இரண்டையும் சேர்த்தால் அந்த தொகை 40+34=74. இது நூறு சதவீதம் எனக் கணக்கீடு செய்யப்பட்டு அந்த எண்ணிக்கைக்கு அமைய முடிவு அறிவிக்கப்படும். இதுதான் அப்போது 50-பிளஸ். இப்போது A வெற்றி பெற்றவராக அறிவிக்கபடுவார். அவரது வாக்குவீதம் 54 சதவீதம். B பெற்ற வாக்கு 46 வீதம் என்று வரும்.
நாம் என்னதான் உதாரணங்களுடன் அல்லது அட்டவனைகளுடன் விளக்கங்கைளைத்- தெளிவுகளையும் கொடுத்து கதைகளைச் சொன்னாலும் பலருக்கு இது புரியும் புரியாதவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். இது தான் சமூக நிலை. இதற்காக எவரையும் குறை கூறவும் முடியாது.
நாம் இப்படி ஒரு புதிரை அல்லது கேள்வியை நமது வாக்களர்களிடத்தில் எழுப்புகின்றோம். நீங்கள் எப்போதாவது புள்ளடியைத் தவிர்த்து ஜனாதிபதித் தேர்தல்களில் 1,2,3, என்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கின்றீர்களா?
இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் விருப்பு வாக்குகளை இலக்கத்தில் பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை எந்த ஒரு தேர்தலிலும் ஒரு பத்தாயிரத்தைக் கூடத் தாண்டவில்லை. எனவே அது நமது தேர்தல்களில் எந்த ஒரு தாக்கத்ததையும் செலுத்தும் அளவில் அமையவில்லை. எனவே இந்த முறையும் நிலமை அதுதான். என்னதான் பரப்புரைகளை மேற்கொண்டாலும் நமது வாக்காளர்களின் ஏக தெரிவு புள்ளடி ஒன்று மட்டுமே.
இதனால் இந்த ஐம்பது பிளஸ் கதைகளை தொடர்ந்தும் கேட்க நேரிட்டால் ஒரு காதால் எடுத்து அதனை மறு காதால் வெளியே தள்ளி விடுங்கள். அரசியல் யாப்பில் இந்த இலக்க வரிசை பற்றி அறிவுறுத்தால்கள் இருந்தாலும் அதனை மக்கள் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே நமது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளிலும் அதற்கு எந்த பெறுமானங்களும் கிடையாது என்பதுதான் எமது வாதம். ஜே.ஆரின் 1978 அரசியல் யாப்பிற்கு இன்று வயது 46. வரலாறு இதனைத்தான் நமக்கு கற்றுத் தந்திருக்கின்றது.
இப்போது நமது கள நிலவரத்துடன் தேர்தலில் புள்ளடி அல்லது இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் பற்றிப் பார்ப்போம். வருகின்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்க பற்றிய ஒரு நம்பிக்கை பரவலாக இருக்கின்றது. அவர் இந்தத் தேர்தலில் தற்போது ஐம்பத்தி ஏழு (57) சதவீத வாக்குகளை எட்டி இருக்கின்றார். ஐம்பத்தி இரண்டு (52) சதவீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படி ஒரு எல்லையை அவர் இன்னும் தொடவில்லை என்பது நமது கணக்கு. எமது ஆய்வுகளின் படி அவர் முதலாம் இடத்தில் இருக்கின்றார் என்பது உண்மை. அவர் ஒரு நாற்பத்து இரண்டு (42) சதவீதத்தில் தான் இருக்கின்றார்.
இவருக்கு வாக்களிப்போர் ஒருவர் கூட இரண்டாம் மூன்றாம் தெரிவுகளை பதிய மாட்டார்கள். முதலாம் இரண்டாம் நிலையில் இருக்கின்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் 1,2,3, தரவரிசையும் செல்லாக் காசுதான்.
அடுத்து அணுராவுக்கு நல்ல போட்டியாளராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் இருக்கின்றார். ஆனால் அவர் பெறும் வாக்குவீதம் முப்பத்து மூன்று சதவீதம் (33) அளவில்தான். இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. அடுத்த நிலையில் என்னதான் மக்கள் செல்வாக்கை இழந்து இருக்கின்றார்கள் என்று சொன்னாலும் ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சி ஒரு வேட்பாளரை களத்தில் இறக்குமாக இருந்தால் அவர் இருபத்து இரண்டு சதவீத அளவில் வாக்கைப் பொறுவார்.
இப்போது தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளர் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் துரிதமாக அந்த இனத்தின் சிவில் அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஆராயப்பட்டு வருகின்றன. அது சாத்தியமானால் அந்த வேட்பாளர் சிவில் சமூக செயல்பாட்டாளர் வேலான் சுவாமி நான்காம் இடத்துக்கு வருவார். அவர் ஒரு ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவாராக இருந்தால் அது தமிழர் தரப்பில் ஒரு ஆரோக்கியமான நிலை.
இப்படித் தமிழர் தரப்பில் ஒருவர் களத்துக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்திய கூட விரும்பும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இது தெற்கில் அமெரிக்க சார்பு வேட்பாளருக்கான வாய்ப்பு கம்மியாகிவிடும் என்று அச்சமே இதற்குக் காரணம். அத்துடன் இந்திய நலன்களுக்கும் இது உகந்ததல்ல. எனவே தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளர் களத்துக்குக் கொண்டு வருவதில் நிறையவே தடைகள்-சிக்கல்கள் இருக்கின்றன.
அப்படியாக இருந்தால் தற்போதய ஜனாதிபதி ரணிலின் நிலை என்ன என்று பலர் கேட்கலாம். களம் அருக்கு வாய்ப்பாக இல்லை. அதிகாரத்தில் இருக்கும் மட்டும் தான் அவர் ஆட்டமும் செல்வாக்கு என்பது நமது வழக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது. மொட்டுக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி தமிழர் தரப்பிலும் ஒரு பொது வேட்பாளர் என்ற நிலை வந்தால் தற்போதய ஜனாதிபதி தேர்தலில் நின்றால் ஒரு இரண்டு சதவீத வாக்கு எண்ணிக்கைக்கு மேல் தாண்டுவது சாத்தியம் இல்லை.
அவர் தற்போது மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சலுகைகள் வாக்காக சமையும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மொட்டுக் கட்சியும் உரிமை கோரும். இது தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் ஒரு சதவீதம் அளவில்தான் பெற முடியும்.
இந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் புள்ளடியில்தான் வாக்குகள் கிடைக்கும். எனவே 1,2,3 என்ற இலக்க அடிப்படையில் அவர்களின் வாக்குகள் பதிவாக வாய்ப்புக்கள் இல்லை. அப்படி ஓரிருவர் பதிந்தாலும் முதல் நிலை வேட்பாளரின் வெற்றில் அது எந்தத் தாக்கத்தையும் செலுத்த மாட்டாது. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கு என்பது ஒரு மாயை செல்லாக் காசு.
நன்றி: 12.05.2024 ஞாயிறு தினக்குரல்