நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத் திவைக்க சீனா திட்டமிட்டது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.
இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு மறுத்ததாக தகவல் வெளியானது.ஆனாலும், சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்பதாக கூறப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி, ஹம்பன்தோட்டா துறைமுகத்திலிருந்து 950 KM கடல் தொலைவில் அந்த கப்பல் இருப்பதாக கூறப்பட்டது.இது குறித்து இலங்கை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:சீன உளவு கப்பல், ஏற்கனவே திட்டமிட்டபடி அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வர வாய்ப்பில்லை.
எங்கள் அனுமதியின்றி, எந்த கப்பலும் எங்கள் துறைமுகத்துக்குள் நுழைய முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆனாலும், சீன கப்பல் இலங்கைக்கு வருமா, வராதா என்பது குறித்து உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்க துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.