கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொலையாளியின் வாக்குமூலம்
காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பளை பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற குறித்த யுவதி தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர் யுவதியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.