-நஜீப் பின் கபூர்-
அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும் சகோதாரன் சகோதரிக்கும் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்காத சம்பங்கள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். அதே போன்று பெற்றார்கள் கூட தமது சொந்தப் பிள்ளைகளுக்கு அவரவர் உரிமைகளை நியாயமாக பகிர்ந்தளிக்காத சந்தர்ப்பங்களையும் நாம் இந்த உலகில் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான செயல்பாடுகள் தர்மத்தின் பார்வையிலும் தாம் பின்பற்றுகின்ற மதங்களின் பார்வையிலும் நியாயமற்றது தவறானது அநியாயமனது என்பதும் அனைவரும் அறிந்தும் புரிந்ததும்தான். ஆனால் அப்படியான நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றது. இது தனி நபர் சம்பந்தப்பட்ட விவகாரம்.
இப்போது சமூக மற்றும் தேசங்கள் தொடர்பான விவகாரங்களைப் பார்ப்போம். என்னதான் உலகம் வளர்ச்சியடைந்து விட்டது. மக்கள் அறிவியல் ரீதியில் ரீதியில் தெளிவு பட்டுவிட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும் இன்றும் உலகில் பல இடங்களில் சமூகங்களிடையே இனரீதியான ஆதிக்கம் அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்காக நியாயம் வழங்குவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு போன்ற எண்ணற்ற அமைப்புக்களும் நிறுவனங்களும் செயல்பட்டாலும் அந்த அவலங்கள் பெரும்பாலும் அப்படியே தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றன. இப்போது உள்நாட்டு விவகாரம் தொடர்பாகப் பார்ப்போம்.
இலங்கையின் பூர்விக வரலாறு ஆதிவாசிகள் மன்னராட்சி தென்னிந்திய ஆதிக்கம் ஐரோப்பியர் ஆட்சி சுதந்திரத்துக்குப் பின்னர் என்றெல்லாம் இதற்கு முன்பு ஒரு முறை நாம் விரிவாக பேசி இருக்கின்றோம். அவை தொடர்பாக மீண்டும் மீண்டும் நாம் இங்கு பேசவரவில்லை. அது அவசியமும் இல்லை. இங்கைக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலிருந்து இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்கள் அதற்குக் கொடுத்த ஒத்துழைப்புக்கள் குறிப்பாக தமிழ் தரப்பினர் கொடுத்த ஒத்துழைப்புகளை வரலாற்றுப் பதிவில் நாம் பார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நமது நாட்டில் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் இந்தியத் தமிழர் மலேயர் வேடுவர்கள் பறங்கியர் என்ற பல இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருந்த பூர்வீக குடிகளான இயக்கர் நாகர் என்போரைத் தவிர்ந்து ஏனைய அனைவரும் அன்னியர்கள் அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் அவர்கள் வந்த காலத்தைப் பொறுத்து நீண்ட குறுகிய கால இடைவெளிகள் இருக்கலாம். அல்லது இல்லாம் இருக்கலாம். அப்படி வந்தவர்கள் பல்வேறு சமய குழுக்களையும் சமூகக் குழுக்களையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம் இதனால் அவர்களிடையே சமய காலாச்சாரத் துறைகளில் பல்வேறு பட்ட வித்தியாசங்களும் பாரம்பரியங்களும் இருப்பதும் இயல்பானதே.
இப்படியான பல முரண்பாடான குழுக்களும் கலாச்சாரப் பாரம்பரியங்களும் உலகில் பல நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவதாக இன்று வளர்ச்சியடைந்த நாடுகளை அவதானிக்கும் போது இந்த பல்தேசிய இனங்களோ அல்லது மதங்களோ அந்த நாடுகளின் ஐக்கியத்துக்கு ஒரு கேடு என்ற நிலை தெரியவில்லை. ஐக்கியத்தின் ஊடக உலகை வெற்றி கொள்ள முடியும் என்று அவர்களது பணயம் போய் கொண்டிருக்கின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் நாம் மேற்சொன்ன இனங்களின் மதங்களின் ஆதிக்கம் காணப்படுகின்றன.
பொதுவாக தெற்கு சிங்களவர்களின் ஆதிக்கத்திலும் வடக்கு கிழக்கு தமிழர்களின் கட்டுப்பாட்டிலும் தென் கிழக்கு மற்றும் சிதறி வாழ்க்கின்ற ஒரு இனக்குழுவாக முஸ்லிம்களும் இருந்து வருகின்றார்கள். அதே போன்று மத்திய மலைநாட்டில் குறிப்பிடத்தக்க இந்திய வம்சாவலி மக்களின் ஆதிக்கம் காணப்படுகின்றது. இப்படி அவர்கள் வாழ்கின்ற இடங்களின் அவர்களின் பொருளாதார ஆதிக்கம் செல்வாக்குகள் மேலோங்கிக் காணப்படுவதும் இயல்பானதே. இதனை ஏனைய இனங்கள் குரோத மனப்பான்மையுடன் நோக்கின்ற போது அங்கு வன்முறைகள் அமைதியின்மைகள் தோன்றுவது தவிரிர்க்க முடியாதது.
ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்கள் அல்லது ஆட்சியாளர்கள் இப்படியான முரண்பாடுகள் தோன்றுகின்ற போது அதனை நடுநிலையான நின்று தீர்த்துவைத்து இன ஐக்கியத்தை போன வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பும் கடமையுமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு நேர் எதிராகத்தான் காரியங்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளும் அரசாங்கமும் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துக்கின்றன என்று அவர்கள் அங்கலாய்க்கின்றார்கள்.
சிறுபான்மை சமூகங்களின் அமைச்சர்கள் அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்கினிறவர்கள் கூட ஆளும் தரப்பு அல்லது பேரித்து சமூகங்களின் நலன்களை மையமாகக் கொண்டு தமது பணிகளைச் செய்து அதன் மூலம் தனிப்பட்ட நன்மைகளை அடைந்து கொள்ளும் நிலையும் இங்கு காணப்படுகின்றது.
அத்துடன் இப்படி அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்த்தப்படுகின்றவர்கள் பெரும் பாலும் இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக அல்லது அதிகாரித்தில் இருக்கின்ற பேரின ஆட்சியாளர்களுக்கு எதிராக தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் பண்ணி அந்த சமூகங்களின் வாக்குகளைக் கொள்யடித்து அதற்குப் பின்னர் ஆளும் தரப்புக்கு பல்டியடித்தவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். குறிப்பாக இந்த நிலை முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது. எனவே ஆளும் தரப்பில் சிறுபான்மை சமூகத்தில் இருக்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் சிறுபான்மை பிரதிநிகள் என்பதனை விட அவர்கள் ஆளும் தரப்பு முகவர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.
அரசியல் யாப்புக்குக்கு முற்றிலும் முரணான தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படுகின்ற போது அனேகமான சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் அவற்றுக்குக் கை கொடுக்கின்றன. இந்த நிலையில் வெளியில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் தாமும் முடியுமான மட்டும் ஆளும் தரப்புப் பங்காளிகளாக இணைந்து கொள்ள இன்று முண்டியத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஆளும் தரப்பில் போய் ஒட்டிக் கொண்டால் ஏதாவது பிழைத்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு இதற்கு அடிப்படையாக அமைக்கின்றது. எனவே சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைக் கொள்ளையடித்துக் கொண்டு நாடாளுமன்றம் நுழைக்கின்றவர்கள் இப்போதெல்லாம் அந்த சமூகங்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பதனை சமகாலத்தில் பார்க்க முடிகின்றது.
அதே போன்று நீதித்துறையின் நடவடிக்கைகளும் இன்று பரவலாக விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றது. இது அனைத்து சமூகங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொதுவாகவாக இருந்தாலும் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களின் விவகாரங்களில் இன்று வடக்குக் கிழக்கில் நடக்கின்ற அக்கிரமங்களின் போது நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை கூட கடும் போக்கு பேரின சமூகம் மதிப்பதற்குத் தயாராக இல்லாத நிலை காணப்படுக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையிலுள்ள ஆளுனர் காரியாலயத்துக்குப் புகுந்த தேரர்களும் கடும் போக்காளர்களும் நாட்டில் எந்த இடத்திலும் பௌத்த விகாரைகளைக் கட்ட நாம் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை இதற்கு முன்னரும் அப்படித்தான் கட்டி வந்திருக்கின்றோம் இப்போது மட்டும் என்ன அனுமதி என்று கோட்டு எனவே தான் நீதி மன்றம் விகாரைகளைக் கட்டுவதற்கு தடைவித்தக்கும் போது அப்பிரதேசங்களில் கடும் போக்கு பௌத்த தேரர்களும் குழுக்களும் அங்கு விகாரைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த நாட்டில் கடும் போக்கு பௌத்தர்கள் அரசியல் யாப்பையோ நீதி மன்றங்களையோ மதிக்காத ஒரு நிலை தொடர்கின்றது. அதற்குப் பல இடங்களில் சட்டத்தைப்போன வேண்டிய பாதுகாப்பு ஊழியர்களும் உடந்தையாக செயல்பட்டும் வருகின்றனர். அன்று அவர் ஆளுநருக்குப் பேசிய வார்த்தைகளை ஒரு முறை எண்ணிப் பாருங்கள் அதே வார்த்தையை ஒரு சிறுபான்மை மதகுரு பேசி இருந்தால் எப்படி இருந்திருக்கும். இவற்றை பேரின சட்டம் கண்டு கொள்ள மாட்டாது. இதுதான் இந்த நாட்டில் சிறுபான்மை நிலை.
ஆட்சியாளர்கள் அவ்வப்போது சிறுபான்மை சமூகங்களுக்கு உரிமைகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு (13) பதின்மூன்று பிளஸ் என்றும் தற்போதய ஜனாதிபதி ரணில் இந்த பிரச்சினையை இன்று தீர்க்கின்றேன். நாளை தீர்க்கின்றேன் என்று சொல்லி அழைத்த போதெல்லால் பெருந் தலைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டவர்கள் அங்குபோய் கடைசி நிமிடம் வரை ஏமாந்து இன்று மூக்குடைபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
வடக்குக் கிழக்கில் இருக்கின்ற தினைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றுமல்லாது தெற்கில் இருக்கின்ற அரச காரியாலங்கள் குறிப்பாக மாவட்டச் செயலாகங்களிலும் இந்த இனவாதப் போக்குக் காணப்படுகின்றது. 2022ல் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளாட்சி எல்லைகள் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தெற்க்கில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டதும், அது தொடர்பான கண்டனங்கள் எழுந்ததும் உங்கள் சிபார்சுகளைத் தாருங்கள் பார்க்கலாம் என்று எல்லை நிர்ணையக் குழு அறித்திருந்ததும் தெரிந்ததே. அந்த உள்ளூராட்சித் தேர்தல் வரை படம் இன்று காணமல் போனதால் இப்போது அது பற்றி எவரும் பேசுவதில்லை.
அதே போன்று வடக்குக் கிழக்கில் இருக்கின்ற மாவட்டச் செயலகங்களும் இன்று பேரின அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கி இருப்பது தெரிகின்றது. அதே போன்று வடக்கில் இருக்கின்ற வன இலாக தினைக்களம் தொல்பொருள் காரியலயங்கள், மகவலி அதிகார சபைக் காரியாலங்களில் என்பன கூட இன்று கடும் இன ஆக்கிரமிப்புக்கு இலக்காகி இருக்கின்றது. அதே நிலைதான் ஏனைய திணைக்களங்களிளும் என்றாலும் அது பிழையாகது.
அதே போன்று வடக்குக் கிழக்கில் இருக்கின்ற பல்கலைக்கழகங்கள் நிலமையும் அப்படித்தான் போய் கொண்டிருக்கின்றது. அதிகாரிகள் மாணவர்கள் தொகைகள் கூட அங்கிருக்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு அச்சுறுத்தல் என்ற அளவில் வந்து நிற்கின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் அங்கிருக்கின்ற பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் என்பன இந்த ஆக்கிரமிப்புக்கு இலக்காகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
மேலும் மகவலி அதிகார சபை வன விலங்கு இலாக திணைக்களம் தொல்லியல் திணைக்களம் என்பனவும் முற்றிலும் சிங்கள மயமாகி இருக்கின்றன. அதே போன்று சிறுபான்மை சமூகங்கள் எற்கெனவே பாவித்து வந்த விளைச்சல் நிலங்களில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு என்று ‘இளவம் காயைக் கட்டி’ ஜனாதிபதி ரணில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றார். அந்தத் தமிழ் தலைவர்களும் இந்தக் கதைகளை நம்பி பேச்சுவார்த்தைக்குப் போவதும் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவதும் உரிமை கோட்பதும் மேடை நாடகங்களாகத்தான். அதனைத்தான் இன்று சிறுபான்மை சமூகங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
உலக நீதி பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் இதுவரை எந்தக் காரியத்தையும் செய்ததாகத் தெரியவில்லை. இதன் பின்னரும் அங்கிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியது. இப்படித்தான் உலகில் பல நூற்றாண்டுகளில் பல பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படாமலும் அவற்றுக்கு நீதி கிடைக்காமலும் கிடப்பில் இருக்கின்றது. அது போன்றுதான் இலங்கை இனப்பிரச்சினையும் இருக்கின்றது. இந்தியா கூட இந்தப் பிரச்சினையைத் தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் காரணமாக் கண்டு கொள்ளாமால் கைவிட்டிருக்கின்றது என்பது நமது கருத்து. ஜனாதிபதி ரணில் இந்திய பணயம் செய்கின்ற போது இங்குள்ள அரசியல் தலைமைகள் மோடிக்கு டசன் கணக்கில் கடிதம் போட்டார்கள்.! அதில் ஆகப் போவது ஏதும் இல்லை என்று நாம் துவக்கத்திலே சொல்லி இருந்தோம்.
இன்று இலங்கையில் நடக்கின்ற நிகழ்வுகளைப் அவதானிக்கின்ற போது இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல பெரும்பான்மை சமூகங்களும் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் முறைப்பாடுகளைச் செய்ய வேண்டி வந்திருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க தன்னை சந்தித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கை அலுவலகத்தின் அபிவிருத்தி ஆலோசகர் எட்வார்டிடம் இலங்கைளில் நடந்து கொண்டிருக்கின்ற ஜனநாயக விரோத செயல்பாடுகள் தொடர்பாக நீண்ட பட்டியல் ஒன்றை விவரித்தார். இதிலிருந்து என்ன நாம் என்ன புரிந்து கொள்ள முடிகின்றது?
நிச்சயமாக அடுத்த வருடத்தில் நடக்க இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்து நடக்கின்ற பொதுத் தேர்தல் என்பன மிகப் பெரிய ஆபத்தில் இருக்கின்றன. எனவேதான் அமைச்சரவை அங்கிகரித்து நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் வழங்கினால் எந்த நீதி மன்றத்தின் முன்பும் அந்த பிரேரணைக்கு எதிராக எந்த நியாயயம் கேட்க முடியாது என்ற ஒன்றை ஜனாதிபதி அறிமுகப் படுத்த முனைகின்றார் அதற்கு சபாநாயகரும் பச்சைக் கொடி காட்டி இருக்கின்றார். தேவையான பெரும்பான்மையை மொட்டுக் கட்சியில் இருந்தும் அதற்கு வெளியிலும் பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் வாக்குகளை வாங்கிக் கொள்ள அவர்களுக்கு இன்றும் வாய்ப்க்கள் பிரகாசமாகத்தான் இருக்கின்றது என்பது எமது கருத்து. என்ன நடக்கின்றது பொறுத்திருந்து பார்ப்போம்.