-நஜீப் பின் கபூர்-
புத்தகம் எழுதிப் புனிதராக முனைந்த கோட்டா தோல்வி!
அனுதாபம் தேடி மீண்டும் அரசியலுக்கு வரும் முயற்சியா?
மொட்டு பொதுத் தேர்தலுக்கு இரு காரியாலங்கள் திறப்பு!
நாம் கொடுத்திருக்கின்ற தலைப்புக்கள் தனித்தனியாக பேச வேண்டிய விவகாரமாக இருந்தாலும் இரு மாடுகளைப் பூட்டி விளை நிலத்தை தயார் செய்வது போல ஒரு விவகாரமாக நாம் இந்தப் புத்தகத்தையும்; தேர்தலையும் நாம் பார்ப்பதால் ஒரே தலைப்பில் தகவல்களைச் சேர்த்து இந்த வாரம் செய்தி சொல்ல எதிர்பார்க்கின்றோம்.
நாடுபூராவும் இன்று பேசு பொருளாக இருப்பது கோட்டா எழுதி இருப்பதாகச் சொல்லப்படுகின்ற தனக்கெதிரான சதி பற்றிய புத்தகமும்! மற்றது பசிலின் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்களுமாக இருந்து வருகின்றன. இப்போது முதலில் சதி புத்தகம் பற்றிப் பார்ப்போம்.
நாம் வாழ்கின்ற இந்த வையகத்தில் கோடான கோடி நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் வேத நூல்கள் மதப் பெரியார் தேசத் தலைவர்கள் பிரபல்யங்கள் என்று மட்டுமல்லாது போர்கள் இலக்கியம் இயற்கை மரம் செடி கொடிகள் புட் புதர்கள் பூச்சி புழுக்கள் என்று இன்னோரன்ன பெயர்களில் புத்தகங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இதனை நாம் அறிவோம்.
இவற்றில் சில ஜனரஞ்சகமான நூல்களாகவும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன. உலக வரலாற்றில் அரசியல் தலைவர்கள் என்று பார்க்கும் போது ஹிட்லர் பற்றி எண்ணிக்கையற்ற நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதே போல நெல்சன் மண்டெலா மகாத்மா காந்தி லெனின் மாவோ பற்றி நிறையவே நூல்கள் இருக்கின்றன.
இப்படியான நூல்கள் அனேகமாக அவர்கள் வரலாற்று நாயகர்களாக இருந்ததால் பிரரால் எழுதப்பட்டவை. இவற்றுல் சில நூல்கள் அவர்களே தம்மைப் பற்றி எழுதியவைகள். அவை அனேகமாக சுய சரிதையாக இருப்பதால் அதில் அந்தரங்க விடயங்களை அவர்கள் பதிவிட்டிருக்கின்றார்கள்.
மகாத்மா காந்தி தன்னைப் பற்றி எழுதிய சுயசரிதையில் பல சர்ச்சையான விடயங்கள் இடம் பெற்றிருந்ததால் அவரது அரசியல் எதிரிகள் பிற்காலத்தில் அது பற்றி பல கேள்விகளை இன்றுவரை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மகாத்மா போன்றவர்கள் ஹீரோக்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்தக்களுக்கு இடமில்லை.
நமது நாட்டிலும் இது போன்று பல ஆயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நமது முன்னாள் ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஸ எழுதிய தனக்கு எதிரான சதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் பற்றிய ஒரு நூலும் இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கின்றது. இந்த வாரம் இந்த நூல் தொடர்பாகத்தான் நாம் சில விடயங்களை பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் கோட்டா எழுதியதாகச் சொல்லப்படுகின்ற இந்த நூல் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் இந்த நூலை வெளிட்டதை அவர் தவிர்த்திருந்தால் அவருக்கு அது அரோக்கியமாக இருந்திருக்கும். இப்படிச் சொல்கின்ற அவரது உறவுகளே அவரை இப்போது மறைமுகமாக விமர்சித்தும் வருகின்றார்கள்.
இப்படி ஒரு புத்தகத்தை கோட்டா எழுதி வெளியிடுவதில் அவர் எதிர்பார்ப்பது தனது ஆட்சிக் காலத்தில் நடந்த அனைத்துத் தவறுகளுக்கும் தான்னால் பொறுப்புக் கூற முடியாது. அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது தானல்ல அதற்கு வேறு பல நியாயங்கள் ஆட்கள் இருப்பதாகத்தான் அவர் சொல்ல வருகின்றார். அப்படியாக இருந்தால் தான் தெரிவு செய்த அதிகாரரிகள் பொறுத்தமற்றவர்கள்.
அதற்கு அவர்தானே தர்மீக ரீதியில் பொறுப்புக் கூற வேண்டும். தவறுகளை மற்றவர்கள் தலைகளில் சுமத்தி தன்னைப் புனிதராக இவர் முனைவது தெரிகின்றது. எனவே இது கூட அவரது ஆளுமை மற்றும் முகாமைத்துவம் தப்பாகி விட்டது என்பதுதான் அதன் அர்த்தம். இதிலிருந்தே தான் நாட்டை வழி நடத்தப் பொறுத்தமற்றவர் என்று நாட்டுக்குச் சொல்லி இருக்கின்றார்.
மேலும் போர் வெற்றியில் மட்டும் எல்லாம் தனது தலைமையில் சரியாக நடந்தது என்பதுதான் அவரது வாதமாக இருக்க வேண்டும். ஆனால் மேற் சொன்ன கோட்டா கருத்திலிருந்து பீல்ட் மார்ஷல் தலைமைத்துவம் தான் போரை வழி நடாத்தி அதில் வெற்றி பெறச் செய்திருக்கின்றது என்றும் ஒருவர் வாதிட இடமிருக்கின்றது.
தனது காலத்தில் மிகச் சிறப்பாக நடந்த விடயம் கொவிட்டுக்கு எதிரான போராட்டமாக அவர் சொல்லி தன்னை ஹீரோவாக்கிக் கொள்ள முனைவதும் புத்தகத்தில் தெரிகின்றது. புத்தகத்தில் கெவிட் பற்றி உச்சரித்திருக்கின்ற அதே நேரம் அதற்கு செயல் வடிவம் கொடுத்த படைத் தளபதி சவேந்திர சில்வா பற்றி அந்த விவகாரத்தில் ஒரு வார்த்தையேனும் புத்தகத்தில் சொல்லவில்லை. கொவிட் தொடர்பான ஜனாதிபதி செல்பாட்டு மையத்தின் தலைவராக சவேந்திர சில்வா அன்று கடுமையாக உழைத்திருந்தார். அவரது செயல்பாடுகள்தான் அன்று ஊடகங்களில் முக்கியமாக பார்க்க முடிந்தது.
அன்று நாட்டில் மட்டுமல்ல முழு உலகத்திலும் கடும் கண்டனத்துக்கு இலக்கான முஸ்லிம் கொவிட் இறப்புக்களின் போது உடல்களை எரித்த விடயத்தில் தனக்கு எந்தப் பங்கும் கிடையாது அதற்கு வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைதான் காரணமாக இருந்தது.
தனிப்பட்ட ரீதியில் நான் முஸ்லிம் உடல்களை எரிப்பதை விரும்பவில்லை என்று புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இது விடயத்தில் பேராசிரியர் மித்திகா விதானகேதான் காரணமாக இருந்திருக்கின்றார் என்று சொல்லி அந்த விவகாரத்திலும் அவர் தன்னை விடுவித்துக் கொள்ள முனைந்திருப்பது தெரிகின்றது. இப்போது இந்த மித்திகா அவுஸ்திரோலியாவில் போய் குடியேறி இருக்கின்றார்.
புத்தகத்தில் எட்டு அல்லது பத்து வரையான இடத்தில் சவேந்திர சில்வா பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் தனக்கு எதிரான சதியின் பின்னால் அவர் இருந்தார் என்றவகையில் எடுத்துக் கூற முன்னாள் ஜனாதிபதி கோட்டா முனைந்திருப்பது தெளிவவாகத் தெரிகின்றது. ஆனால் அதனைக்கூட அவர் துனிந்து சொல்லாது மறைமுக வார்த்தைகளில்தான் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்.
இதே போன்று கமல் குனரத்னாவும் இந்த சதியில் முக்கிய பங்காளர் என்று கோட்டா சொல்ல முற்பட்டிருக்கின்றார். அதனைக்கூட நேரடியாக அவர் சொல்லாது மறைமுகமாகத்தான் சுட்டிக் காட்டி இருக்கின்றார். தனக்கு எதிரான சதியின் பின்னணியில் சர்வதேச உள்நாட்டு சக்திகள் இருந்தன என்று சொல்கின்ற கோட்டா அந்தச் சதிகாரர்கள் யார் என்பதை சுட்டிக் காட்டுவதையும் தவித்திருக்கின்றார்.
தனக்கெதிரான சர்வதேச உள்நாட்டு சதிகாரர்கள் பற்றி எழுதுகின்ற கோட்டா துல்லியமாக அவர்கள் நாமங்களை இந்தப் புத்தகத்தில் சொல்லி அவர்கள் மூக்கை உடைத்திருக்க வேண்டும். சிங்களத்தில் ‘ஆசை பயயை’ என்ற ஒரு பேச்சு வழக்கு இருக்கின்றது. அதாவது ஆசையும் அச்சமும் என்று அதனை நாம் தமிழுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு அரசியல் விமர்சகர் என்ற வகையில் புத்தகத்தில் சர்வதேச உள்நாட்டுச் சக்திகளை துனிச்சலுடன் எடுத்தக் காட்ட தயங்குகின்ற கோட்டாவை ஒரு கோழையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். எனவே 1800 ரூபா விலை கொடுத்து வங்கும் இந்த புத்தகத்தில் தலைப்புக்கு பதில் தேடுகின்ற வாசகர்களுக்கு அங்கு எதுவுமே கிடைக்காது. அங்கு ஏமாற்றங்கள்தான் காத்திருக்கும்.?
நமக்கு வழக்கமாக ராஜபக்ஸ தரப்பு இரகசிய தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற உதயங்க வீரதுங்ஹ இந்தப் புத்தகம் பற்றி சொல்கின்ற போது தான் அண்ணன் கோட்டாவிடம் ஏன் இந்த புத்தகத்தை நீங்கள் உத்தியோகபூர்வமாக ஒரு வைபவத்தில் இதுவரை வெள்ளோட்டம் விட வில்லை என்று கோட்ட போது. இந்தப் புத்தகத்தை நீங்கள் இன்னும் படிக்க வில்லையா என்று அவர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்.
அதற்கு இல்லை என்று உதயங்க சொன்னபோது அதற்கு கோட்டா கோபப்பட்டதுடன் இந்தப் புத்தகத்தை புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் பிழையான விமர்சனங்களையும் கருத்துக்களை-மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருவதாக தனது ஆதங்கத்தை உதயவிடம் கொட்டி இருக்கின்றார் கோட்டா.
அதன் பின்னர் புத்தகத்தின் ஐந்து பிரதிகளை கடையில் வாங்கிக் கொண்டு ஒரு பிரதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் கொண்டு போய் கொடுத்திருக்கின்றார் உதயா. மற்றுமொரு பிரதியை எடுத்துக் கொண்டு பசில் ராஜபக்ஸாவுக்கு கொடுக்க அவர் வீட்டுக்குப் போய் இருக்கின்றார். அவரது மனநிலை (மூட்) சரியாக இல்லாத காரணத்தால் அந்தப் பத்தகத்தை கெடுத்து ஏச்சுவாங்குவதைத் தவிர்த்து பசிலுக்குக் புத்தகத்தை கொடுக்காது திருப்பி எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றார்.
அண்ணன் மஹிந்த புத்தகத்தை படித்து விட்டு தனது கண்ணத்தில் அறைந்து விடுவாரோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாக உதய குறிப்படுகின்றார். அப்படியாக இருந்தால் குடும்பத்துக்குள்ளேயே கோட்ட புத்தகம் விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கின்றது என்றுதான் இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் இலங்கையிலுள்ள ரஸ்யா தூதுவர் தனக் கெதிரான சர்வதேச சதிகாரர்கள் என்று புத்தகம் எழுதிய உங்கள் சகோதரன் கோட்டா அந்த சதிகாரர்கள் பற்றி ஏன் புத்தகத்தில் நேரடியாகச் சொல்லாது மறைத்திருக்கின்றார். அது ஏன் என்றும் உதயாவிடம் கேட்டிருக்கின்றார். ரஸ்யாத் தூதுவரின் இந்த கேள்வியை தான் கோட்டாவிடம் கோட்ட போது தான் ஒரு முன்னாள் ஜனாதிபதி.
அப்படி இருக்கின்ற போது எப்படி நான் அவர்கள் நாமங்களை புத்தகத்தில் உச்சரிக்க முடியும் என்று அவர் திருப்பி கேள்வி எழுப்பி இருக்கின்றார். இதிலிருந்து அவர் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இன்னும் அச்சத்துடன்தான் இருக்கின்றார் என்று சொல்ல வேண்டும். அவர்களைப் பகைத்துக் கொள்வது ஆபத்தானது என்பதால்தான் அப்படி அவர் நடந்து கொண்டிருக்கின்றார். இதனைத்தான் நாம் கோழைத்தனம் என்று உச்சரிக்கின்றோம். அதே நேரம் உள்நாட்டு சதிகாரர்கள் பற்றிச் செல்லி இருக்கின்ற கோட்ட அவர்களைக் கூட இங்கு நேரடியாக உச்சரிப்பதைத் தவிர்த்திருக்கின்றார்.
நான் கோட்டாவுக்கு எதிரான ஒரு மேற்கத்திய சதி இருக்கின்றது என்று முன்பு சுட்டிக்காட்டிய போது அப்படி எல்லாம் பேச வேண்டாம் என கோட்டா தன்னைத் திட்டியதாகச் சொல்லும் உதயங்க, சதி தொடர்பான புத்தகத்தில் பின் அட்டையில் இந்த மேற்கத்திய சதி பற்றி தனது வார்த்தையிலே அவர் குறிப்பும் எழுதி இருக்கின்றார் என சுட்டிக் காட்டி இருக்கின்றார் உதயங்க. இந்த சதியின் பின்னால் அவருக்கு நெருக்மாக இருந்த அதிகாரிகள்தான் பிராதான பங்காளிகள் ஆனால் அவர்கள் பற்றி புத்தகத்தில் எதுவுமே கிடையாது என்பது உதயங்க குற்றச்சாட்டாக இருக்கின்றது.
திருகோணமலைக்குத் தப்பி ஓடுகின்ற போது, தான் இரு படகுகளைப் பாவித்ததாக புத்தகத்தில் குறிப்படும் கோட்டா கிளர்ச்சியாளர்கள் தம்மைப் பின் தொடர்வதை தவிர்க்க அந்த யுத்தி என்றும் இரு படகுகளும் எதிரும் புதிருமாக சென்று கவனத்தை திசை திருப்பியதாகவும் புத்தகத்தில் குறிப்படுகின்றார். சஜித் பொன்சேக்க போற்வர்களுக்கு தான் அரசைப் பொறுப்பேற்றும் படி கேட்டது உண்மை இதற்கிடையில் ரணில் பதவி யேற்றுவிட்டார். தான் ஒரு போதும் அனுராவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. என்றும் குறிப்பிடுகின்றார் கோட்டா.
தேசத்தின் தலைவராக இருக்கின்றவரே தனது அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்க வேண்டும். அப்படி அதிகாரம் இருந்தாதிருந்தால் தன்னால் பதவியை மேலும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்றும் அவர் தனது புத்தகத்தில் சொல்லி இருக்கின்றார். இந்த அவரது எதிர்பார்ப்பிலிருந்து இவரது அரசியல் அறிவு எந்தளவுக்கு மட்டமாக இருக்கின்றது என்பதனைப் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
இவர் மிகப் பெரிய முரன்பாடு என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல உதாரணம். சில நாமங்களை சொல்லி அவர்களுக்கு 2020 பொதுத் தேர்தலில் வேட்பாளராக வர இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டதாகவும் புத்தகத்தில் சொல்லும் கோட்டா, அதே நேரம் அவர்கள் வேட்பாளராக வந்து வெற்றி பெற்றபோது அவர்களுக்கு பொறுப்பான அமைச்சும் கொடுத்து அழகு பார்த்திருக்கின்றார். அது எப்படி?
விடுதலைப் புலிகளுடன் போரின் போது யுத்தத்துக்கு கோட்டாவை ஹீரோவாக்கி நந்திக் கடல் புத்தகம் எழுதிய கமல் குனரத்னாவை கோட்டா ஒரு சதிகாரர் என்றும் சொல்லி முனைவது தெளிவாகத் தெரிகின்றது. தனக்கு எதிராக கிளர்ச்சிக்காரர்கள் ஆர்பட்டங்களில் ஈடுபட்டு தனது மிரிகானை வீட்டுடை சுற்றி நின்றபோது. பாதுகாப்புச் செயலாளர் கமல் குனரத்னாவும் முப்படைகளின் தலைவர் சவேந்திர சில்வாவும் ஒரு திருமண வைபத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அப்போது அவர்களுக்கு இந்த தகவல் எத்திவைக்கபட்ட போது அவர்கள் உரியவிதத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறினார்கள்.
இது திட்ட மிட்ட ஒரு செயல் என்று புத்தகம் குறிப்பிட முனைவது தெரிகின்றது. இந்த தகவல் உளவுத்துறை தலைவர் சுரேஸ் சலேக்கு தெரிவிக்கபட்ட போது அவர் உடனடியாக ஜனாதிபதியின் மிரிகான வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கு சில நூறு பேர்தான் இருப்பதைப் பார்த்த சலே மேற்சொன்ன செயலாளருக்கும் படைத் தலைவருக்கும் நிலமையைச் வீடியோ கோல் மூலம் சலோ காட்டினாலும் அவர்கள் அதற்கும் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுக்கின்ற கோட்ட, இந்த இரு அதிகாரிகளுக்கும் (கமல்-சவேந்திர) இடையே நல்லுறவு இல்லாமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று பூசிமெழுகி அவர்களையும் தனது குற்றச்சாட்டுக்களில் இருந்து மென்மைப்படுத்தி பாதுகாக்கவும் முயல்வது தெரிகின்றது.
ஒட்டு மொத்ததில் தனக்கு எதிரான சதிகாரர்கள் பற்றி சொல்ல வந்த இந்த கோட்ட அந்தக் விவகாரத்தை-கருவையே புத்தகத்தில் பேசாமல் தவிர்த்து அதற்கும் நியாயம் கற்பிக்க முனைந்திருப்பது புத்தகத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
தனக்கெதிராக சொல்லப்படுகின்ற ஈஸ்டர் தாக்குதல் சீனி மற்றும் எண்ணை மோசடி விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாகியது போன்ற விடங்களை பேசுவதை அவர் முற்றாகத் தவிர்த்திருப்பதன் மூலம் இந்த புத்தகம் அதன் உதவாக்கறையை பறை சாற்றி இருக்கின்றது.
பசிலின் தேர்தல் ஏற்பாடுகள்
புத்தகக் கதைகள் அப்படி இருக்கின்றபோது பசில் ராஜபக்ஸ தனது தேர்தல் நிகழ்ச்சி நிரலை இப்போது அமுல் படுத்த வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார். இதற்கான பல சுற்றுப் பேச்சுகள் நடந்து முடிந்து விட்டன. கட்சி கூட அங்காரம் வழங்கி விட்டது.
பொதுத் தேர்தலுக்காக பசில் இரு பணிமனைகளை விரைவில் அமைக்க இருக்கின்றார். ஜனாதிபதி ரணிலையும் சந்திதுப் பேசி இருக்கின்றார். ஆனால் ரணில் இவர்களுக்கு வேறு கதை சொல்ல முனைந்திருக்கின்றார்.
தமது திட்டங்களுக்கு ஜனாதிபதி இணங்கி வராத பட்சத்தில் அதற்குக் கொடுக்க வேண்டி வைத்தியத்தையும் பசில் தயாராகத்தான் வைத்திருக்கின்றார். எனவே மொட்டுக் கட்சியில் இருக்கின்றவர்கள் இப்போது ரணிலின் வரைபடங்களுக்கு ஏற்ப பயணிப்பதா அல்லது பசில் திட்டங்களுடன் பயணிப்பதா என்பதை அடுத்த வருகின்ற நாட்களில் பார்க்க முடியுமாக இருக்கும்.
நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்