ஜனாதிபதியின்  தவறான முடிவுகளே  நெருக்கடிக்கு காரணம்- இம்ரான்MP

ஜனாதிபதி எடுத்த தவறான முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதியின் உரையின் போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகள் எதனையும் முன்வைக்கவில்லை. வழமைபோன்று யுத்த வெற்றியில் ஆரம்பித்துக் கோவிட்டை காரணம் காட்டி கடந்த ஆட்சியாளர்களைக் குற்றம்சாட்டி உரையை முடித்தார்.

உண்மையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் ஜனாதிபதி 2019 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தனது புகழுக்காக வரியைக் குறைத்து அரசின் 600 பில்லியன் வருமானத்தை இழக்கச் செய்தது.

அதன்பின் செயற்கையாக டொலரின் பெறுமதியை 200 ஆகக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததால் வெளிநாட்டில் உள்ள பணியாளர்கள் உண்டியல் முறை மூலம் பணப்பரிமாற்றம் செய்ததால் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய டொலர் இழக்க நேரிட்டது.

கோவிட் தாக்கத்தால் உயிரிழந்த உடல்களை வலுக்கட்டாயமாக எரித்ததால் மத்திய கிழக்கு நாடுகள் எதுவும் எரிபொருள் நிவாரணம் தர முன்வரவில்லை. இப்போது எரிபொருளுக்காக இந்தியாவிடம் மண்டியிட்டு நாட்டின் ஒருபகுதியை இந்தியாவுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்று கோவிட் தாக்கமும் இதற்குக் காரணம் என ஜனாதிபதி கூறி இருந்தார்.

உண்மையில் தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கையில் மட்டுமே கோவிட் காலத்தில் டொலர் கையிருப்பு குறைந்துள்ளது. ஏனைய நாடுகள் அனைத்திலும் அதிகரித்தே காணப்படுகிறது. ஆகவே இதுவும் அவர் கூறிய மற்றுமொரு தவறான உதாரணம்.

பொய்கள் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மீண்டும் மீண்டும் பொய்களைக் கூறி தனது இயலாமையை மறைக்க முயல்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டே இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வு கூறி சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அரசாங்கத்திடம் கூறி இருந்தோம்.

நாம் ஒரு போதும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லமாட்டோம் என கூறியிருந்த அரசாங்கம் இன்று நாடு வங்குரோத்து அடைந்த பின் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல தீர்மானித்துள்ளது. அன்றே எமது ஆலோசனையைக் கேட்டிருந்தால் இன்று இந்த நெருக்கடிகளைத் தவிர்த்திருக்கலாம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

இந்தியா இலங்கைக்கு ரூ.100 கோடி டாலர் கடன் உதவி!

Next Story

மீண்டும் ஜனாதிபதி செயலகம் முற்றுகை!