“கன்னிப் பெண்கள் மவுனமாக இருந்தால் சம்மதம் தான்..”

 தாலிபான் அரசு கொண்டு வந்த சர்ச்சை சட்டம்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான் அரசு, தற்போது திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

கன்னிப் பெண்கள் திருமணம் உட்பட 31 விதிகள் கொண்ட இந்த புதிய குடும்பச் சட்டத்திற்குத் தாலிபான்களின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கிருந்த அமெரிக்கப் படைகள் கடந்த 2021ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு வெறும் சில நாட்களில் ஒட்டு மொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தனது கண்ட்ரோலில் எடுத்து வந்தனர். அப்போதே தாலிபான் ஆட்சியில் பெண் உரிமை என்னவாகுமோ என்ற கேள்வி இருந்தது.

அப்போது பெண்களுக்கு எதிரான ஆட்சியாகத் தங்கள் ஆட்சி இருக்காது எனத் தாலிபான்கள் விளக்கம் கொடுத்தன. ஆனால், அதன் பிறகு வரும் சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே அமைகிறது. தனியாக வெளியே செல்லக்கூடாது,

ஆண்களுடன் பணிபுரியும் அலுவலகங்களில் கட்டுப்பாடு எனப் பல சிக்கல்கள் வருகிறது. இப்போதும் தாலிபான் அரசு சில சர்ச்சைக்குரிய புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. Principles of Separation Between Spouses என்ற பெயரில் ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசிதழில் இந்த புதிய சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.திருமணம், விவாகரத்து, குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக இந்த புதிய வரிகள் வகுக்கப்பட்டுள்ளன.

கன்னிப் பெண்கள்: இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய விதி என்னவென்றால், திருமணம் செய்யவிருக்கும் ஒரு ‘கன்னிப் பெண்’ அமைதியாகவோ அல்லது மௌனமாகவோ இருந்தால், அதைத் திருமணத்திற்கான சம்மதமாகவே நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும்.

அதாவது பெண்கள் வேண்டாம் என வெளிப்படையாக மறுக்கவில்லை என்றால் அவர்கள் திருமணத்திற்கு ஓகே சொன்னதாகவே கருதப்படுவார்கள். ஆனால், இதே விதி சிறுவர்களுக்கோ அல்லது ஏற்கனவே திருமணமான பெண்களுக்கோ பொருந்தாது.. அவர்கள் தங்களின் சம்மதத்தை வாய்மொழியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

சிறார் திருமணம்: மேலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மைனர் (சிறுவர்/சிறுமி) திருமணங்களுக்குத் தாலிபான் அரசு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கிறது. இதற்கான முழு அதிகாரமும் அந்தப் பிள்ளைகளின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மணமகன் சமூக ரீதியாகத் தகுதியானவராகவும், மணமகன் வீட்டாரால் வழங்கப்படும் வரதட்சணை மதக் கோட்பாடுகளின்படி சரியாக இருக்கும் பட்சத்தில் இந்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியார் அல்-புலூக்: இந்தச் சட்டத்தில் ‘கியார் அல்-புலூக்’ என்ற சட்டக் கோட்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறு வயதிலேயே பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு நடத்தப்படும் திருமணங்களை, அந்தப் பிள்ளைகள் பருவமடைந்த பிறகு தங்களுக்கு இந்தத் திருமணம் வேண்டாம் எனத் தெரிவித்து ரத்து செய்யக் கோரலாம்.

ஆனால், இந்த ரத்து நடவடிக்கைக்குச் சாதாரண நீதிமன்றங்கள் போதாது; தாலிபான்களின் மத நீதிமன்றங்களின் முறையான அனுமதி கட்டாயம் தேவை. கணவனின் நீண்டகாலத் தலைமறைவு, மதம் மாறுதல், விபச்சாரம் போன்ற புகார்கள் எழும்போது தாலிபான் நீதிபதிகள் நேரடியாகத் தலையிட்டுத் தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் ஜிஹார் எனப்படும், ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தடைசெய்யப்பட்ட ஒரு பெண் உறவினருடன் (உதாரணமாகத் தாய் அல்லது சகோதரி) ஒப்பிட்டுப் பேசும் குற்றச்சாட்டின் கீழும் நீதிபதிகள் விசாரணை நடத்தலாம். இத்தகைய வழக்குகளில் நீதிபதிகளே கடுமையான தண்டனைகளை விதிக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.

Previous Story

உனக்கும் கீழே உள்ளவர் கோடி -கண்ணதாசன்

Next Story

இந்த ஒரு உரை 10 புத்தகங்களுக்கு சமம் -வாசிப்பு பழக்கம்