கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள் 

இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இலங்கை

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

போராட்டம்

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை காண முடிகிறது. ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட 33 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை கூறியுள்ளது.

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

போராட்டம்

நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

போராட்டம்

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

Previous Story

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய  அதிரடி படை வீரர்

Next Story

கோட்டாபய மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள்