சீனாவை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் சவால் அளித்து வருகிறது.
இத்தகைய சூழலில் சீனாவின் இந்த புதிய ரக மைக்ரோ டிரோன்கள் வரும் காலங்களில் பாதுகாப்புத்துறை பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது பாதுகாப்பு நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
சீனாவில் கொசுவைப் போன்ற சிறிய அளவிலான டிரோன் ஒன்றை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த மைக்ரோ டிரோன், மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கொசு அளவிலான டிரோன்கள்
ராணுவம் மற்றும் பாதுகாப்பு தவிர பல்வேறு பயன்பாடுகளுக்கும் இந்த சிறிய டிரோன்கள் உதவக்கூடும் என்று சீன அதிகாரிகள் மத்தியில் சொல்லப்படுகிறது.
இந்த டிரோனின் முன்மாதிரியை சீனா சென்ட்ரல் டெலிவிஷனின் ராணுவ சேனல் தொலைக்காட்சியில் ஆராய்ச்சியாளர்கள் காட்சிப்படுத்தினர்.
தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவர் லியாங் ஹெக்ஸியாங், இந்த சிறிய டிரோனை கையில் வைத்தபடி, “என்னுடைய கையில் கொசு போன்ற ஒரு ரோபோ உள்ளது.
இது போன்ற சிறிய ரோபோக்கள் தகவல் சேகரிப்பு மற்றும் போர்க்களத்தில் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்றது” என்று கூறினார்.
1.3 சென்டிமீட்டர் நீளம் தான்
இந்த கொசு அளவிலான டிரோனில் இலை போன்ற அமைப்பைக் கொண்ட இரண்டு சிறிய இறக்கைகள் உள்ளன. மேலும், மூன்று மெல்லிய “கால்கள்” உள்ளன. அதாவது பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு கொசு போன்று உள்ளது.
அளவில் மிக சிறியதாக இருப்பதால், மிகச்சிறிய அளவிலான இடத்திற்குள் கூட இந்த டிரோன்கள் ஊடுருவி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த டிரோன்களை பொறுத்தவரை ஒரு ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தோராயமாக இது ஒரு கொசுவின் அளவை ஒத்திருக்கிறது.
இதன் நீளம் கணக்கிட்டால் சுமார் 1.3 சென்டிமீட்டர் நீளமே உள்ளது. இந்த சிறிய டிரோன்கள் ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்ககூடும்.
எதெற்கெல்லாம் உதவும்?
ஏனெனில் இந்த டிரோன்கள் எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு இருப்பதால் கண்காணிப்பு அல்லது உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும்.
மேலும், விபத்துகளில் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இவை உதவும் என்று சொல்கிறார்கள் சீன அதிகாரிகள்.
இந்த டிரோன்களில் பொருத்தப்படும் சென்சார்களை கொண்டு காற்றின் தரம் அல்லது நீரின் தரம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளை கண்காணிக்க பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
குறைந்த பேலோடு திறன்
மைக்ரோ டிரோன்களில் சில சவால்களும் இல்லாமல் இல்லை. அதாவது, அளவில் மிக சிறியது என்பதால் குறைந்த பேலோடு திறனை மட்டுமே கொண்டுள்ளன.
இதன் காரணமாக, குறிப்பிட்ட சென்சார்கள் அல்லது உபகரணங்களை மட்டுமே இந்த டிரோன்களில் பயன்படுத்த முடியும்.
அதுபோக இதன் பேட்டரி திறனும் குறைவாகவே இருக்கும். இருப்பினும், பேட்டரி ஆயுள், சென்சார் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் செய்யப்படும் மேம்பாடுகளால், இந்த டிரோன்களின் திறன் வரும் காலத்தில் அதிகப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த டிரோன்கள் இது போர்க்களத்தில் உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் பயன்படுத்தவும் முடியும் என்று சொல்லப்படுகிறது.