ஆன்டிகுவா: U19 உலகக் கோப்பை போட்டியின்போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. 16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. நேற்று அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது
டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்து முடித்த நிலையில் ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது.
ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 6-வது ஓவரின் போது அங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த கேமராக்கள் குலுங்கின. இதேபோல் பாரவையாளர்கள் கேலரியில் உள்ள கட்டிடமும், வர்ணனையாளர்கள் இருந்த கட்டிடமும் சில வினாடிகள் அதிர்ந்தது. போட்டியின் வர்ணனையாளர்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
வர்ணனையாளர் சொல்வதை பாருங்க
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ஐசிசி வர்ணனையாளர், ஆண்ட்ரூ லியோனார்ட், ‘ ‘இப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆம்.. உண்மையில் எங்களுக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த அதிர்வு எங்களுக்குப் பின்னால் ஒரு ரயில் செல்வது போல் அல்ல. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம் ஊடக மையம் முழுவதும் அதிர்ந்தது” என்று அவர் கூறுகிறார். சுமார் 15-20 வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மைதானமே குலுங்கும் காட்சிகள்
இந்த நடுக்கத்தால் ஒளிபரப்பு கேமராக்கள் குலுங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போட்டியின் நேரடி காட்சிகள் திரையில் அதிர்ந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள நிலநடுக்கம் ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆட்டம் தடைப்பட்டதா?
ஆனால் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்ததால் ஜிம்பாப்வே-அயர்லாந்து வீரர்கள் நில நடுக்கத்தை உணரவில்லை. இதனால் ஆட்டம் பாதிக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து விளையாடினார்கள் இறுதியில் இந்த போட்டியில் அயர்லாந்து ஜிம்பாப்வேயை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடக்தக்கது.