-நஜீப் பின் கபூர்-
அனுர கிண்ணம் வென்றாலும் சஜித்-ராஜபக்ஸ அரசமைக்க வாய்ப்பு!
வாக்களியோம்-தீர்மானமில்லை என்போர் 50 சதவீதத்துக்கும் மேல்!
வரலாற்றில் என்றுமில்லாதவாறு எதிர் வருகின்ற தேர்தல்கள் தொடர்பிலான கருத்துக் கணிப்புக்கள் உச்சம் தொட்டு நிற்க்கின்றன. இங்கு மட்டுமல்ல இந்தியாவில் கூட இப்படி ஒரு நிலை இன்று காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் சம்பிரதாய ஊடகங்களை பின்னுக்குத் தள்ளி இன்று அவை உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதால் இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளின் நிலையும் இதுதான்.
யாரெல்லாம் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்றார்களோ அவர்கள் எல்லோருமே ஊடகக்காரர்கள் என்ற ஒரு நிலை இன்று உலகில் தோன்றி இருக்கின்றது. கூடவே ஒரு கெமராவும் கையில் கிடைத்து விட்டால் அது அப்படியான ஊடகக்காரர்களுக்கு ஒரு அரும் வாய்பாகவும் அமைகின்றது.
இதனால் நாட்டில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் சம்பிரதாய ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு முன்னர் அந்த செய்திகள் மக்களிடத்தில் போய் சேர்ந்து விடுகின்றன. இதில் பல நன்மைகள் இருப்பது போல சில பாதகமான நிலமைகளும் இருக்கின்றன.
அந்த வகையில் நமது நாட்டில் வருகின்ற தேர்தல்கள் தொடர்பாக தினந்தோரும் கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்த வாரம் இந்தக் கருத்துக் கணிப்புக்கள் பற்றியும் கருத்துத் திணிப்புக்கள் பற்றியும் நாம் பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.
இதற்கு முன்பு ஒரு முறையும் இந்த விடயம் தொடர்பாக நாம் சில குறிப்புக்களை சொல்லி இருந்ததும் நமக்கு நினைவில் இருக்கின்றது. ஆனால் இன்று கருத்துக் கணிப்புக்கள் என்று பெயரில் பலர் கருத்துத் திணிப்புக்களை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் சாதாரண பொது மக்களுக்கு கருத்துக் கணிப்புகள் தொடர்பாகவும் கருத்துத் திணிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவில்லாத நிலை இருப்பதால் இந்தத் தலைப்புத் தொடர்பாக மக்களைத் அறிவூட்டுவது காலதிதன் தேவை என்பதால் இந்தத் தலைப்பை நாம் இன்று தெரிவு செய்திருக்கின்றோம்.
கடந்த ஒரிரு தாசப்தங்களுக்கு முன்னர் இப்படியான கருத்துக் கணிப்புக்களை ஜனரஞ்சகமான ஓரிரு நிறுவனங்கள்தான் செய்து வந்தன. ஆனால் அப்படியான கருத்துக் கணிப்புக்களும் தப்பிழைத்த சந்தர்ப்பங்கள் நிறையவே வரலாற்றில் இருக்கின்றன.
உதாரணத்துக்குச் சொல்வதாக இருந்தால் கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மீண்டும் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று சில ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்களை சொல்லி இருந்தன. அந்தக் கணிப்புக்களை பொய்யாக அமைந்தன.
அதே போன்று இந்தியாவில் கடந்த பொதுத் தேர்தலில் தென் மாநிலங்களில் பெரும்பாலான கருத்துக் கணிப்புக்களில் மோடிக்கு வெற்றி வாய்ப்புக் கிடையாது என்று சொல்லி இருந்தன. அதே போன்று வடக்கிலும் சில நிறுவனங்கள் மோடிக்குத் தோல்விதான் என்றன. ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கி மோடிக்கு தேர்தலில் பெரு வெற்றி கிடைத்தததையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
இப்படியான கருத்துக் கணிப்புக்களை சில நிறுவனங்கள் வெளியிடுவதில் பெரும் பணக் கொடுக்கல் வாங்கள்கள் இருக்கின்றன என்பதனையும் நாம் அறிவோம். கருத்துக் கணிப்புக்களில் உள்ள வஞ்கத் தன்மை- உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்பில் நிறையவே தில்லு முல்லுகளும் உள்நோக்கங்களும்; இருக்கின்றன. உள்நோக்கம் கொண்ட கருத்துக் கணிப்புக்களைத்தான் நாம் கருத்துத் திணிப்பு என்று இனம் காட்ட விரும்புகின்றோம்.
இவற்றை சாதாரண பொது மக்களுக்குத் தெரிய வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் சில நிறுவனங்கள் தூய்மையான நோக்குடன் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு அதன் பெறுபேறுகளை மக்களுக்கு முன்கூட்டி சொல்லி வருவதையும் நாம் மறக்க முடியாது. அதில் கூட சில சந்தர்ப்பங்களில் வலுக்கல்கள் நடப்பதுண்டு.
இப்போது நமது நாட்டில் இது வரை பல ஆயிரக் கணக்கான கருத்துக் கணிப்பகள் பற்றிய தகவல்கள் தேர்தல்கள் தொடர்பில் வெளிவந்து விட்டன. இன்னும் வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. அது நாம் முன்பு சொன்னபடி கையடக்கத் தொலைபேசியும் ஒரு கெமராவும் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஊடகக்காரர்கள் என்ற நியதிப்படியான தகவல்கள். அதற்காக நாம் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடவும் முடியாது. அவ்வாறான தகவல்கள் யதார்த்தமானவையாகவும் அமையாலாம்.
அதே நேரம் சில உண்மைகளை நாம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். காரணம் மக்கள் நாட்டில் என்ன நடக்கின்றது. கருத்துக் கணிப்புகள் என்றால் என்ன என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதனால்தான் நமது இந்த பார்வை-விமர்சனங்கள்.
நமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் பற்றிய கருத்தக் கணிப்புக்களை பல பேர் சொன்னது போல நாமும் இதே பகுதியில் சில தகவல்களை கருத்துக் கணிப்புகளைச் சொல்லி இருந்தோம் என்பதனையும் இங்கு சுட்டடிக் காட்ட விரும்புகின்றோம்.
இன்று நமது நாட்டில் எந்தத் தேர்தல் வந்தாலும் ஒரு முக்கோணப் போட்டி நிலை இருப்பதை அனைரும் ஏற்றுக் கொள்கின்றனர். இது அனுர-சஜீத்-ராஜபக்ஸாக்கள் என்று அந்த களம் அமைந்து இருக்கின்றன. ஆனால் இன்னும் சிலர் அனுர-சஜித்-ரணில் என்றும் ராஜபக்ஸாக்களுக்கு இதில் வாய்பே இல்லை என்று சொல்லி வருகின்றனர்.
ஆனால் நமது கணக்குப்படி களத்தில் ராஜபக்ஸாக்களுக்கு நன்காம் (4) இடம் என்பதில் நமக்கு உடன்பாடு கிடையாது. தேர்தல் முடிவுகளில் அதனை மக்கள் கண்டு கொள்ள முடியும். அநேகமான ஊடகக் கணிப்புக்கள் நமது கருத்துக்கு மாற்றமாக ராஜபக்ஸாக்களுக்கு நான்காம் இடம் என்றுதான் சொல்லி வருவதையும் நாம் அறிவோம். யதார்த்தம் அப்படி அமையாது.
அந்த கருத்துக்களை இங்கு நாம் இப்போதைக்குத் தர்க்கிக்க முனையவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அது பற்றி தனியாக பேசலாம். இப்போது பெரும்பாலான சமூக ஊடகங்கள் குறிப்பாக தொன்நூறு (90) சதவீதமான சமூக ஊடகங்கள் அனுர தரப்புக்கு வாய்ப்பு அதிகம். அது ஐம்பத்தி மூன்று (53) சதவீதம் அளவிற்குப் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் சில நடுநிலையான நிறுவனங்களும் இதற்குச் சமாந்திரமான கருத்துக்களைத்தான் சொல்லி வருகின்றன.
இந்த கணிப்புத் தொடர்ப்பிலும் நமக்கு உடன்பாடு கிடையாது. அனுர தரப்பினர் முன்னணியில் இருக்கின்றார்கள் என்பதனை நாமும் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் முதலிடத்தில் இருந்தாலும் அவர்கள் நற்பது அல்லது நாற்பத்தி இரண்டு (40-42) சதவீத என்ற எண்ணியை இன்னும் தாண்டவில்லை என்பதுதான் எமது கருத்து.
அனுராவுக்கு சஜித் தரப்பினர் நல்ல போட்டியாளர்களாக இருக்கின்றார்கள் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பொதுவாக இதுவரையிலான அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் சஜித்துக்கான வாய்ப்பை குறைவாகத்தான் எடை போட்டுப் பார்க்கின்றார்கள்.
சமூக ஊடகங்களைப் பொறுத்து அனுர தரப்பு ஆதிக்கம் வலுவாகவே உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இருக்கின்றன. இதற்கு முன்பு ஒரு முறை அனுராவை இந்திய அழைத்தது போல எமக்கும் ஒரு அழைப்பு வந்துதான் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார அன்று ஊடகங்களுக்கு கூறி மூக்குடைபட்டிருந்தார். அதே போன்று அவர் தமது கட்சி நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில் சஜித் முன்னணியில் இருப்பதாக அதே காலப் பகுதில் செயலாளர் கூறி இருந்தார்.
இது போன்று தாமே நடாத்திய கருத்துக் கணிப்புக் கதையை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்.? அதற்குப் பின்னர் நடாத்திய ஒரு நடு நிலையான கருத்துக் கணிப்பில் சஜித் முன்னணியில் என்று ஹிருணிக்கவும் கூறி இருந்தார். இதற்கு அந்தக் கட்சியில் உள்ள பலரும் பிரச்சாரம் செய்தனர்.
இந்த தகவலைத் தந்த நிறுவனம் எது? அதனை நடாத்தியவர்கள் யார் என்று ஊடகத்தினர் கேட்ட போது அவர்களுக்கு உயிராபத்து வரும் என்பதால் இந்த விபரங்களை பகிரங்கமாக சொல்லி முடியாது என்று ஹிருணிக்க தெரிவித்தார். அதனால் இந்தக் கணிப்பையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கருத்துக் கணிப்புக்கள் இப்படி அனுராவை முதன்மைப்படுத்தி தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் தனியாக ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை இன்னும் அவர்கள் எட்டிப்பிக்கவில்லை என்பது எமது வலுவான நிலைப்பாடாகும்.
அது எப்படி என்று இப்போது பார்ப்போம் கருத்துக் கணிப்புக்களின்படி சஜித் அணியினருக்கு முப்பது அல்லது முப்பத்தி இரண்டு (30-32) சதவீத வாக்கு வீதம் கைவசம் இருக்கின்றது. அது உறுதி. ஆனால் மூன்று சதவீதமுள்ள அனுர தரப்பு இன்னும் நற்பது (40) சதவீதத்தை எட்டுவது என்பது மாபெரும் சாதனையான ஒரு இலக்கு என்பதனையும் நாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஐ.எச்.பி. (IHB) என்ற சர்வதேச நிறுவனம் நடாத்திய மிகப் பிந்திய ஆய்வின்படி ஜனாதிபதி தேர்தலில் ரணில் மொட்டு ஆதரவுடன் பதின்மூன்று (13) சதவீத ஆதரவையும் சஜித்; முப்பத்தி நன்கு (34) சதவீத ஆதரவு அனுராவுக்கு ஐம்பத்தி மூன்று (53) சதவீத ஆதரவும் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. சுகாதரத்துறை தொடர்பான இந்த நிறுவனத்துக்கு நமது நாட்டில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்களுக்கான காசை ஐக்கிய இராச்சியமே வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு கருத்துக் கணிப்புக்கள் மொட்டுக் கட்சிக்கு ஐந்து அல்லது ஆறு சதவீதமானவர்களே வாக்களிப்பார்கள் என்று சொன்னாலும் நமது கணக்குப்பபடி அது ஒரு பதினெட்டு இருபது (18-20) சத வீதத்தைத் இலகுவாகத் தொடும் என்பது எமது வலுவான நம்பிக்கை. இந்தப் பின்னணியில் சஜித்-ராஜபக்ஸாக்கள் இணைவதன் மூலம் பொதுத் தேர்தலில் அவர்களுக்கு ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.
இந்த எண்ணக் கருவை மையமாக வைத்துத்தான் நாம் சில வாரங்களுக்கு முன்னர் சஜித்-ராஜபக்ஸ கூட்டணி பற்றியும் சஜித் ஜனாதிபதி பிரதமர் நாமல் என்றும் ஒரு கருத்தை முதல் முதலாக சொல்லி இருந்தோம். இன்றும் அதற்கான வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருக்கின்றது. அதற்கான அழைப்பையும் பசில் ராஜபக்ஸா பகிரங்கமாகவே அண்மையில் சஜித்துக்குக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் முன்கூட்டி பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று ராஜபக்ஸாக்கள் பிடியாக இருக்கின்றார்கள். இந்த கணிப்புப்படிதான் முதலில் பொதுத் தேர்தல் என்று நாம் நெடுங்காலமாக அடித்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். நாம் சொல்கின்ற படி இந்த பொதுத் தேர்தல் முன் கூட்டி வருமாக இருந்தால் இந்த ஏப்ரல் மாதத்துக்குல் அதற்கான அறிவிப்பும் வந்தாக வேண்டும். எனவேதான் தீர்க்கமான ஏப்ரல் மாதம் என்று நாம் கடந்த வாரம் ஒரு குறிப்பையும் சொல்லி இருந்தோம்.
சிலர் யோசிக்கலாம் நாம் களத்தில் ரணில் வைபாகம் பற்றி இங்கு எதுவுமே பேசவில்லையே என்று, ரணில் ஜனாதிபத் வேட்பாளர் என்பது ஒரு பகல் கனவு அப்படி வந்தாலும் அவருக்கு நான்காம் இடம்தான். மொட்டுக் கட்சியில் இருந்து ஒருவர் வருவார் என்று அந்தக் கட்சி முக்கியஸ்தர்கள் கூறி வருகின்றார்கள். இன்னும் சில வாரங்களில் குறிப்பாக ஏப்ரல் மாதத்துக்குள் இதற்கு பதில் தெளிவாக கிடத்து விடும். பொதுத் தேர்தல் முன்கூட்டி நடாத்தப்படா விட்டல் அது ராஜபக்ஸாக்களுக்கு மட்டுமல்ல சஜித்துக்கும் பாரிய பின்னடைவைக் கொடுக்கும்.
முன்கூட்டி பொதுத் தேர்தல் நடந்தால் அனுர முதலிடத்துக்கு வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்-ராஜபக்ஸாக்கள் இணைந்து அனுர அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பை தடுக்க ஒரு நல்ல வாய்ப்பும் இருக்கின்றது. ரணில் பொதுத் தேர்தலுக்கு ஆப்பு வைப்பதால் அதற்கு ராஜபகஸாக்கள் கடும் அதிர்ப்தியை வெளியிடுவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்பதனையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருப்போரும், நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்போரது எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதத்தை தாண்டி நிற்கின்றது.
எனவே அந்த எண்ணிக்கை எந்தத் தேர்தலாக இருந்தாலும் கணிசமான தாக்கங்களை வருகின்ற தேர்தல்களில் செலுத்தும் என்பது நமது கணிப்பு. எனவே இவர்களை வென்றெடுப்பதிலும் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவதிலும்தான் தேர்தல் இலக்கு அமைந்திருக்கின்றது என்பது நமது கருத்து.
நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்