நஜீப் பின் கபூர்
நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல்
*****
ஜனாதிபதி அணுரவுடன் சஜீத் என்னதான்பேச முனைகிறார்!
குளிக்க இழுத்துச் செல்லும் நாய் போல நகரும் நிருவாகம்!
சஜித் அணியிலிருந்து மொட்டுக்கு தாவியவர் கதை கந்தல்!
*****
-827962.jpg)
கல்லையும் எஃகையும் கூட நொடிப் பொழுதில் மைதா மாவு போல அறைத்துத் தள்ளுகின்ற இந்த உலகத்தில் கல்லில் நார் உரிக்கின்ற வேலை என்பது கற்காலத்துக் கதைதான். கல்லில் நார் உரிக்கின்ற காட்சிகளும் கதைகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பணிதான் என்பது நமக்குத் தெரியும். எனவே இதனை கற்பனை செய்வது என்பது நமக்கும் நமது இளம் தலைமுறையினருக்கும் பரிட்சியம் இல்லாத ஒரு நிகழ்வுதான். என்றாலும் இது மிகவும் சிரமமானதும் கஸ்டமானதுமான ஒரு முயற்சி என்பது சிறு குழந்தைக்கும் புரியும்.
பல துறைகளில் அணுர தலைமையிலான அரசின் நிலை இதுவாகத்தான் இருந்து வருகின்றது. இது கஸ்டமான வேலை என்பதற்காக அவர்கள் இதனைக் கைவிட்டு இடையில் கோட்டா போல ஓடி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது. காரணம் அவர்கள் அரசியல் இயக்கம் போராட்ட களங்கள் பலவற்றை கடந்து வந்தவர்கள் என்பதால் நமக்கு அவர்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை.
இந்தக் கல்லில் நார் உரிக்கின்ற முயற்சிகள் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அணுரவின் என்பிபி.க்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தலும் ஊழலுக்கும் தன்னலத்துக்கும் பழக்கப்படுத்தப்பட்ட கடந்த நிருவாகிகளும் அதிகாரிகளும்தான் இன்றும் பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல்வாங்கள் செய்வது என்பது குளிக்க இழுத்துச் செல்லும் நாயின் நிலையில்தான் இருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் பெற்று வந்த இலாபங்களை இழந்திருக்கின்றார்கள். அடுத்து மோசடியில் சம்பந்தப்பட்ட பலர் அச்சத்துடன் இருக்கின்றார்கள். மேலும் ஒரு தரப்பினர் முன்னைய ஆட்சியாளர்களின் கையாட்களாக இருந்து வருகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த அரசு பயணிக்க வேண்டி இருக்கின்றது. இதனைத்தான் கல்லில் நார் உறிக்கின்ற முயற்சி என்று நாம் சொல்லி இருக்கின்றோம்.
இந்த நிருவாகிகளுக்கு அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. மேலும் இத்துனை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிய அவர்களை நல்வழிப்படுத்தும் ஏற்பாடுகளை அரசு தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
இதுவும் கல்லில் நார் உரிக்கின்ற ஒரு வேலைதான். தித்வா மற்றும் அமெரிக்க அதிபர் டரம்ப் செயல்பாடுகள் முழு உலகையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருக்கின்றது. இது நம்மையும் கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே டொலருக்கான விலை அதிகரிப்பு அதனால் வருகின்ற விலை ஏற்றம். மக்களின் வாழ்ககை செலவுகள் அதிகரிப்பு என்று நெருக்கடிகள் தொடர்கின்றன.
இதற்கிடையில் இந்த அரசு பதவிக்கு வருவதற்குக் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பான பட்டியலை நாம் மீண்டும் மீண்டும் பட்டியலிட்டு இங்கு காட்டவேண்டியதில்லை. சுருக்கமாக இவற்றை ஒரு முறை நினைவுபடுத்துவதாக இருந்தால் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளும் அவர்களது கையாட்களும் மேற்கொண்ட சட்ட விரோத நடவடிக்கைகள். இதில் கொலைகள் ஆட்கடத்தல் கொள்ளை மோடி ஊழல்கள் என்பன் அடங்குகின்றன. அவை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைகின்ற போது அதற்கு விருப்பமில்லலாத ஒரு தரப்பும் நாட்டில் இருக்கின்றது.

காரணம் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றில் தொடர்புடையவர்கள். தங்களுக்கு தண்டனை கிடைத்து விடும் தாம் இதுவரை அனுபவித்த நலன்களுக்குப் பாதிப்பு. இதன் பின்னர் இப்படியான ஊழல்களை பண்ணி வருமானம் ஈட்ட முடியாது சொத்து சேகரிக்க முடியாது என்று இவர்கள் அஞ்சுகின்றார்கள். அரசியல் அதிகாரத்துக்கு வந்து நாட்டை கொள்ளையடிக்கின்ற வேலையைத்தான் இவர்கள் இது நாள்வரையும் செய்து வந்திருக்கின்றார்கள்.
அரசியல் இவர்கள் வருமானத்தை ஈட்டும் ஒரு தொழிலாக செய்து வந்திருக்கின்றார்கள். இவை எல்லாவற்றையும்விட நாம் ஆயுள் முழுவதும் சிறைகளில் கழிக்க வேண்டி வரும் என்று இவர்கள் எதிர்பார்ப்பதால் நாட்டில் நீதியும் சட்டமும் முறையாக நிலைநாட்டப்படுவதை இவர்கள் விரும்புவதில்லை.
இதனால் இந்த அரசு முடியமான வரை விரைவாக கவிழ வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றார்கள். அதனால் இந்த அரசுக்கு எதிராக கூலிக்கு ஊடகங்களை அமர்த்தி இவர்கள் பரப்புரைகளை இந்த நாட்களில் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பொது மக்கள் தெளிவான புரிதலுடன் இருப்பது நமக்கு நாட்டுக்கும் ஆரோக்கியம் என்று நாம் நம்புகின்றோம்.
அதே நேரம் இந்த அரசுக்கு ஆதரக வாக்களித்த மிகவும் சிறு எண்ணிக்கையானவர்களும் கூட அரசின் மீது திருப்தியற்ற நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் யாரென்று பார்த்தால் கடந்த அரசாங்கங்களுக்கு உதவி அதன் மூலம் தனிப்பட்ட மற்றும் பொருளாhர நலன்களை அடைந்தது போல இந்த அரசாங்கமும் ஏதாவது நமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து அது நடக்காமால் போன விரக்தியில் இருப்பவர்கள்தான் இவர்கள் என்பது நமது கணிப்பாக இருக்கின்றது.
அமெரிக்கா-ஈரான் நெருக்கடிகள் காரணமாக அடிக்கடி டொலர் ஏறி இறங்கிக் கொண்டு வருவது நாம் அறிந்த செய்திதான். அப்படி இந்த அரசு பதவியேற்றதிலிருந்து அண்மை நாட்கள் வரை இந்த என்பிபி அரசு அதனை கட்டுக்குள் வைத்திருந்தது.

ஆனால் சிலதினங்களுக்கு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் அது 345-350 என்று திடீரென்று அதிகரித்த போது எதிர்க் கட்சித் தலைவர் சஜித் கொழும்பிலிருந்து ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதோ பொருளாதார நிபுணர் போல டொலர் அதிகரிப்புப் பற்றி கலந்து பேச விரும்புவதாக தெரிவித்திருத்திருந்தார்.
தான் தற்போது கிழக்கில் சில நிகழ்சிகளில் இருப்பதாகவும் கொழும்பு வந்த பின்னர் பார்ப்போம் என்று ஜனாதிபதி அணுர சஜித்துக்கு பதில் கூறி இருந்தார். இந்த நிலையில் ஒரிரு நாட்களில் மறுபடியும் டொலர் 325-330 என்ற அளவுக்கு சரிந்தது. ஜனாதிபதி கொழும்பு வந்தபின்னர் சஜித் அது பற்றி ஏதும் இதுவரை கதைக்கவில்லை.அது அப்படி இருக்க…

இந்த நகைச்சுவையையும் ஒரு முறை படித்துப்பாருங்கள் தற்போது நாடுபூராவிலும் மொட்டுக் கட்சி கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றது. அப்படி ஒரு கூட்டம் அண்மையில் நாமல் ராஜபக்ஸ தலைமையில் பனதுறையில் நடந்தது. அப்போது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான சஜித் அணியில் கடந்த பொதுத் தேர்தலில் 21000ம் வாக்குகள் பெற்ற அமில என்பவர் இப்போது நாமலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கட்சி மாறி இருப்பதாக மேடையில் அறிமுகம் செய்து அவரை நாமலைக் கட்டிப் பிடித்து ஆரவாரங்களுடன் ஆளை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒருவர் பொதுத் தேர்தலில் அந்த எண்ணிக்கையில் வாக்குகள் பெறவுமில்லை போட்டியிடவுமில்லை. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அந்த நபர்குறிப்பிட்ட வட்டாரத்தில் வெறும் 63 வாக்குகளைதான் தேர்தலில் பெற்றிருந்தார் என்பது தெரியவந்தது. இப்படியான ஆட்களை அறிமுகம் செய்தும் கதைகளை விட்டும்தான் மொட்டுக் கட்சியினர் நாமலை 2029ல் ஜனாதிபதியாக கொண்டுவர முனைகின்றார்கள்.என்ன வேடிக்கை? என்ன அவமானம் இது.?
மாத்தறையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வில் ஜனாதபதி ஆற்றிய உரை இப்போது அனைவரினதும் கவனத்தை ஈத்திருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பௌத்த தேரர்களுக்கு விஐபி சலுகை அனைத்து இடங்களிலும் இருந்து வருகின்றது. இதனைப் பாவித்து தேரர்கள் சில மேற்கொள்கின்ற அட்டகாசங்கள் இப்போது உச்சம் தொட்டிருக்கின்றது. போதைக் கடத்தல் வன்முறை பாதள உலகத்தாருடன் தொடர்பு பாலியல் வன்முறை பணமோசடி என்று இது அனைத்துத் துறைகளிலும் இவை புரையோடிப்போய் இருக்கின்றது. இவர்களுக்கு சமூகத்தில இருந்து வரும் விஐபி சலுகையால்தான் குற்றம் செய்கின்ற தேரர்களைக் கைது செய்வதற்கும் பொலிசார் பின்னடிக்கின்றனர்.
-838273.jpg)
பிரதான பீடதிபதிகளுக்கு அறிவித்துவிட்டுத்தான் அண்மையில் சிறுமி பலியல் வன்முறை தொடர்பான அனுராதபுர பள்ளேகம தேரர் கைது செய்யப்பட்டதும் தெரிந்ததே. இவற்றை சமூக ஊடகங்கள் பேசினாலும் சம்பிரதாய ஊடகங்கள் பேசுவதை தவிர்த்தும் வந்திருக்கின்றன.
மாத்தறை வைபத்தில் பேசிய ஜனாதிபதி அணுர நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது குறித்து தனது ஆதங்களை அங்கு கொட்டி இருந்தார். அதே நிகழ்வில் பேசிய ஓமல்பே தேரர் அரசர்கள் காலத்தில் நடந்தது போல நீங்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற பௌத்த தேரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் ஜனாதிபதி அதற்குத் தயாராக இல்லை என்பது அவரது பேச்சியல் தெரிந்தது. தேரர்கள் தொடர்பான விவகாரங்களை சட்டம் பார்த்துக் கொண்டாலும் மிகவும் மேசமான நிலைக்குச் சென்றிருக்கும் சில தேரர்களின் செயல்பாடுகள் தொடர்பில் பௌத்த பீடங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அங்கு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
நீங்கள் முதலில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நான் எனது தரப்பில் பங்களிப்பு செய்கின்றேன் என்று கூறியதுடன் எனது நடவடிக்கைகள் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அணுர ஓமல்பே தேரர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார் என்றுதான் நமக்குப் புரிகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகள் பிரதமர்கள் தேரர்களின் வன்முறைகள் தொடர்பில் மௌனம் சாதிக்கின்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ சீரழிந்து வருகின்ற பௌத்த சாசனத்தை பாதுகாத்துக் கொள்ளத் தான் ஒத்துழைக்கத் தயார் என்றும் பகிரங்கமாக கடிதம் மூலம் உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார்.

அவரது துணிச்சல் பராட்டத் தக்கது. அனுராதபுர சிறுமி சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்கள் குறிப்பாக பெண் எம்பி.க்கள் மீதும் கடும் விமர்சங்கள் எழுந்திருக்கின்றன. தேரர்களுக்கு அஞ்சி அவர்கள் ஊமையாகி நிற்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.
கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது பதவியில் இருந்த தலைவர்கள் அதனை மூடி மறைத்ததால் அவை வெளியில் வரவில்லை. இன்று அப்படி நிலை இல்லாததால் தகவல்கள் மக்களுக்குத் தெரியவந்து கடும் விமர்சங்கள் நடக்கின்றது. அதனால் இதிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாத சமூக பின்னணி உறுவாகி இருக்கின்றது. கடந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் ஒரு தொலைபேசி கோலில்தாய்லாந்து போதைக் கடத்தல் கதை கூட மூடி மறைக்கப்பட்டு அவர்கள் எடுத்து வந்த போதைப் பொருட்களும் மயாமாகி இருக்கும். அனுராதபுர சிறுமியின் கதையும் வெளியில் வந்திருக்காது என்று நாம் நம்புகின்றோம்.
தேர்தல் மேடைகளின் சொன்ன படி அணுர அரசாங்கத்தால் வாக்குறுதிகளை விரைவாக நிறை வேற்ற முடியாதிருக்கின்றது. அவற்றை நிறைவேற்றப் போகும் போது பல்வேறு தடைகளும் முட்டுக் கட்டைகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே கல்லில் நார் உரிப்பது போலத்தான் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி வருகின்றது. இதற்கிடையில் இயற்கை அனர்த்தங்கள் அசாதாரன நிகழ்வுகளுக்கும் அரசு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது.

மின் கட்டணங்களை இருபது சதவீதத்தால் குறைத்து மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கொடுத்தவாக்குறுதிகளும் இன்று கேள்விக்குறியாகி வருகின்றன.





