இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது. தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என்று அறிவித்த பிறகு இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் மீது வெடிகுண்டுகளுடன் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பெருமளவில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 541 ட்ரோன்களில் 506 ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாகவும், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 152 ஏவுகணைகள் நடுவானிலேயே முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக அந்த நாடு அறிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் பல முக்கிய நகரங்களும் தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மற்றும் உலகளாவிய வர்த்தக மையமாகக் கருதப்படும் துபாய் ஆகிய பகுதிகளிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் மீது நான்கு ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க தரப்பில் உடனடி உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. ஈரான் ஏவுகணை தாக்குதல் இதற்கிடையில் ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்திய நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மீண்டும் கடுமையான வான்வழித் தாக்குதல் மேற்கொண்டன.
தலைநகர் டெஹ்ரானின் மையப்பகுதியில் பல குண்டுகள் வீசப்பட்டதாகவும் நகரம் முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் ஏற்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் ராணுவம் மற்றும் தலைமை அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இனிமே தான் இருக்கு கச்சேரி

அமெரிக்க ராணுவ தளங்கள் குவைத் மீது ஏவப்பட்ட 97 ஏவுகணைகள் மற்றும் 283 ட்ரோன்களில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததில் பயணிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது பிரிவு தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலைநகர் மனாமாவில் மூன்று கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா தனது நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ஈரான் தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓமன் தெரிவித்துள்ளது.
அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். பல நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்க நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் ஈரான் மோதல் அதே நேரத்தில் ஈரானின் பதில் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினரில் மூவர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், வெள்ளை மாளிகை அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கரோலின் லியாவிட் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பதற்றம் கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணுசக்தி தொடர்பான கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய ராணுவ நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த பதற்றமான சூழல், பல நாடுகளின் பாதுகாப்பு நிலை, சர்வதேச போக்குவரத்து மற்றும் ஆற்றல் விநியோகம் ஆகியவற்றில் தொடர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்த மோதல் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.



