இன்று ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்று ‘அல் அரேபியா’ செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக சவுதியில் உள்ள தங்கள் ராணுவ தளத்தில் அதிக அளவில் போர் விமானங்களை குவித்திருக்கிறது அமெரிக்கா.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே சண்டை தொடங்கியதையடுத்து அமெரிக்கா, தனது போர் விமானங்களையும், நடு வழியில் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்ப பயன்படுத்தும் விமானங்களையும் அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இன்று ஐரோப்பிய நாடுகளில் இருந்த தனது விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது அமெரிக்கா. சவுதியில் அமெரிக்காவுக்கு என ராணுவ தளம் இருக்கிறது. அந்த தளத்தில் தற்போது விமானங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அமெரிக்க விமானப்படையை சேர்ந்த F-16, F-22 மற்றும் F-35 போன்ற போர் விமானங்கள் சவுதி ஏர் பேஸ்-க்கு நகர்த்தப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் அமெரிக்காவுக்கு என ‘பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம்’ இருக்கிறது.
கடந்த 1990-1991 ஆண்டுகளில் நடந்த ஈராக் போரில் அமெரிக்கா இந்த ராணுவ தளத்திலிருந்துதான் தனது விமானங்களை இயக்கியிருந்தது. ஈராக் அணு ஆயுதம் உருவாக்குகிறது என்று சொல்லி, அந்நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டது. அதற்கு பெரிய அளவில் உதவியாக இருந்ததுதான் இந்த ‘பிரின்ஸ் சுல்தான்’ விமானப்படைத் தளம்.
இங்கிருந்து ஈரான் தலைநகரை தாக்க அமெரிக்க விமானங்களுக்கு தோராயமாக 1.30 மணி நேரம் மட்டுமே எடுக்கும். அதேபோல, நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்க 1 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். இஸ்ரேலிலிருந்து தாக்குவதைவிட, இந்த ராணுவ தளத்திலிருந்து தாக்குவது எளிதானது. எனவேதான் அதிக அளவில் விமானங்களை அமெரிக்கா இங்கு குவித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இலக்கு, நடான்ஸ் அணுசக்தி மையம்தான். இது மலைக்கு அடியில் சுமார் 300 மீ ஆழத்தில் இருக்கிறது. இதனை தாக்க GBU-57 A/B Massive Ordnance Penetrator குண்டு தேவைப்படும். இந்த குண்டை எல்லா விமானங்களிலும் எடுத்துச்சென்றுவிட முடியாது.
அதற்கென தனியாக B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் போர் விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானம் மட்டுமே GBU-57 குண்டை போடும். ஆனால் இந்த விமானம் தற்போது சவுதியின் அமெரிக்க ராணுவ தளத்தில் இல்லை. எனவே இப்போதைக்கு ஈரான் பயப்பட வேண்டியதில்லை.
சவுதி தவிர பஹ்ரைனில் ஐந்தாவது கடற்படைப் பிரிவுத் தலைமையகத்தையும், கத்தாரில் அல்-உடீட் விமானப்படைத் தளத்தையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல்-தஃப்ரா விமானப்படைத் தளத்தையும், குவைத்தில் ஆரிஃப்ஜான் ராணுவ முகாமையும் அமெரிக்கா வைத்திருக்கிறது.
இங்கிருந்து ஒரே நேரத்தில் தாக்குதலை நடத்த அமெரிக்க திட்டமிட்டால் நிச்சயம் அதை ஈரானால் சமாளிக்க முடியாது. ஆனால் அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் இறங்காமல், இஸ்ரேலை வைத்தே, ஈரானை சமாளிக்க திட்டமிட்டிருக்கிறது.
முன்னதாக ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், ஈரான் அதனை ஏற்க மறுத்தது. மட்டுமல்லாது, அமெரிக்கா இந்த போரில் இறங்கினால் தவிர்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும என்றும் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





